மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான சென்னையில் இன்று நடைபெற்றது.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி,
“மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு முதலில் நன்றி! மைத்திரியுடன் எங்களுடைய நான்காவது படம் இது. இந்த படத்தில் அறிமுகமாகும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு வாழ்த்துக்கள். இதைப்போல பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ என ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள். திறமையாளர்கள் மற்றும் நல்ல கதைகளை ஏஜிஎஸ் நிறுவனம் எப்போதும் ஆதரிக்கும். அந்த வகையில், இந்தப் படத்தின் சிறு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி” என்றார்.
இயக்குநர் கீர்த்தீஸ்வரன்,
“எல்லோரைப் போலவும் நானும் உதவி இயக்குநராக, இயக்குநர் சுதா கொங்கராவிடம் 7 வருடங்கள் பணிபுரிந்தேன். ‘டியூட்’ படத்தின் கதை எழுதி முடித்ததும் நண்பரின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் நிகேத் பொம்மியிடம் கதை சொன்னேன். அவர் பயங்கரமாக என்ஜாய் செய்துவிட்டு மைத்ரியிடம் பேசுவதாக சொன்னார். ஆனால், அப்போது கூட படம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. பிறகு ஹைதராபாத்தில் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொன்னதும் உடனே அவர்களுக்கு பிடித்து விட்டது. படத்தில் ‘ஊரும் பிளட்டும்’ பாடல் உருவாவதற்கு முன்பு நமக்கு பிடித்தது போல செய்யலாம். இப்போதுள்ள டிரெண்டுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்றுதான் யோசித்தோம். ஆனால், பாடல் வெளியானதும் மக்கள் எல்லோருக்கும் பிடித்து போய் சென்சேஷன் ஆகிவிட்டது. பழைய சரத் சாராக ஆடல் பாடலுடன் இந்த படத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து தான் கதை சொன்னேன். அவருக்கும் பிடித்து விட்டது. மமிதாவுக்கும் நன்றி. ‘பிரேமலு’, ‘சூப்பர் சரண்யா’வில் என்ன செய்தாரோ அதுவும் இந்த படத்தில் இருக்கும். அதை தாண்டி நிறைய எமோஷனாகவும் நடித்துள்ளார் மமிதா. படத்தில் உங்களுக்கு எல்லோருக்கும் பிடித்த பயங்கர ஹைப்பரான பிரதீப்பையும் பார்ப்பீர்கள். இன்னொரு பக்கம் மெச்சூர்டான, எமோஷனலான இன்னொரு வெர்ஷன் பிரதீப்பையும் பார்ப்பீர்கள். என்னுடைய முதல் படத்திலேயே நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே கொண்டு வர சப்போர்ட் செய்த பிரதீப் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. திரையரங்கில் பார்த்து கொண்டாடும் படியாக லவ், ஆக்சன், எமோஷன், ஹியூமர் என எல்லாமே இந்த படத்தில் இருக்கும்” என்றார்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன்,
“உங்களில் ஒருவனான என்னை மேடையேற்றியதற்கு நன்றி. சரத் சார் இந்தப் படத்தை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. நான் பார்த்து வளர்ந்த ஹீரோ உடன் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. அவருடைய வயசும் எனர்ஜியும் எனக்கு பயங்கர இன்ஸ்பிரேஷன். ‘லவ் டுடே’ படத்திற்காக ஹீரோயின் தேடிக்கொண்டிருந்தபோது மமிதாவை ஒரு ஷார்ட் ஃபிலிமில் பார்த்தேன். ‘லவ் டுடே’ படத்திற்காக அவரை முயற்சி செய்தபோது அவர் ‘வணங்கான்’ படத்தில் பிசியாக இருந்ததால் பிடிக்க முடியவில்லை. ஆனால், ‘டியூட்’ படத்தில் மமிதா தான் நடிக்கிறார் என கீர்த்தி சொன்னபோது சர்ப்ரைஸ் ஆக இருந்தது. இதுவரை பார்க்காத மமிதாவை இந்த படத்தில் பார்ப்பீர்கள். நேஹாவும் அற்புதமாக நடித்துள்ளார். டிராவிட், ரித்து, ரோகிணி மேம் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் ஒரு பெரிய இயக்குநராக கீர்த்தி வருவார் என்பதில் சந்தேகம் இல்லை. அவரை என் தம்பி போலதான் பார்க்கிறேன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு என்னை பாடவும் வைத்த சாய் அபயங்கருக்கு நன்றி. தீபாவளியை ‘டியூட்’ படத்துடன் கொண்டாடுங்கள்” என்றார்.