சேரன் சாருடன் தான் அதிக காட்சிகள் நடித்திருக்கிறேன் – நடிகர் கௌதம் கார்த்திக்.

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”.  இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தநிலையில் இதன்  இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது…

‘இந்தப்படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். வரவர தமிழ் படங்களின் பெயர்களே பிடிக்கவில்லை. ஆனந்தம் விளையாடும் வீடு தலைப்பை கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நந்தா பெரியசாமி அற்புதமான கதாசிரியன். நல்ல இயக்குநன். கார்த்திக்கை இயக்கும்போது அவனுக்கு இப்படி ஒரு பையன் வருவான் என நினைக்கவில்லை. அவனோடு அமர்ந்திருப்பது மகிழ்ச்சி. ராஜசேகரை வில்லனாக அறிமுகப்படுத்தினேன் அவர் மகள் இப்போது நடிக்கிறார்.  அவர்களின் பெற்றோரோடு இருந்து விட்டு, இன்று அவர்களுடன் இருக்கிறேன் மகிழ்ச்சி. ரங்கநாதன் நல்ல தயாரிப்பாளர். இப்படி ஒரு தலைப்பில், கூட்டு குடும்ப படம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தமிழ் படம், அற்புதமான படம். இந்தப்படம் பார்க்கும் போது நம் கண் கலங்கும்,  எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் சேரன் பேசியதாவது…

சித்துகுமார் இப்போது தான் வளர்கிறார். இந்தப்பாடலை நந்தா போட்டு காட்டிய பிறகு, சித்துவை பார்த்த போது இவரா இசையமைத்தார் என தோன்றியது நம்பவே முடியவில்லை. அவர் நன்றாக வர வேண்டும். சினேகன் நல்ல கவிஞர். தேசிய விருது கிடைக்கும் என்கிறார்கள் வாழ்த்துக்கள். இந்த இருவருக்கு தான் இந்த விழா. தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் இந்தப்படம் தான் எங்களுக்கு கொரோனா காலத்தில், மூன்று மாதம் சாப்பாடு போட்டது, அந்த தர்மமே இந்தப்படத்தை வெல்ல வைக்கும். எதையும் சரியாக திட்டமிட்டு செய்கிறார். நந்தா பெரியசாமி என்ற நண்பன் ஒருவனுக்காக மட்டுமே செய்த படம் தான் இது. அவரது வெற்றிக்கு ஒரு அனிலாக இருக்க வேண்டுமென்று தான் இந்தப்படத்தில் நடித்தேன். நல்ல சிந்தனையாளன் தோற்க கூடாது. இந்தப்படத்திற்கு பிறகு அவர் பெரிய வெற்றி பெறுவார். நிறைய கதைகள் வைத்துள்ளார். அவரை விட்டு விடாதீர்கள். அவர் பின்னால் நான் நிற்பேன். இந்தப்படத்தில் எங்கள் குடும்பம் மொத்தமாக இங்கு இருக்கிறது. எனக்கு அண்ணன் தம்பி இல்லை அதை இந்தபடத்தில் வாழ்ந்து அனுபவித்தேன்.  அவ்வளவு அழகாக எல்லோரும் கேர்க்டர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். கௌதம் கார்த்திக் அத்தனை எளிமையாக இருக்கிறார் அவரது குரல் அப்படியே கார்த்திக் சார் போலவே இருக்கிறது. ஷ்வாத்மிகா நம்ம வீட்டு பிள்ளை ராஜசேகரின் மகள் அருமையாக நடித்திருக்கிறார். இந்தப்படம் அற்புதமாக வந்திருக்கிறது பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகி ஷிவத்மிகா  ராஜசேகர் பேசியதாவது

இது எனது முதல் படம், எனக்கு தமிழ் நன்றாகவே வரும், இங்கு வந்தவுடன் பயம் வந்துவிட்டது. இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த நந்தா சார், ரங்கநாதன் சாருக்கு நன்றி. சேரன் சாருடன் முதல் படத்திலேயே நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் அனைவரும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்கள் படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி

நடிகர் கௌதம் கார்த்திக் பேசியதாவது…

இந்த மேடையில் ஜாம்பவான்கள் உடன் இருப்பது பெருமையாக இருக்கிறது. எல்லொரைப்பற்றி அனைவரும் பேசி விட்டார்கள். பைட்டர் தினேஷ் இதில் அழகாக வேலை பார்த்துள்ளார் அவருக்கு நன்றி. ராதிகா மாஸ்டர், தினேஷ் மாஸ்டர் இருவருக்கும் நன்றி. நிறைய குட்டீஸ் இப்படத்தில் அழகாக நடித்துள்ளார்கள். ஷ்வாத்மிகா இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். சேரன் சாருடன் தான் அதிக காட்சிகள் நடித்திருக்கிறேன். நிறைய விசயங்கள் சொல்லிக்கொடுத்தார். அவருக்கு நன்றி. சித்துக்குமார்  பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகான வரிகள் தந்த சினேகனுக்கு நன்றி. இந்தப்படம் அழகாக வந்துள்ளது. பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் எல்லோருக்கும் நன்றி.

இந்நிகழ்வில் இயக்குநர் நந்தா பெரியசாமி கூறியதாவது…

தயாரிப்பாளர் ரங்கநாதன் படம் ஆரம்பிக்கும் போது ஒன்று சொன்னார். 5000 நஷ்டம் வந்தால் கூட தாங்க முடியாது, பார்த்து பண்ணி தாருங்கள் என்றார். நானும் மிடில் கிளாஸ் தான் சார் என்று அவருக்கு கொடுத்த வார்த்தையை நிறைவேற்றி கொடுத்தேன். அதற்கு உதவிய கலைஞர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி. ஒரு நல்ல படத்தை செய்திருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி.