ஆஸ்கார் விருது  குறித்து ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் பெருமகிழ்ச்சி!

‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருது பெற்றதை பற்றி ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

“இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ‘நாட்டு நாட்டு’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட ‘ஆர்ஆர்ஆர்’ குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். பாடலை சிறப்பாக பாடிய ராகுல் சிபில்கஞ்ச் மற்றும் காலபைரவா, நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் மற்றும் இந்த பாடலுக்கு உயிர்கொடுத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரு உலகளாவிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. சிறந்த கதை மற்றும் சிறந்த பாடல் மொழி மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.

இந்தப் பாடல் இனி எங்களின் பாடல் அல்ல, ‘நாட்டு நாட்டு’ இனி பொதுமக்களுக்கும் அதை ஏற்றுக்கொண்ட அனைத்து வயது மற்றும் கலாச்சாரங்களை சேர்ந்தவர்களுக்கும் சொந்தமானது.

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸுக்கு ஆஸ்கார் விருது பெற்ற கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோரையும் வாழ்த்துகிறேன். இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த தருணம்!” என்றார்.