ஹிப் ஹாப் ஆதியின் உருவாக்கத்தில்  ‘பொருநை’, உலகளாவிய  ஆவணப் படம்!

Iron Age beginning with Tamils!

இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019-ம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.

‘மூக்குத்தி அம்மன்’ இரண்டாம் பாகம் மற்றும் இன்னும் ஒரு படத்திற்கு இசை அமைக்கிறேன்” என்றும் “‘ஜோ’ படத்தை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். அதற்கான படப்பிடிப்பு, என்னுடைய இசை உலக சுற்றுப்பயணம் முடியும் தருவாயில் இந்த படத்தை நடித்து முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். இது தவிர இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன்.

திரை உலகத்துக்கு வருவதற்கு முன்பிருந்தே என் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வரவேற்பும் ஆதரவும் அளித்து வருகிறார்கள். திரையுலகிற்கு வந்த பிறகு இன்று வரை எங்களின் எல்லா முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரித்தும் வருகிறார்கள். இசை, நடிப்பு பணி தவிர தயாரிப்பு பணியிலும் நான் ஈடுபட்டதற்கும் ஆதரவளித்தார்கள். அதற்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

திரைத்துறை தவிர சமூகம் சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு செய்து வருகிறோம். ஹிப் ஹாப் தமிழா ரசிகர்கள் மன்றத்தை அமைப்பு ரீதியாக மாற்ற முடிவு செய்து ஹிப் ஹாப் தமிழா பவுண்டேஷன் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகள், மற்றும் தகுதியானவர்களைத் தேர்வு செய்து அவர்களது படிப்புக்கு உதவ முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான நடைமுறைகள் தொடங்கி நடந்து வருகிறது. சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து இதுபற்றி அறிவித்திருக்கிறோம்.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியான மாணவ மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு உதவ  முடிவு செய்யப்பட்டிருக்கிறது. படிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமான விஷயமாகும். வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குவது படிப்பு. இதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன்.

2016 ல் தொடங்கி  2019 வரை நான்கு வருடம் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு உருவானது என்பது பற்றிய ஒரு வரலாற்று ஆவணப்படத்தை உருவாக்கினோம். அது எல்லா தரப்பிலும் வரவேற்பு பெற்றுத் தந்தது. இந்த ஆவணப்படம் முடியும் தருவாயில் ’பொருநை’ என்ற தமிழ் தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப்படம் உருவாக்குவது பற்றி முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டோம். 2021-ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களின் தொல்லியல் ஆராய்ச்சியைக் கண்டறிய பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பணிகள் தொடங்கிய போது, அவர்களது அனுமதியுடன் அந்த பணிகளை ஆவண படமாக்க 2021 முதல் படப்பிடிப்பைத் தொடங்கினோம். இந்த ஆராய்ச்சியில் நிச்சயம் பெரிய கண்டுபிடிப்புகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து கூறி வந்தனர். எங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இந்த ஆராய்ச்சியில் உண்மையானது.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில். உலக அளவில் பழமை வாய்ந்த இரும்பு கலாச்சாரம் தொடங்கியது தமிழ் மண்ணில் இருந்து தான் என்ற கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது குறித்து அறிவித்தார். இந்த அறிவிப்பு உலகையே தமிழகம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் இதற்கு முன்பு இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது துருக்கி நாட்டில் உள்ள ஒரு பகுதியில் என்று குறிப்பிடப்பட்டு வந்தது. தற்போது அந்த வரலாறு மாறி இருக்கிறது. இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது அதாவது பழமையான இரும்பு கலாச்சாரம் தமிழகத்தில் தான் தோன்றியது என்ற வரலாற்று உண்மை வெளியாகி இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் தொல்லியல் ஆராய்ச்சி நிகழ்வு ஒன்றை முழுவதுமாக ஆவணப்படுத்துவது இதுவே முதன்முறை. நான்கு வருடமாக நடந்து வந்த இந்த பணியில் எவ்வளவோ மணிக்கணக்கில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் முக்கிய தகவல்களை தேர்வு செய்து ஆவணப்படமாகச் சுருக்கி கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். முற்றிலுமாக இது இரண்டு மாதத்தில் முடிக்கப்பட்டு பிறகு உலக முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் திரையிட முடிவு செய்திருக்கிறோம். அதன் பிறகு இதனை உலக தமிழர்களுக்கு கொண்டு செல்லும் வகையில் என்ன முயற்சி எல்லாம் மேற்கொள்ள முடியுமோ அதை எல்லாம் மேற்கொண்டு தமிழக மக்களுக்கு எப்படி தமிழ் எழுத்துக்கள் வரலாற்று ஆவணப்படம் தமிழியை பொதுவுடைமையாக வழங்கினோமோ அதுபோல் ’பொருநை’ ஆவணப் படத்தை பொதுவுடைமையாக வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்று ஹிப் ஹாப் ஆதி கூறினார்.