‘சட்னி – சாம்பார்’ சீரிஸ், ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது. – இயக்குநர் ராதா மோகன்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ்,  ‘சட்னி – சாம்பார்’. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸின் முதல் இரண்டு எபிஸோடுகள், பத்திரிக்கையாளர்களுக்காகச் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இத்திரையிடலைத் தொடர்ந்து வெப் சீரிஸ் குழுவினர், பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்..,

இயக்குநர் ராதா மோகன் பேசியதாவது…

திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறேன் என்கிறார்கள், 20 ஆண்டுகளைக் கடந்து இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம், பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். சட்னி சாம்பார் சீரிஸ் பற்றி எல்லோரும் சொல்லி விட்டார்கள். இந்த சீரிஸில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் முதல் சீரிஸ், எங்களுக்காக அவர் மிக பிஸியான நேரத்தில் பத்து நாட்கள் கால்ஷீட் தந்தார், எல்லோரும் உங்களுக்கு பத்து நாள் கால்ஷீட் தந்தாரா? என ஆச்சரியப்பட்டார்கள்.  அவர் தந்த ஒத்துழைப்பிற்கு நன்றிகள். இந்த நேரத்தில் ஓடிடிக்கு  என்னை அணுகிய செந்தில், கிருஷ்ணன் குட்டி, பிரதீப், ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நடிகர்கள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள், எல்லோரும் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார்கள். அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். என்னுடைய உதவி இயக்குநர் குழுவிற்கு, என்றும் நான் நன்றி சொன்னதே இல்லை, அவர்கள் இல்லாமல் நான் இல்லை, அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸ் என்னுடைய மற்ற படைப்புகள் போல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி’ என்றார்.

இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது. யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘சட்னி-சாம்பார்’ சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜீஸ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ்  பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன், இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ‘சட்னி – சாம்பார்’ சீரிஸ் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் துவங்கியுள்ளது.