ஒயிட் ஸ்கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் V.ராஜா தயாரிப்பில் கமல் ஜி இயக்கியுள்ள திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’.இப்படத்தில் அறிமுக நாயகன் அறிவழகன் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் ஹேமா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார். வில்லனாக வேலாராமமூர்த்தி நடித்துள்ளார் ரசாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.பாடல்களை நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன் வெளியிட்டார்.தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பெற்றுக் கொண்டார்.
படத்தின் இயக்குநர் கமல் ஜி பேசும்போது,
‘இந்த விழாவுக்கு வந்து பெருமைப்படுத்திய அனைத்து ஜாம்பவான்களுக்கும் நன்றி.இந்த படம் முழுக்க முழுக்க நகரம் சார்ந்த நட்பைப் பற்றிப் பேசுகிற படம்.நட்பு மற்றும் காதலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
நகரத்து நட்புக்கும் நெல்லை மாதிரியான பகுதியின் நட்புக்கும் என்ன மாதிரியான வேறுபாடு இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறது படம்.நாயகன் அறிவழகன்சிறப்பாக நடித்துள்ளார்.நாயகி ஹேமா விடியற்காலை 5 மணி வரைக்கும் நடித்துக் கொடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார் ” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் பேசும்போது,
‘நெல்லை பாய்ஸ்’ திரைப்படத்தின் கதை எனக்குத் தெரியாது. முழுமையாக நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை, தெரியவில்லை. ஆனால் அந்தப் படத்தலைப்பின் எழுத்தைப் பார்த்ததும் நான் கேட்டேன், என்ன இந்த நெல்லையில் நிறைய அரிவாள்கள் இருக்கின்றன, கொடுவாள்கள் இருக்கின்றன.இந்த எழுத்தின் வடிவமைப்பிலேயே அரிவாள் இருக்கிறதே என்று கேட்டேன்.
நெல்லை என்றாலே அரிவாள் என்று சித்தரிக்கவேண்டும் என்று இல்லை. திரைப்படங்களில் எனக்கு நெடுநாளாக உள்ள ஒரு பெரிய கேள்வி. வன்முறைகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா? என்ற கேள்வி. வன்முறைகளுக்கு முன்னுரிமை அல்லது முக்கியத்துவம் தராமல் திரைப்படங்களை எடுக்க முடியாதா என்ற கேள்வி.
திரைப்படங்களில் காட்டுவதைப் போல் உள்ள படியே மக்களிடம் வன்முறை கலாசாரம் இருக்கிறதா என்ற கேள்வி. இயக்குநர்கள் மாற்றிச் சிந்திக்கவேண்டும். ஒரு கதாநாயகன் என்றால் அவன் பத்து பேரை ஒரே நேரத்தில் அடித்து துரத்துவான்.பெரிய அளவில் தாதாயிசம் அல்லது ரவுடியிசம் இருந்தால்தான் அவன் ஹீரோ என்று கட்டாயமாக வலிந்து அதைக் காட்டித்தான் ஆகவேண்டுமா என்ற கேள்வி எனக்கு உண்டு. நெல்லையில் எவ்வளவோ பேர் கல்விமான்கள், தொழிலதிபர்கள்,ஆய்வாளர்கள் இருந்திருக்கிறார்கள். நீதிபதிகள் தோன்றி இருக்கிறார்கள். இன்னும் பல் வேறு சிறப்புக்குரியவர்கள் இருக்கிறார்கள்.
தென்மாவட்டம் என்றாலே அரிவாள் கலாசாரம், நெல்லை என்றாலே அரிவாள் கலாசாரம் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிற போக்கு தொடர்ந்து இருக்கிறதே என்ற கவலை எனக்கு உண்டு.
இந்தப் படத்தை வைத்து நான் பேசுவதாகக் கருத வேண்டாம். பொதுவாகப் பேசுகிறேன். அதை நாம் நியாயப்படுத்துகிறோம், ‘காதலும் வீரமும் தமிழர் பண்பாடு ‘என்று. வீரம் என்பது வேறு. வன்முறை என்பது வேறு.
நான் மதுரையிலே 90களின் தொடக்கத்தில் இந்த இயக்கப் பணிகளை ஆற்றியபோது, தோழர்களிடம் பேசுகிறபோது, வீரம் என்றால் அரிவாளைத் தூக்குவது என்று பொருள் அல்ல.‘நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம் ‘என்று ஒரு முழக்கமே நான் எழுதினேன். ‘நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம் ;நெருப்பலைக்குள் வீழ்ந்தபோதும் அடிமை நெறி மீறிப்பாய்தல் தீரம் ‘என்று, வீரத்திற்கும் தீரத்திற்கும் நான் ஒரு முழக்கம் எழுதினேன்.
