சுனாமியால் தாய், தந்தையை இழந்த நாயகன் லிங்கேஷை, அவரது தாய் மாமன் மதுசூதன் ராவ் வளர்க்கிறார். 54 மீனவ கிராமங்களுக்கு தலைவராக இருக்கும் மதுசூதன் ராவ், தனது மகள் திவ்யாவை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறார். லிங்கேஷூம் திவ்யாவை அன்பாக பார்த்து வருகிறார். இதனிடையே லண்டனைச் சேர்ந்த பெண் லியா, தமிழ் மற்றும் தமிழ் மக்களின் கலாச்சாரம் குறித்து ஆராய்ச்சி செய்ய, இவர்களது மீனவ கிராமத்திற்கு வருகிறார். இவருக்கு லிங்கேஷ் உதவி செய்கிறார். இதன் காரணமாக இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டு, காதலாக மாறுகிறது. தூக்கி வளர்த்த மதுசூதன் ராவ், லிங்கேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ‘என் காதலே’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் லிங்கேஷ், நாயகிகளாக நடித்திருக்கும் திவ்யா, வெளிநாட்டுப்பெண் லியா, ஆகிய மூவரும் தங்களது கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்துள்ளனர். இவர்களில் சிறு வயதிலிருந்தே முறைமாமன் மேல் காதல் கொண்டு வளரும் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவ்யா சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடன் போட்டி போடும் அளவிற்கு லியாவும் நடித்துள்ளார். லிங்கேஷ் காதல் காட்சிகளிலும் சண்டைக்காட்சிகளிலும் தன் இருப்பினை பதிவு செய்கிறார்.
இவர்களுடன் காட்பாடி ராஜன், மதுசூதன் ராவ், தர்சன் உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.
சில காட்சிகளில் நடித்திருக்கும், கஞ்சா கருப்பு மற்றும் மாறன் கூட்டணியினர் காமெடி சிரிக்க வைக்கின்றனர்.
இசையமைப்பாளர் சாண்டி சாண்டல்லோ இசையில், பாடல்கள் கேட்கும் படி இருக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை.
ஒளிப்பதிவாளர்கள் டோனிசென் மற்றும் வெங்கடேஷ், ஆகியோரின் ஒளிப்பதிவில் குறைவில்லை. அனைத்து காட்சிகளையும், அழகாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
மீனவர்களின் வாழ்க்கையை பின்புலமாகக்கொண்டு, எழுதி, இயக்கியிருக்கும் ஜெயலட்சுமி, முக்கோண காதல் கதையை, தன்னால் முடிந்தவரை சிறப்பாக சொல்லியிருக்கிறார். காட்சிகளில் புதுமை இல்லை. என்றாலும் ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில், ‘என் காதலே’ – காதலர்களுக்கானது.