‘பயமறியா பிர(ம்)மை’ –  விமர்சனம்!

ராகுல் கபாலி எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘பயமறியா பிர(ம்)மை’ திரைப்படத்தினில், குரு சோமசுந்தரம், ஜேடி,  ஹரிஷ் உத்தமன், ஜான் விஜய், சாய் பிரியங்கா ருத், வினோத் சாகர், விஷ்வந்த், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின், திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துளனர். கே இசையமைத்துள்ளார். பிரவின் மற்றும் நந்தா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

கொடூரமான கொலைகளை செய்ததற்காக, சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார், ஜெகதீஷ்.  இவரது வாழ்க்கையை விநோதமாக கருதும் எழுத்தாளர் கபிலன், அவரது வாழ்க்கையை, புத்தமாக எழுதுவதற்காக அவரை சிறையில் சந்திக்கிறார். கபிலன் எழுதிய புத்தகம், அதை படிக்கும் மனிதர்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. என்பதை காட்சிகளாக தொகுத்திருக்கிறார், இயக்குநர் ராகுல் கபாலி. அதாவது புத்தகம் வாசிப்பவர்களுடைய கண்ணோட்டத்தில், அவரவர் கற்பனைக்கேற்றபடி காட்சிகளாக விரிகின்றன.

ஜெகதீஷ் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த, ஜே.டி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகியோர் ஜெகதீஷ் என்ற கதபாத்திரத்தின் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை, அவர்களது நடிப்பின் மூலம் குறை சொல்ல முடியாதபடி, வெளிப்படுத்தியுள்ளனர்.

‘மாறன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும், ஜான் விஜய். ‘கபிலன்’ என்ற எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும், வினோத் சாகர். ஜெகதீஷின் மனைவியாக நடித்திருக்கும் திவ்யா கணேஷ் உள்ளிட்டவர்கள் சிறப்பு கவனம் பெறுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள், பிரவின் மற்றும் நந்தா ஆகியோரது ஒளிப்பதிவு, படத்தின் பக்க பலமாக இருக்கிறது. இசையமைப்பாளர், கே -வின் இசை வெரிகுட் சொல்லுமளவிற்கு இருக்கிறது. ப்டத்தினை தாங்கிப்பிடித்திருப்பதே அவரது இசை தான்.

கொலையை, கலையாக சித்தரித்து, வித்தியாசமான முறையில் கதை சொல்ல ஆர்வப்பட்ட இயக்குநர் ராகுல் கபாலி, புரிந்து கொள்ளமுடியாத காட்சியமைப்புகளால், ரசிகர்களை தூங்க வைக்கும் அளவிற்கு சொல்லியிருப்பது, துரதிர்ஷ்டம்.

இயக்குநர் ராகுல் கபாலியின், இந்த வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டலாம்! மற்றபடி சொல்வதற்கு எதுவுமில்லை!

‘பிர(ம்)மை’ என்ற சொல்லுக்கு ‘குழப்பம்’ என்ற பொருளும் உண்டு!