மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளின் வரிசையில் செயங்கொண்டார்

 

தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்.

இதுவரை தொல்காப்பியர் – திருவள்ளுவர் – இளங்கோவடிகள் – கம்பர் – அப்பர் – ஆண்டாள் – திருமூலர் –– வள்ளலார் – உ.வே.சாமிநாதையர் – பாரதியார் – பாரதிதாசன் – கலைஞர் – மறைமலையடிகள் – புதுமைப்பித்தன் –- கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – ஜெயகாந்தன் என்று 17 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார். 18ஆம் படைப்பாகக் கலிங்கத்துப்பரணி இயற்றிய செயங்கொண்டார் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றுகிறார். ஜூலை 12 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராசர் அரங்கத்தில் விழா நடைபெறுகிறது. தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். மரபின் மைந்தன் முத்தையா முன்னிலை வகிக்கிறார். செயங்கொண்டார் திருவுருவப் படத்திற்குத் தமிழன்பர்கள் மலரஞ்சலி செய்கிறார்கள்.

ஜூலை 13 கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளாகும். தன் ஒவ்வொரு பிறந்தாளிலும் சிறந்த கவிஞர் ஒருவருக்குக் ‘கவிஞர்கள் திருநாள்’ விருது வழங்கி வருகிறார் கவிஞர் வைரமுத்து. இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விருது மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கப்படுகிறது. 25,000 ரூபாய் ரொக்கமும், ஒரு பட்டயமும் சால்வையும் கொண்டது அந்த விருது.

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பொன்மணி மாளிகையில் ஜூலை 13ஆம் தேதி காலை 10மணிக்குப் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில் தமிழன்பர்களின் வாழ்த்துக்களைக் கவிஞர் வைரமுத்து ஏற்றுக்கொண்டு விருது வழங்குகிறார். முன்னதாக காலை 7 மணிக்குக் கடற்கரையில் உள்ள தமிழறிஞர்கள் சிலைகளுக்கும் மற்றும் தியாகராயர் நகரில் உள்ள கண்ணதாசன் சிலைக்கும் மலரஞ்சலி செலுத்துகிறார்.

வெற்றித்தமிழர் பேரவையைச் சேர்ந்த வி.பி.குமார், சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன், ராஜசேகர், காதர்மைதீன், தமிழரசு, வெங்கடேஷ், செல்லத்துரை, பானுமதி, கலைமதி ஆனந்த், ராஜபாளையம் ராமகிருஷ்ணன், மாந்துறை ஜெயராமன், சண்முகம் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.