தியேட்டர் முன்பதிவில் கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி!

கோகோ மாக்கோ, இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் வகையில், காதல்,  நகைச்சுவை மற்றும் இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக Crazy Musical Romantic Road Trip Comedy இருக்கும் என்கிறார்  இயக்குநர் ராம்காந்த்.  இவர் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கவில்லை என்கிற போதிலும்,

எழுத்து -இயக்கத்துடன்  இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு ஆகிய பணிகளையும் செய்திருக்கிறார்.

நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார்.இவர்  துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகியாக புதுமுகம் தனுஷாவுடன் தரமணி படத்தில் ஆண்ட் ரியாவுடன் நடித்த சாரா ஜார்ஜும் நடிக்க இவர்களுடன் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரா, டெல்லி கணேஷ், அஜய் ரத்னம்,  சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.

சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்ய, வினோத் ஸ்ரீதர் எடிட்டிங்கைக் கையாண்டிருக்கிறார்.

இன்ஃபோ புளுட்டோ மீடியா வொர்க்ஸ் InfoPluto Media Works தயாரிக்க, ரூஃப் ஸ்டுடியோஸில் Roof Studios படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள் நடந்திருக்கின்றன.

சென்னை, நுங்கம்பாக்கம் பிரிவியூ திரையரங்கில் இந்தப்படத்தின் டிரையலர் வெளியீட்டு விழா எளிமையாக நடைபெறத் திட்டமிட்டிருந்த நிலையில், அருகிலேயே தனது அலுவலகத்தில் இருந்த கே.பாக்யராஜ் இந்த இளைஞர் பட்டாளத்தின் வித்தியாசமான முயற்சியைக் கேள்விப்பட்டு,  எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் உடனடியாக  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

“ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை கோக்கு மாக்காக இளமையாக யோசித்து காட்சிக்கு 3 முறை ரசிகர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம்…” என்கிற இயக்குநர் அருண்காந்த் உள்ளிட்ட படத்தில் பங்குபெற்ற அனைவரும் கோயமுத்தூர்க்காரர்கள் என்பது கூடுதல் சிறப்பு.,

கோயமுத்தூர் குசும்பு என்று சொல்வார்களே அதைத்தான் கோகோ மாக்கோ என்று  புதுபெயரிட்டிருக்கிறார்கள் போலும். கோக்கோ மாக்கோ படத்திற்கான வசனங்களை முன்னரே எழுதாமல், காட்சிக்கும் அது நடக்கும் இடத்திற்கும் அந்தக் காட்சியில் பங்குபெறும் கதாபாத்திரங்களுக்கும்   ஏற்றவாறு உடனுக்குடன் எழுதியிருக்கிறார் இயக்குநர் அருண்காந்த்.

12 நாட்களில் முழுப்படத்தை முடித்திருந்தாலும்,  பொழுதுபோக்குடன் ஒரு அழுத்தமான கதையும் இருக்கிறது என்கிறார்  இயக்குநர்.

“புளூட்டோ என்கிற ஒளிப்பதிவாளராக இந்த படத்தில் சாம்ஸின் பார்வையில் இந்தக்கதை நடப்பதாகக் காட்டியிருக்கிறோம் என்றார் கோகோ மாக்கோ ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர்.

இந்தப்படத்தின் எடிட்டராக மட்டுமல்ல, இணைதயாரிப்பாளராகவும் நடிகராகவும் பணிபுரிந்திருக்கும் வினோத்,  ” படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே எடுத்திருக்கிறோம். எடிட்டிங்கில் அதிகம் தூக்கியெறியப்படாத படம் அதாவது zero wastage film  இதுவாகத் தான் இருக்கும்..” என்கிறார்

” எனது படங்களில் முதன்முறையாக முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசி நடித்திருக்கிறேன். ரசிகர்களுக்கு நிச்சயமாக புது அனுபவமாக இருக்கும்… செய்யிற வேலையைத் திருப்தியாகச் செய்யவேண்டும் என்று துடிக்கும் இளைஞர் பட்டாளத்தில் நானும் இருப்பதே பெருமையாக நினைக்கிறேன்..”  என்றார் நகைச்சுவை நடிகர் சாம்ஸ்

முற்றிலும் புதியவர்களை வைத்து, புதியவர்களால் உருவாக்கப்பட்ட கோகோ மாக்கோவை விநியோகஸ்தர்களோ திரையரங்கு உரிமையாளர்களோ முன்வராத நிலையில், படத்தின் இயக்குநர் டிக்கெட் முன்பதிவுக்கான பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்திருக்கிறார். www.arunkanth.in என்கிற இணையத்தில் சென்று, உங்களது அருகாமையிலுள்ள திரையரங்கில்  டிக்கெட்டுகளை முன்பதவு செய்யலாம்.

பிப்ரவரி 14, 2019 படம் குறித்த நாளில் வெளியாகவில்லை என்றால், முழுப்பணமும் திரும்பி வந்துவிடும். அல்லது, வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று விரும்பினால், டிக்கெட் விலையான 150 ரூபாயில் 100ரூ திரும்பப்பெற்றுக் கொண்டு 50 ரூபாயில் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம். இதில் முன்பதிவு செய்ய கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பு. நேற்று அறிமுகமான 24 மணி நேரத்தில் 5000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடக்கது.

படக்குழுவினரைப் பாராட்டிப் பேசிய கே.பாக்யராஜ், ” ஒவ்வொருவரும் படத்தை மிகவும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார்கள். எனது படங்களிலும் படப்பிடிப்புத்தளத்தில் தான் வசனம் எழுதுவேன் என்றாலும், கதை உருவான போதே வசனங்களை மனதில் ஓட்டிப்பார்த்துவிடுவேன்.  நானும் யாரையுமே தெரியாமல் தான் சென்னைக்கு வந்தேன். நீங்களாவது  திரை ஆக்கம் தொடர்பாக நிறையக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறீர்கள்..

இன்று யூடியூபிலேயே சினிமா கற்றுக் கொள்ளலாம். இன்றைய பெரிய நாயகர்கள் சம்பளம் வாங்காமல், பங்குதாரர்களாக இணைந்தால் சுலபமாகப் படம் எடுத்துவிடலாம். வணிகரீதியில் எனக்கு அனுபவம் இல்லை. எனினும், டிக்கெட் முன்பதிவு சம்பந்தமான இளைஞர்களின் இந்தப் புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்..” என்றார்.

எழுத்தாளர் சங்கத்தில் ராஜினாமா செய்ததைத் திரும்பப் பெற்றிருப்பதுடன், தான் ராஜினாமாவை அடுத்து ராஜினாமா செய்த செயற்குழு உறுப்பினர்களின் ராஜினாமாவையும் திரும்பப்பெற வைத்து, அனைவரும் சேர்ந்து உத்வேகத்துடன் செயல்பட தயாராகிவிட்டார் கே.பாக்யராஜ் என்பது கூடுதல் தகவல்