வீரம் ,தீரம் என்பது முரட்டுத்தனமாக செய்யப் படுவது என்று பொருள் அல்ல. அரிவாளைத் தூக்கி நோஞ்சான்களை வெட்டுவதுதான் வீரம் என்று பொருள் ஆகாது. ஆயுதம் தாங்கிய கும்பல் நிராயுதபாணிகளை வெட்டுவது வீரம் ஆகாது. பத்து பேர் சேர்ந்து பேருந்தில் வருகின்ற நிராயுதவாணிகளைச் சுற்றி வளைத்து அவர்களை வெட்டி வீழ்த்துவது வீரம் என்ற ஒரு பார்வை இங்கே இருக்கிறது. அப்படி அல்ல. நான் ஏற்றுக்கொண்ட, உள்வாங்கிக்கொண்ட கொள்கைக்கு நெருக்கடி வருகிறபோது அரசு தரப்பிலிருந்து வந்தாலும், பிற தரப்பிலிருந்து வந்தாலும் , காவல்துறை தந்தாலும் அல்லது மற்றவர்கள் தந்தாலும் அந்தக் கொள்கையிலிருந்து ஒருபோதும் நான் வழுவமாட்டேன்; நழுவமாட்டேன்; சிறையில் அடைத்தாலும் அதிலிருந்து பின்வாங்கமாட்டேன்; துப்பாக்கிச் சூட்டை நடத்தினாலும் அதிலிருந்து பின்வாங்கமாட்டேன் என்று எதிர்த்து நிற்பதுதான் உண்மையான வீரம் . ஆனால் நாம் இங்கே வன்முறையை வீரமாகச் சித்தரிக்கிறோம்.

ரவுடியிசம் என்பது வேறு; ஹீரோயிசம் என்பது வேறு.ஆனால் இங்கே ரவுடியிசம் தான் ஹீரோயிசமாக மீண்டும் மீண்டும் உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. ‘புரட்சி என்பது வேறு ; வன்முறை என்பது வேறு’ என்று நான் ஒரு பாடலை ஒரு திரைப்படத்திற்காக எழுதிக்கொடுத்தேன். அந்தப் பாடலும் திரைப்படத்தில் வந்தது.புரட்சி என்பது கட்டாயம் ரத்தம் சிந்தித்தான் ஆக வேண்டும் என்று இல்லை. புரட்சியாளர் அம்பேத்கர் செய்தது ஆயுதம் இல்லாத புரட்சி. அவர் எந்த இடத்திலும் ஆயுதம் ஏந்துவோம் என்று சொல்லவில்லை . ஆயுதம் ஏந்துவதற்கான எந்தச் சூழலையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால் இன்றைக்கு இந்திய அரசியலில் விவாதங்களின் மையப் பொருளாய் இருப்பது அம்பேத்கரின் சிந்தனைகள் தான் .
அரசமைப்பு சட்டம் தான் இன்று இந்திய அரசியலின் மையப் பொருளாய் இருப்பது. நாம் இங்கே சமூக நீதி என்று பேசுகிறோம், அது அரசியல அமைப்பு சட்டத்தின் கோட்பாடுதான். இது மட்டுமல்ல சுதந்தரம், சமத்துவம்,மதச்சார்பின்மை, எல்லாமே அரசியலமைப்புச் சட்டம் முன்மொழிகிற கோட்பாடுகள்தான்.வன்முறையைக் கண்டு ஐயோ, இது பாவம், இது தவறு, இது அநீதி, இப்படிச் செய்யலாமா என்று பதறுகிற உள்ளம் போய் , இது எல்லாம் இயல்பானது, இது எல்லாம் நடக்கும், இவை எல்லாம் நடக்கத்தான் வேண்டும் என்று ஒரு பொது உளவியலை இத்தகைய காட்சிகள் கட்டமைக்கின்றன. வன்முறையை எதிர்மறை விமரசனம் இல்லாமல் அதைக் கடந்து போகும் நிலை உளவியலாகக் கட்டமைக்கப்படுகிறது. எந்த ஒரு காட்சியைத் திரும்பத் திரும்ப நாம் காட்டுகிறோமோ அந்தக் காட்சி இயல்பான ஒன்றாக மாறிவிடுகிறது.எவ்வளவு பேரைக் தீ வைத்துக் கொளுத்தினாலும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். ஏனென்றால் திரைப்படங்களில் பார்த்த காட்சிகள் பெண்களை நிர்வாணப்படுத்தி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினாலும் நாம் அப்படியே அதை வெறும் காட்சியாகப் பார்த்துக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம் ,அரட்டை அடித்துக்கொண்டு இருக்கிறோம் .நம் மனம் பதறுவதில்லை . பட்டப் பகலில் மேலவலவில் ஏழு பேர் படுகொலை செய்யப்படுகிறார்கள். திண்ணியத்தில் கொடுமைப்படுத்தப்பட்டு வாயில் மலம் திணிக்கப்படுகிறது. அப்போதும் நாடு அமைதியாக இருந்தது.
தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தபோது இந்த சம்பவத்தை அறிந்து மூன்று நாள் உறங்கவில்லை என்றார். திரைப்படங்களில் காட்டுகிற இத்தகைய காட்சிகளைத்தான் தினந்தோறும் பார்க்கிறோம். அதன் மூலம் ஓர் உளவியல் கட்டமைக்கப்படுகிறது இரண்டு பேரை வெட்டிவிட்டார்களாம், பத்து பேரை வெட்டி விட்டார்களாம் என்று கேள்விப்படுகிறோம். அதைப்பற்றி நமக்கு பிரச்சினையே இருக்காது;கவலையே இருக்காது; பதற்றமே இருக்காது ;படபடப்பு இருக்காது ;பதைப்பு இருக்காது .அப்புறம் இப்படி நிகழ்ந்து கொண்டேதானே இருக்கும்? வீட்டுக்குள் புகுந்து ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான் கர்நாடகாவில் . ஏன் என்றால் அவன் ஒரு இடதுசாரி சிந்தனையாளர். நாடு அமைதியாகவே இருக்கிறது. பதறவே இல்லை அந்தக் கவலையிலிருந்து நான் இதைச் சுட்டிக் காட்டிக்கொள்கிறேன்.
இந்த ‘நெல்லை பாய்ஸ்’ படத்தைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.சிறு முதலீடு என்றால் அது சிறு படம் என்று நாம் சொல்கிறோம். எந்தப் படமும் சிறிய படம், பெரிய படம் என்று இல்லை . முதலீடு தான் சிறிய முதலீடு, பெரிய முதலீடு . சிறு முதலீட்டுப் படங்கள் என்று வேண்டுமானால் நாம் சொல்லலாம். சிறு படங்கள் என்று சொல்லக்கூடாது. தயாரிப்பாளர்கள் நலிவடைந்து விடக்கூடாது; நட்டமடையக் கூடாது . அவர்களும் இங்கே பாதுகாப்பாகத் தொடர்ந்து இயங்க வேண்டும்.
படத்தை உருவாக்கும் இயக்குநர்கள் ஒரு முற்போக்கான பார்வை கொண்டு இருக்க வேண்டும். சாதி அமைப்பை நியாயப்படுத்துவது , சாதிப் பெருமையை உயர்த்திப் பிடிப்பது மதவாத அரசியலை நியாயப்படுத்துவது இவை எல்லாம் சமூகத்தின் நலன்களுக்கு உகந்தவையா என்ற சிந்தனை தேவை. பெரியார் அதற்காகத் தன் வாழ்க்கையை முழுமையாக ஒப்டைத்துக்கொண்டார் . 65 வயதிலே தன் வாழ்வையை முடித்துக்கொண்டார் புரட்சியாளர் அம்பேத்கர் .அல்லும் பகலும் படித்துப் படித்து, எழுதி எழுதி உறக்கமில்லாமல் அந்த வாழ்வை முடித்துக்கொண்டார் . அவர்களெல்லாம் இந்தச் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை உருவாக்க விரும்பினார்களோ அந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு நாம் பெரிதாக திரைப்படத்தில் பிரச்சாரம் செய்ய முடியாது. ஆனால் அதற்கு எதிரான காட்சிகளை அமைத்து ஓர் எதிரான போக்கைச் சமூகத்தில் வளர்த்து விடாமல் இருந்தாலே போதும். இது என்னுடைய பணிவான வேண்டுகோள்.இவர்கள் இளம் இயக்குநர், இளம் தயாரிப்பாளர் .இவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது. ஆகவே இவர்கள் ஒரு முற்போக்கான பார்வை கொண்டவர்களாகப் பரிணமித்து வளர வேண்டும் வெல்ல வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன் நன்றி ” என்று கூறி வாழ்த்தினார்.