ஏலியன் பிக்சர்ஸ் சார்பில், கணேஷ் சந்திரசேகர் கதை எழுதி ,இயக்கி, தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவருடன் ரஷ்ய நடிகை கெசன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரான்சிலிருக்கும் கெசன்யா, பாண்டிச்சேரியிலிருக்கும் (ancestor) முன்னோர்கள் வசித்த பங்களாவிற்கு வருகிறார். அங்கு ஒரு பாதாள அறை இருக்கிறது. அந்த அறையில் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக பயன் படுத்தப்படாமல் இருக்கும் சில விநோதமான பொருட்கள் இருக்கிறது. அதை பார்க்கும் கெசன்யாவுக்கு பல வித்தியாசமான, விநோதமான ஒரு அமானுஷ்யமான உணர்வு ஏற்படுகிறது. இதை பற்றி தெரிந்து கொள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கணேஷ் சந்திரசேகரின் உதவியை நாடுகிறார். அவரது ஆராய்ச்சியில் கிடைத்த ரகசிய குறியீடுகளை ஆராயும் அவர் ஒரு மதிப்பு மிகுந்த புதையல் இருப்பதாக கெசன்யாவிடம் தெரிவிக்கிறார். இருவரும் சேர்ந்து ஒரு குழுவாக புதயலைத் தேடி செல்கிறார்கள். புதையலை கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பது தான் செஞ்சி படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
கணேஷ் சந்திரசேகர், சினிமாவின் மீது இருக்கும் ஈர்ப்பால் செஞ்சி படத்தினை தயாரித்து, பொறுப்புடன் இயக்கியிருக்கிறார். என்பது தெளிவாக இருக்கிறது. மிகப்பெரிய இயக்குனர்களாலேயே டாஸ்மாக், குடிப்பது போன்ற காட்சிகள் தவிர்த்து எடுக்கமுடியாத திறனற்ற நிலையில், இவர் அந்த காட்சிகள் இடம்பெற வாய்ப்புகள் இருந்த போதிலும் தவிர்த்துள்ளார். அதற்காக அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
செஞ்சியில் ஆரம்பிக்கும் புதையல் வேட்டை செஞ்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி , கல்லார் என பயணப்படும் இடங்களை பற்றிய வரலாற்று குறிப்புகளை கூறுவது சிறப்பு! ஒருபக்கம் கணேஷ் சந்திரசேகர் ,கெசன்யா குழுவினர், தீவிரவாத குழுவினர், சுட்டிச்சிறுவர் குழுவினர் என மூன்று குழுவினரும் க்ளைமாக்சில் இணைவது திரைக்கதையின் சிறப்பு. 5 கேட்டை நட்சத்திரக்காரர்கள், 5 பேர் பலி, என முடிந்த அளவு கதையினை சொல்லும் விதம் பரவாயில்லை!
தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இயக்குநர் கணேஷ் சந்திரசேகர் நடித்துள்ளார். பரவாயில்லை! முடிந்தவரை கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். புதையல் குறித்து அது யாருக்கு சொந்தமானது. என சிறுவர்களுக்கு அதை பற்றி எடுத்து சொல்லும் போது இயக்குனரின் சமூக பொறுப்பு தெரிகிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து வருபவராக நடித்திருக்கும் ரஷ்ய நடிகை கெசன்யாவும் பரவாயில்லை!
இவர்களை போலவே படத்தில் நடித்துள்ளனர், சுட்டித்தனம் செய்யும் சிறுவர்களான மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன், மாஸ்டர் தர்சன் குமார், மாஸ்டர் விதேஷ் ஆனந்த், மாஸ்டர் சஞ்சய், பேபி தீக்ஷன்யா ஆகியோர்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஜிண்டேவுக்குப் பாராட்டுக்கள். வெளிப்புறப் படபிடிப்பினையும், அரங்கத்திற்குள் நடந்த படபிடிப்பினையும் சிறப்பாகவே படம்பிடித்துள்ளார்.
எல்.வி.முத்து கணேஷின் பின்னணி இசையும் பரவாயில்லை.
எடிட்டர் சற்றே கவனத்துடன் இருந்து, நீளமாக செல்லும் படத்திற்கு தேவையற்ற சிறுவர்களின் காட்சி, தீவிரவாதிகள் சம்பந்தபட்ட காட்சிகளை குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘செஞ்சி’ சிறுவர்களுக்கான ஒரு படமாக இருக்கிறது.
பாராட்டும் வகையிலான அமெச்சூர் அட்டெம்ப்ட்!