கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்கும் படம்”பெட்டிக்கடை”

‘லஷ்மி கிரியேசன்ஸ்’ பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு ” பெட்டிக்கடை ” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான  புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதா நாயகியாக நடிக்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் இசக்கிகார்வண்ணன்.

படம் பற்றி இயக்குனர் இசக்கிகார்வண்ணன் கூறியாதாவது..

‘நாம் ஒவ்வொரு தெருவிலும் பார்க்கும் பெட்டிக்கடைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்பட வைக்கும் காரணிகள்…

ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவர் எந்த சாதிக்காரர்களாக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அன்பாக ” அண்ணாச்சி , ” பாய்” , “செட்டியார்” என்று எதோ ஒன்றை சொல்லி அழைப்போம். அந்த தெருவில் நடக்கும்  நல்லது கெட்டதுகளுக்கு  அந்த கடைக்காரரும் ஒரு அங்கமாக இருப்பார். வியாபாரி வாடிக்கையாளர் என்பதை மீறி ஒரு உறவு சங்கிலி இருக்கும். இந்த சங்கிலியை அறுத்து எறிந்தது கார்ப்பரேட் முதலாளிகள்.

சாதாரண பெட்டிக்கடையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் குறைந்த அளவு கொள்முதல் செய்து உடனே விற்று விடுவதால் யாருடைய சுகாதாரமும் பாதிப்படைவதில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்த மாக கொள்முதல் செய்து மெதுவாக விற்பனை செய்வதால் சுகாதார சீர் கேடு. இது புரியாமல் ஆடம்பர மோகம் கொண்டவர்களால் எப்படியெல்லாம் பெட்டிக்கடை உறவு சங்கிலி அறுபட்டது என்பதையும் கார்ப்பரேட்  அட்டூழியத்தையும் தோலுரித்து காட்டும் படமே பெட்டிக்கடை.

பெட்டிக்கடை படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடை பெற உள்ளது.’ என்றார்.