சிம்புவுக்கு நன்றி சொன்ன ஹன்ஸிகா மோத்வானி!

Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது  50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”. இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஶ்ரீகாந்த் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஒரு பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை  ஊடக  நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இயக்குநர் சீனுராமசாமி பேசியதாவது..,

படத்தின் டிரைலர் ஹாலிவுட்க்கு இணையாக வந்திருக்கிறது, அதற்கு காரணம் ஒளிப்பதிவாளர் தான். பெண் குழந்தைகளுக்கான ஒரு முக்கியமான கருத்தை முன்னெடுத்து வைக்கும் படமாக இது இருக்கிறது. இப்படியான படத்தில் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளது சந்தோசமளிக்கிறது. ஹன்ஷிகா உடைய நடிப்பு பிறரை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. அவருக்கு எனது பாராட்டுகள். படம் நிச்சயம் வெற்றியடையும்.

நடிகர் தம்பி ராமையா பேசியதாவது..,

இந்த படத்தின் கதை தான் எங்களை ஒன்றிணைத்தது. இக்கதையை ஒத்துகொண்ட ஹன்ஷிகா தான் இந்த படத்தின் அச்சாணி. இந்த படத்தில் அவருடைய நடிப்பில், நாம் முன்னர் பார்த்த ஹன்ஷிகாவை தாண்டி, ஒரு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். நடிகர் சிம்பு இந்த படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பார்வையாளர்களுக்கு நிச்சயம்  பிடித்தமான ஒரு படமாக இது இருக்கும். இந்த படம் தயாரிப்பாளர் மதியழகனுக்கு நல்ல பெயரை  பெற்று தரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் ஆரி பேசியதாவது..,

இந்தப் படத்தில் ஹன்ஷிகா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார், அது பெருமையான விஷயம். நாயகியை  மையமாக வைத்து உருவாகும் படத்தில் பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. படத்தின் டிரைலரை பார்க்கும் போது, ஒரு கதையை ஆழமாக சொல்லியுள்ளார்கள் என தெரிகிறது. இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும்  ஹன்ஷிகா திறம்பட நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படம் பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும்.  நல்ல படங்களுக்கு ரசிகர்கள்  ஆதரவு தர வேண்டும்.  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகை ஹன்சிகா பேசியதாவது..,

மஹா படம் எனக்கு வந்த போது, இது எனது 50 ஆவது படம் என்று நான் நினைக்கவில்லை. என் 50 ஆவது படமாக மஹா  திரைப்படம் அமைந்ததில் நான் மிகவும்  மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்து, படத்தை மெருகேற்றியுள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது. நண்பர் சிம்பு படத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவருக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். என்றார்.