B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அறிமுக இயக்குநர்ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவிசா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற் குஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார்.
விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில்,
‘சத்தீஸ்கர் நிலத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால் இங்கு இந்நிகழ்ச்சிக்கு வர தாமதமானது. இப்படத்தின் பாடல் ஒன்றை மேடையிலேயே கேட்டேன். படம் எதைப் பற்றி வலியுறுத்துகிறது என்பதனை அண்ணன் ராஜனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இந்தகால சூழலில் சமூக பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒரு திரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக்குநர் முருகசாமிக்கும், தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் இருப்பதை பாராட்டுகிறேன். நெஞ்சார வாழ்த்துகிறேன்.
வணிக நோக்கில் திரைப்படங்களை தயாரிக்க வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும், அதில் லாபம் பெற வேண்டும் என்று எண்ணாமல் சமூகப் பொறுப்புணர்வோடு மக்களுக்கு வழிகாட்ட வேண்டும், இந்த குடியின் துன்பத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும், விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் இளைய தலைமுறையினர் இந்த படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்பதை விட பெருமை அளிக்கிறது. இந்த குழுவினரை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர்களை ஆரத்தழுவி என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றினை நாங்கள் நடத்தினோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அது பேசுபொருளாகவும் மாறியது. கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.
அண்ணன் ராஜன் பேசும் போது, ‘தேசிய அளவில் மதுவை ஒழிக்க வேண்டும்’ என்றும் ,இது தொடர்பாக திருமாவளவன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அவர் பேசியிருக்ககூடும் என்றும் குறிப்பிட்டார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. நான் மக்களவையில் இதுகுறித்து பேசி இருக்கிறேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பேசிய போது குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது தொடர்பாக அரசியல் ரீதியான விமர்சனத்தை முன்வைத்தார். நாம் அதை கடந்து சிந்திக்கிறோம். தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள நம் தேசத்து மக்கள் குடியினால் பாதிக்கப்படக் கூடாது என்ற பரந்துபட்ட பார்வை நமக்கு உண்டு. ஆகவே மது ஒழிப்பு கொள்கையை தேசிய கொள்கையாக இந்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
மகாத்மா காந்தியை நாம் தேசிய தலைவராக ஏற்றுக் கொள்கிறோம். அவருடைய திருவுருவ படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கிறோம். அவருடைய கொள்கைகளில் முக்கியமானது மது விலக்கு. மகாத்மாவை தேசத்தந்தை என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் அவருடைய உயிர் மூச்சான கொள்கையான மதுவிலக்கை பொருட்படுத்துவதில்லையே?
இதனை மாநிலங்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல ஏனைய மாநில அரசுகளும் இதனை தங்களுடைய வருவாய்க்கான வழியாகத் தான் இது தொடர்பான கவலை பல பத்தாண்டுகளாக எனக்கு இருக்கிறது. இதை பல மேடைகளில் பேசி இருக்கிறேன். பல மாநாடுகளில் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.
இன்றைக்கு மது மட்டுமல்ல கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களும் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறன. நகர்ப்புறங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்த போதைப் பொருள்கள்..தற்போது கிராமங்களிலும் ஊடுருவி இருக்கிறது. இதற்காக ஒரு மாநாடு நடத்தி, அதில் இந்தியா முழுவதும் மது ஒழிப்பு தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். இது விமர்சனத்திற்கு உள்ளானது. அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்பட வேண்டும் போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லை ஏராளமான இளைய தலைமுறையினரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை பாழாக்கி கொள்கிறார்கள். குடும்பம் நடத்துவதற்கான ஆளுமையையே இழந்து விடுகிறார்கள். ஏதோ பெயரளவில் தாம்பத்திய உறவை கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களை பராமரிக்கவும்… பாதுகாக்கவும்,.படிக்க வைக்கவும், எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கவும், பொறுப்புணர்வு கொண்ட ஆளுமையாக அவர்கள் இல்லை. நிற்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதிகாலையில் இருந்து படுக்கைக்கு செல்லும் வரை போதையில் மிதக்கிறார்கள். அவ்வளவு குடும்ப பாரத்தையும் மனைவி சுமக்கிறாள். அது எவ்வளவு கொடிய துயரம் என்பதை களத்தில் நேரடியாக சென்று சந்தித்தால் தான் உணர முடியும். இந்த நாட்டை பீடித்திருக்கின்ற பேரவலங்களுள் இதுவும் ஒன்று.
இந்தப் படத்தில் இடம் பெற்ற முதல் பாட்டை கேட்டேன். இந்த அவலங்களை எல்லாம் வரிகளாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடல் நம் நெஞ்சை ஆழமாக தொடுகிறது. மிக மிக இன்றியமையாத ஒரு பாடல். எல்லா கிராமங்களிலும் கட்டாயமாக ஒலிக்க வேண்டிய பாடல். எல்லோரும் தங்களுடைய அலைபேசியில் வைத்திருக்க வேண்டிய பாடல். விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பாடல். இசையும் மிகச் சிறப்பாக இருக்கிறது. வேட்டவலம் த. ராமமூர்த்தி இப்பாடலை எழுதியிருக்கிறார். அவருக்கும் என்பாராட்டுக்கள்.இந்த விஷயத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதில் அரசியலை நுழைத்து மதிப்பீடு செய்ய வேண்டிய தில்லை.
தமிழக முதலமைச்சரிடத்தில் இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேசும் போது அவருக்கும் இது தொடர்பான கவலை இருக்கிறது. ஆனால் இது ஒரு சமூக கட்டமைப்பு, சிஸ்டம். அரசு அரசு சார்ந்த கட்டமைப்புகள் சில தருணங்களில் நம்முடைய விருப்பங்களை மீறி இயங்கக் கூடிய வையாக அமைந்து விடுகின்றன. மக்களிடத்தில் பரந்துபட்ட அளவில் இதற்கான விழிப்புணர்வு தேவை. இன்று மதக் கலவரங்களும், வன்கொடுமைகளும் அதிகரிப்பதன் பின்னணியில் மதுவும் ஒரு காரணம் என்பதை நாம் காணமுடிகிறது.
‘குயிலி’ படத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கருதாமல் விழிப்புணர்வை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும். சில இளைஞர்களையாவது இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். துயரத்திற்கு ஆளாகாமல் தடுக்க முடியும். இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும். மதுக்கடைகளை மூடும் வரை ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதை மறுவாழ்வு மையம் இடம் பெற வேண்டும், இது என்னுடைய கோரிக்கை. இதனை தமிழக முதலமைச்சரிடமும் தெரிவித்து இருக்கிறேன். அனைத்து மருத்துவமனைகளிலும் உளவியல் ஆலோசனை மையம் இடம் பெற வேண்டும். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.
மதுப்பழக்கம் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. சமூகத்தையே பாதிக்கிறது. எனவே மது மற்றும் போதைப் பொருள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிறகு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.”என்றார்.