தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தஹில், சுனைனா, சாயாஜி ஷிண்டே, கே.பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்திருக்க, முன்னணி இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், குபேரா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி, ஒளிப்பதிவினை செய்திருக்கிறார்.‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்’ – ‘அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்,’ நிறுவனங்கள் சார்பில், சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘ரோமியோ பிக்சர்ஸ்’ சார்பில், தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார், ராகுல்.
உலக பணக்காரர்களின் பட்டியலில் ஒருவராக இடம்பெற்ற, இந்தியத் தொழிலதிபர், ஜிம் சர்ப். இவருக்கு, இந்திய கடல் பகுதியில், அள்ள அள்ள குறையாத எரிவாயு, எண்ணெய் வளம் இருப்பது தெரிய வருகிறது. அதை, தனது நிறுவனத்தின் மூலமாக வசப்படுத்திக்கொள்ள நினைக்கிறார். இதற்காக, ஆளும் அரசின் செல்வாக்குமிக்க மத்திய அமைச்சருடன் உடன்படிக்கை செய்து கொள்கிறார். அதற்காக 1 லட்சம் கோடி லஞ்சம். அதை, சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளுக்கு ரகசியமாகக் கொடுக்க முடிவு செய்யப்படுகிறது. இதற்காக, அதிகார மைய்யத்தால் சிறைக்கு அனுப்பப்பட்ட, நேர்மையான சி பி ஐ அதிகாரி நாகார்ஜுனா நியமிக்கப்படுகிறார்.
நாகார்ஜுனா, 1 லட்சம் கோடி லஞ்சப்பணத்தினை கொடுக்க, சில பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுக்கிறார். அதில், ஒருவர் தான் தனுஷ். சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் சென்றவுடன் பிச்சைக்கார்கள் கொல்லப்படுகிறார்கள். இந்நிலையில், தனுஷ் அந்தப்பணத்தினை எடுத்துக்கொள்ள நினைக்கிறார். நாகார்ஜுனா கோஷ்டி அவரை கொல்லத் துரத்துகிறது. இதில், சம்பந்தமே இல்லாமல் ராஷ்மிகா மந்தனாவும் சிக்கிக்கொள்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘குபேரா’ படத்தின் மீதிக்கதை.
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் நடிகராகவும், பெர்ஃபார்மென்ஸ் நடிகராகவும், தன்னால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க முடியும். என்பதை, சொல்வது போல் இருக்கிறது. தனுஷின் இயல்பான நடிப்பு. எழுத படிக்கத்தெரியாத ஒரு பிச்சைக்காரனாக சிறப்பாக நடித்திருக்கிறார். ராஷ்மிகாவின் பின்னால் சென்றபடி அம்மா…, மே….டம், என அழைக்கும்போதும், ஜி சர்ப்பிடம் 500 ரூபாயை வாங்கும் போதும், போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் சாயாஷி ஷிண்டே முன்பு, கால் மேல் கால் போட்டபடி பேசும் போதும், இப்படி பல காட்சிகளில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா, அப்பாவிப் பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னை கழட்டிவிட்ட காதலனைத்தேடியபடி அழும் காட்சியிலிருந்து, க்ளைமாக்ஸ் வரை சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
நாகார்ஜுனா சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில், ஓகே எனும் அளவிற்கு நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்த ஜிம் சர்ப், படம் முழுவதும் மிரட்டியிருக்கிறார். ஆனால், க்ளைமாக்ஸ் காட்சியில் கோமாளியாக்கப்பட்டிருக்கிறார்.
சுனைனா, தலிப் தஹில், சாயாஜி ஷிண்டே, கே.பாக்யராஜ், ஜெயபிரகாஷ் ஆகியோரும் ஓகே வான நடிப்பினை கொடுத்துள்ளனர்.
படம் ஆரம்பித்த முதல் 20 நிமிடங்கள் விறுவிறுவென செல்கிறது. அதன் பிறகு மிதமான வேகத்தில், இயற்கை வளங்கள் சுரண்டல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் ஆளும் அரசுக்கும் உள்ள புரிதல், பிச்சைக்காரர்களின் வாழ்க்கை, பினாமிகளின் வாழ்க்கை என, இதுவரை யாரும் சொல்லாத விஷயங்களை சுவாரசியமாகச்செல்லியிருக்கிறார், இயக்குநர் சேகர் கம்மூலா. இதை காட்சிப்படுத்துவதற்கும் தைரியம் வேணும்.
படத்தின் நீளத்தினையும், சில நம்பமுடியாத காட்சியமைப்புகளையும் தவிர்த்து விட்டால், சுமார் மூன்று மணி நேரம் ஓடக்கூடிய, விறுவிறுப்பான க்ரைம் டிராமவை பார்த்த திருப்தி ஏற்படும்.
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாகவும், சிறப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.
தேவி ஸ்ரீபிரசாத், ரசிக்கும்படியான பாடல்களையும், காட்சிகளுக்கேற்ற பின்னணி இசையையும் கொடுத்திருக்கிறார்.
வசனகர்த்தா அகோரம் பன்னீர் செல்வத்தின் வசனங்கள், சிறப்பாக இருக்கிறது.
பினாமி, இயற்கை வளங்கள் சுரண்டல் குறித்த, ‘குபேரா’ திரைப்படம் வரவேற்கப்பட வேண்டியது அவசியம்!