தண்டர் மீடியா சார்பில் கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்.வி எண்டர்டெயின்மெண்ட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சராஜ் சீலன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’பாரிஸ் கஃபே’ (Paris cafe). குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கௌசல்யா சங்கர், இயக்குநர் மித்ரன் ஜவஹர், ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
படத்தின் இயக்குநர் சராஜ் சீலன் பேசுகையில்,
“என்னுடைய சினிமா வாழ்க்கை 6 வயதில் ஆரம்பித்தது. என் அப்பா தான் எனக்குச் சினிமா கற்றுக் கொடுத்தார். பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாக்யராஜ் ஆகியோர் தான் எனக்குப் பிடித்த இயக்குநர்கள். இப்படத்திற்குப் பாக்யராஜ் சாரை அழைக்க நினைத்தேன், ஆனால் அவர் இப்போது நம்முடன் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. நான் சினிமாவைப் படித்துத் தான் கற்றுக் கொண்டேன். எனது மகளை வைத்து எடுத்த ஒரு நிமிட குறும்படம் சர்வதேச அளவில் தேர்வானதும் எல்லாமே சினிமா தான் என முடிவு செய்தேன். நடிகர் குரு சோமசுந்தரம் சாரிடம் கதை சொன்னதும், அவரே செய்வதாக ஒப்புக்கொண்டார். நடிகை அனுமோலும் கதையைக் கேட்டு உடனே சம்மதித்தார். படத்தொகுப்பாளர் சாபு ஜோசப், இசையமைப்பாளர் கே, கலை இயக்குநர் தாமு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சமூக ஆர்வலர் கௌசல்யா சங்கர் பேசுகையில்,
“முதலில் இந்த விழாவிற்கு என்னை ஏன் கூப்பிட்டார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏன்னென்றால் எனக்குக் களத்தில் வேலை செய்வதுதான் தெரியுமே தவிர, சினிமா தெரியாது. ஆனால், இந்தப் படத்தைப் பார்த்ததும் இது சமூகத்திற்கு எவ்வளவு தேவையான படம் என்பது எனக்குப் புரிந்தது. இதில் காதல் மிக இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெற்றோர்களாலேயே தொடர்ந்து நடத்தப்படும் ஆணவப் படுகொலைகளுக்கு (Honor Killing) எதிராக ஒரு பெரிய மாற்றமாக இப்படம் இருக்கும். ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச்சட்டம் வேண்டும் என்று நாங்கள் அரசிடம் கேட்டு வருகிறோம், அதற்கு இந்த ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் பெரிய அளவில் வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் பேசுகையில்,
“இயக்குநர் சராஜ் சீலன் கதை சொன்னதுமே எனக்கு மிகவும் பிடித்து உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். இது ஒரு ஸ்ட்ராங்கான கன்டென்ட் ஓரியண்டட் படம். பொதுவாகப் புது இயக்குநர்களின் மனைவிகள் வேலைக்குச் சென்று கணவரை ஆதரிப்பார்கள். ஆனால், இந்த இயக்குநரின் மனைவியே (கண்மணி ரங்கநாதன்) 23 வருட சினிமா போராட்டத்திற்குப் பிறகு இப்படத்திற்குத் தயாரிப்பாளர் ஆகியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. பெண்களை மதிக்காத நாடு கண்டிப்பா வளராது. கௌசல்யா மாதிரி இன்னொருத்தங்க இந்தச் சமூகத்தில் உருவாகக் கூடாது. நாம மாறினால்தான் எல்லாமே மாறும்; இந்தப் படம் அதைப்பற்றித்தான் பேசுகிறது” என்றார்.

படத்தின் நாயகி நடிகை அனுமோல் பேசுகையில்,
“நான் எப்போதும் சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கருத்துக்களைக் கொண்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பேன். இயக்குநர் சராஜ் சீலன் என்னிடம் கதை பேசும்போது அவரிடம் ஒரு தனி நம்பிக்கை (Confidence) தெரிந்தது. இது ஒரு சிறிய பட்ஜெட் படம் இல்லை, சமுதாயத்திற்குத் தேவையான மிக முக்கியமான பெரிய படம்” என்று பெருமிதத்துடன் கூறினார். மேடையில் குரு சோமசுந்தரத்துடன் தமக்கு இருக்கும் அன்பான நட்பு குறித்தும் அவர் சுவாரசியமாகப் பகிர்ந்து கொண்டார்.
படத்தில் நடித்துள்ள இளம் நடிகர் சாய் விக்கி,
“குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களைக் கூட இங்கே யாரும் உடனடியாகக் கொலை செய்வதில்லை. ஆனால், காதலித்த ஒரே காரணத்திற்காக இங்கே ஆணவக் கொலைகள் செய்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார்.தொடர்ந்து நடிகர் விஜய் விஸ்வா பேசும்போது, “சிறு பட்ஜெட் படங்களை ஆதரிக்கத் தமிழக அரசாங்கம் மூலமாகப் பிரத்தியேகமாக ஒரு அரசு ஓடிடி (OTT) தளம் தொடங்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். மேலும், நடிகை அர்ச்சனா தனது 10 வருட சினிமா போராட்டத்தையும் பாடி ஷேமிங் (Body Shaming) வலிகளையும் பகிர்ந்துகொண்டார். இசையமைப்பாளர் கே, இணை தயாரிப்பாளர் லிங்கேஸ்வரன், இயக்குநர்கள் மித்ரன் ஜவஹர், சிவகுமார் விஜயன் மற்றும் படக்குழுவினர் பிபின், கணேஷ், நயன சாய், எடிட்டர் சாபு ஜோசப், கலை இயக்குநர் தாமு ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.