தமிழ் சினிமாவில் பல பணியாற்றி அனுபவம் கொண்ட ஜெய்கிரண், தற்போது தனது முதல் படமான ‘காந்தி கண்ணாடி’ மூலம் தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்குகிறார். ‘ஆதிமூலம் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், எளிமை மற்றும் நேர்மையை பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இப்படக்குழு முழு உற்சாகத்துடன் இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
‘காந்தி கண்ணாடி’ படத்தின் தயாரிப்பாளர் ஜெய்கிரண் கூறியதாவது,
‘காந்தி கண்ணாடி’ என்பது எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மட்டுமல்ல, எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையை முதன் முறையாக கேட்டவுடனே என் நெஞ்சை தொட்டது போல் ஒரு உணர்வு இருந்தது. படம் முடிந்த பிறகும், ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு படமாக இது உருவாகும் என நம்புகிறேன். பாலா, ஷெரீஃப் மற்றும் மற்ற திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். சினிமாவுக்கு மக்களைத் தூண்டும் சக்தி உண்டு – இந்தப் படத்துக்கு அந்தத் தீப்பொறி இருக்கிறது.” என்றார்.
‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நகைச்சுவை நேர்த்திக்காக அறியப்படும் KPY பாலா, இப்போது ‘காந்தி கண்ணாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக திரையில் அறிமுகமாகிறார். இயக்குநர் ஷெரீஃப், இப்படத்தை இயக்குகிறார். இவரது முந்தய படம் ‘ரணம்: அறம் தவறல்’, விமர்சகர்களின் பாராட்டை பெற்று, ரசிகர்களிடமும் பிரபலமடைந்தது. இப்போது உண்மைக் கதையிலிருந்து உணர்வுப்பூர்வமான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.
இயக்குனர் ஷெரிப் கூறியதாவது,
‘ரணம் போன்ற ஒரு ஆழமான கதைக்குப் பிறகு, நான் மனதிற்கு நெருக்கமான, வாழ்க்கையைப் பற்றிய படத்தை இயக்க விரும்பினேன். ‘காந்தி கண்ணாடி’ எனக்கு மிக நெருக்கமான படம். தயாரிப்பாளர் ஜெய்கிரண், கதையை கேட்டவுடனே சம்மதம் சொல்லிவிட்டார். அது எனக்கு மிக பெரிய உற்சாகத்தை அளித்தது.
‘காந்தி கண்ணாடி’ படம், ஹீரோவாக அறிமுகமாகும் பாலாவுக்கு முக்கியமான படமாகும், மேலும் தேசிய விருது பெற்ற பாலாஜி சக்திவேல், அர்ச்சனா போன்ற அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் இருப்பது, படத்தின் கதைக்கு பலம் சேர்க்கும். படக்குழுவின் உற்சாகம் மற்றும் ஈடுபாடு, எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.” என்றார்.