70 நாட்கள் நடைபெற்ற ‘கங்கணம்’ படத்தின் படப்பிடிப்பு!

‘கங்கணம்’ என்பது ஒரு வகையான விரதக் கயிறு. கோவில் விழாக்களுக்கு விரதம் இருப்பவர்கள் இதைக் கட்டிக் கொள்வார்கள். விரலி மஞ்சளை, மஞ்சள் கயிற்றில் கட்டி அத்துடன் வெற்றிலை ஒன்றை மடித்துச் சேர்த்துக் கட்டி அதை வலது கையில் கட்ட வேண்டும். உள்ளே உள்ள பொருட்கள் தெரியாமல் அதன் மேல் மஞ்சள் துணியால் கட்டிக் கொள்வார்கள். இதைக் காப்பு என்றும் சொல்வார்கள். இப்படிக் காப்பு கட்டி விட்டால் அவர்கள் நினைத்த காரியத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் இறையருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் காரிய உறுதிபாட்டைக் கூறும்போது ‘கங்கணம் கட்டிக் கொள்வது’ என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட ‘கங்கணம்’ என்கிற பெயரில் தற்போது ஒரு புதிய திரைப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தை தயாரிப்பாளர்கள் கே.கல்யாணி, கே.ஜி.சிரஞ்சன் இருவரும் தங்களது ‘கல்யாணி இ என்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கதையின் நாயகனாக ‘கூத்துப்பட்டறை’ சௌந்தர் நடித்துள்ளார். அஸ்வினி சந்திரசேகர் நாயகியாக நடித்துள்ளார். இவர் ‘ஜீவி-2’, படத்தில் நடித்தவர். மற்றொரு நாயகியாக ‘மூன்றாம் மனிதன்’, ‘குற்றச்சாட்டு’, ‘கிளாஸ்மேட்’ ஆகிய படங்களில் நடித்த பிரணா நடித்துள்ளார்.

மேலும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கே.ஜி.சிரஞ்சன் நடித்துள்ளார். ‘பருத்தி வீரன்’ சரவணன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவர் வில்லன் மூலம் பட்ட அவமானத்தைத் துடைப்பதற்கு ‘இந்தத் துப்பாக்கியால்தான் நீ சாகப் போகிறாய்‘ என்று வெறியோடு காத்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த பாத்திரத்தில் வருகிறார். ஒட்டு மொத்த மூர்க்கத்தின் சின்னமாக வில்லன் பாத்திரத்தில் சம்பத் ராம் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தில் நடித்த நடிகர் அட்ரஸ் கார்த்திக் இது ஒரு முக்கியமான பாத்திரத்தில் வருகிறார். தவிர, இயக்குநர் மனோபாலா, ‘விஜய் டிவி’ ராமர், சேதுபதி ஜெயச்சந்திரன், ‘கயல்’ மணி, ‘ராட்சசன்’ யாசர், அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீமகேஷ், பாரி வள்ளல், அருண்பிரசாத், கும்கி தரணி, அறந்தாங்கி மஞ்சுளா, ரோகிணி பழனிச்சாமி, ரியா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு G.A.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘முந்திரிக்காடு’ உட்பட ஆறு படங்களில் இவர் பணியாற்றி உள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட ஆல்பங்கள் உருவாக்கிய செல்வா இசையமைத்துள்ளார். நான்கு பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். ‘எஞ்சாமி’ ஆல்பம் புகழ் தெருக்குரல் அறிவு, V.M.மகாலிங்கம், கயல் கோபு, ஸ்ரீநிஷா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். J. ஜெயபாலன் படத் தொகுப்பு செய்துள்ளார்.

மிரட்டல் செல்வா சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார். இப்படத்தில் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள் வருகின்றன. நடன இயக்குநர்களாக தினா, ஜாய்மதி பணியாற்றியுள்ளனர். கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்துள்ளார்.

இப்படத்தை அ. இசையரசன் இயக்கியுள்ளார். இவர் குறும் படங்கள் இயக்கி தன் திறமைக்கு சான்றுகளை உருவாக்கியவர். இவர் இயக்கிய ‘என் கண்ணே’ என்கிற குறும் படம் நான்கு விருதுகள் பெற்றது. இவரும் ‘கூத்துப்பட்டறை’ சௌந்தரும் நண்பர்கள். இசையரசனின் குறும் படத்தை பார்த்த சௌந்தர், “ஏன் நீங்கள் ஒரு படம் பண்ணக் கூடாது..?” என்று கேட்க, அந்தக் கேள்வியின் தூண்டுதலில், இந்தக் கதையை இயக்குநர் இசையரசன் உருவாக்கியிருக்கிறார்.

“இக்கதை களத்திற்கு நீங்கள்தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும்” என்று செளந்தரிடம் சொல்ல.. இதன் தொடர்ச்சியாய் இந்தப் படத்திற்காக சௌந்தர் ஒன்பது மாதங்கள் முடி வளர்த்து கடும் உடற்பயிற்சி செய்து தன் உடல் அமைப்பையே மாற்றி, தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டு இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் கதையில் கதாநாயகனின் குடும்பத்தில் கொடூரமான சம்பவம் ஒன்றை வில்லன் செய்து விடுகிறான். அது மட்டும் அல்லாமல் ஒரு போலீஸ் அதிகாரிக்கு உச்சகட்ட அவமானப்படுத்தை ஏற்படுத்தி விடுகிறான். அத்தோடு நிற்காமல் அங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவன் பெரிய தொல்லை கொடுத்து வருகிறான். அவர்களில் ஐந்து பேர் ஒரு குழுவாக இணைந்து வில்லனை பழி வாங்கத் துடிக்கிறார்கள். இப்படிப் பாதிக்கப்பட்ட மூன்று தரப்பினருமே அவனை பழிவாங்க வேண்டும் என்று வெஞ்சினம் அதாவது கடும் கோபம் கொண்டு கங்கணம் கட்டிக் கொண்டு வைராக்கியமாக இருக்கிறார்கள். அவனை சம்ஹாரம் செய்ய வேண்டும் என்று சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப் பழிவாங்குதலின் மூன்று பரிமாணங்களும் ஒரு புள்ளியில் மையம் கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதுதான் ‘கங்கணம் ‘படத்தின் கதை.

இந்தக் ‘கங்கணம்’ படத்தின் படப்பிடிப்பு 70 நாட்கள் நடைபெற்றுள்ளது. மதுரை மேலூர், சென்னை, தேனி என்று பல்வேறுபட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் இந்த ‘கங்கணம்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.