விஜய் ஆண்டனி, அஜய் திஷன், ப்ரிகிடா, தீப்ஷிகா, கனிமொழி, அர்ச்சனா, மகாநதி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், மார்கன். எடிட்டர் லியோ ஜான்பால், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தினை, ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ சார்பில், மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.
விஜய் ஆண்டனி, தன்னுடைய உடல்மொழி பாவனைக்கேற்ற, கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். சமீபகாலங்களாக குறிப்பிடத்தகுந்த வெற்றி எதுவும் கொடுக்காத நிலையில், வெளியாகியிருக்கும் ‘மார்கன்’ திரைப்படத்தினை அவரும், அவரது ரசிகர்களும் வெற்றியை எதிர்பார்த்திருக்கும் நிலையில், இந்தப்படம் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளதா?
‘மார்கன்’ படத்தின் முதல் காட்சியே, பார்ப்பவர்களின் மனதில் பரப்பரப்பினை கூட்டிவிடுகிறது. இரவு நேரத்தில் நடந்து வரும் ஒரு பெண்ணை ஆந்தை பின் தொடர்கிறது. அதன் பிறகு ஒரு மர்ம உருவம் ஊசியால் அந்தப் பெண்ணின் கழுத்தில் குத்துகிறது. கீழே சாய்ந்த அந்தப்பெண் சில நொடிகளில் கருப்பு நிறமாக மறிய பின் பிணமாகிறார். இந்த மர்மக்கொலை, சென்னையில் காட்டுத்தீயாக பரவுகிறது. போலீஸ் விசாரணையை முடிக்கிவிடுகிறது. மும்பையிலிருக்கும் விஜய் ஆண்டனிக்கு இந்த விஷயம் போலீஸ் உயரதிகாரி ஒருவர் மூலம் தெரியவர, அவர் சென்னைக்கு வருகிறார்,
விஜய் ஆண்டனியின் தீவிர விசாரணையில், அமானுஷ்ய சக்தி பெற்ற, நீச்சல் வீரர் அஜய் திஷன் கைது செய்யப்படுகிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு பெண், முன்னர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கொலையை அப்படியே பிரதிபலிப்பது போல், இந்தப்பெண்ணும் கொலை செய்யப்படுகிறார். கொலையாளி யார்? கொலைக்கானகாரணம் என்ன? என்பதை, அமானுஷ்யம் கலந்த அறிவியல் திரைக்கதை மூலம் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் சொல்வது தான் ‘மார்கன்’.
மார்கன் படத்தின் முதல் வெற்றியே, அதன் திரைக்கதை தான். ஒரே சீரான வேகத்தில், சுவாரசியமாக பயணிக்கிறது. குழந்தையாக இருக்கும் அஜய் திஷன், சித்தர் கோயில் கிணற்றுக்குள் விழுந்த பின்னர் சித்தரால் காப்பாற்றபடும் காட்சி, அவர் பெரியவனாக வளர்ந்த பின்னர் நீருக்கடியில் சென்று அமானுஷ்ய சக்தியை பிரயோகிக்கும்போது, அடுத்தடுத்த காட்சிகள் நம்பத் தகுந்தபடி அமைகிறது. அஜய் திஷனின் அப்பாவாக நடித்த ராமச்சந்திரன், அந்தக்காட்சிக்கு வலுசேர்த்துள்ளார்.
கொலையாளியை கண்டுபிடிக்கும் அதிகாரியாக விஜய் ஆண்டனி, ‘துருவ்’ கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம், அவரது உடல் மொழிக்கேற்றதாகவும் இருக்கிறது. ஒரு பக்க முகமும், கையும் கருத்த நிலையில் அவர் நடித்திருக்கும் காட்சிகள் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
நீச்சல் வீரர் ‘தமிழறிவு’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் திஷன், ரசிகர்களிடம் எளிதில் கவனம் பெற்றுவிடுகிறார். தங்கையை கணாமல் தேடும் போதும், விஜய் ஆண்டனியின் காலைப்பிடித்து கெஞ்சும்போது சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, பிரிகிடா, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனியின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. அவருடைய பின்னணி இசை, காட்சிகளுக்களின் விறுவிறுப்பினை மேம்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு சிறப்பு.
விஷ்ணு மற்றும் லியோ ஜான் பால் இருவரும் வழக்கமான கிரைம் திரில்லரில், அமானுஷ்ய விஷயங்களை சாதூர்யமாக இணைத்து, ஒரு நல்ல க்றைம் த்ரில்லராக, ரசிக்கத்தக்க வகையில் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு சிலர், க்ளைமாக்ஸ் நெருங்கும் போது குற்றவாளியை யூகித்துவிட முடிந்தாலும், எதற்காக அந்தக் கொலைகள் என்பது ரசனையாகவே இருக்கிறது. இல குறைகள் இருந்த போதும், மார்கனை ரசிக்கலாம்!
மார்கன் – சுவாரசியமான சூப்பர் நேச்சுரல் க்ரைம் டிராமா!