‘மேதகு 2’ – விமர்சனம்!

தமிழ் ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள ‘இனவெறி’ அரசின் தொடர்ச்சியான கொடூரத் தாக்குதல்களில் இருந்து, தமிழர்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காக உருவான அமைப்பே, ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ அமைப்பு. இந்த அமைப்பினை தம்பி என்றும் தமிழ் ஈழத் தேசியத் தலைவர் என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட மாவீரன். பிரபாகரன் சாதிமத வர்க்க என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நிறுவினார். மக்களுக்காக போரடியத் தலைவர்களில் உலகத்திலேயே பெரும் தனித் தன்மையுடன் விளங்கி, மக்களுக்காகவே உயிர்த்தியாகம் செய்தவர்.

கடந்த ‘2021’  தமிழ் ஈழத் தேசியத் தலைவர், மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான படம் தான், ‘மேதகு’. இதன் தொடர்ச்சியாக, தற்போது ‘மேதகு-2’ ஆகஸ்ட்-19 ஆம் தேதி  முதல் திரையரங்குகளில் உலகம் முழுவதிலும் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்குப் பிறகு (www.tamilsott.com)  தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

‘மேதகு திரைக்களம்’  சார்பில் கிரவுட் பண்டிங் முறையில் தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர்  ‘மேதகு-2’ படத்தினை தயாரித்துள்ளனர்.

கதை மற்றும் வரலாற்று ஆய்வில் முக்கிய பணியாற்றிய சுபனின் தரவுகளை கொண்டு, இரா.கோ. யோகேந்திரன்  இயக்கியிருக்கும் இந்தப்படத்தில், தமிழ் ஈழத்  தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர்  நடித்திருக்க, கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார். எப்படி இருக்கிறது ‘மேதகு 2’.

தமிழ் ஈழத்தில் நடந்த முக்கியமான சம்பவங்களை தொகுத்து படமாக்கியிருக்கிறார், இயக்குனர் இரா.கோ. யோகேந்திரன் . முக்கியமாக ‘கல்லோயா’ படுகொலைகளின் தொடர்ச்சியாக ஜெயிலில் இருக்கும் ரௌடிகளை ஏவி அப்பாவித்தமிழர்களை கொன்று குவித்த சம்பவம் உள்ளிட்ட பல படுபாதக செயல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியத் தலைவர்கள் இந்திராகாந்தி, எம்ஜிஆர், கருணாநிதி சம்பந்தப்பட்ட வரலாற்றுப் பதிவுகளை படமாக்கியிருப்பது படத்தின் முக்கியமான அம்சம். அதிலும் எம்ஜிஆர் – தலைவர் பிரபாகரன் இடையே நடக்கும் உரையாடலில் கருணாநிதி குறித்த பேச்சு வரும்போது தியேட்டரில் சிரிப்பு அலைகள்! சில சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் தலைவர் பிரபாகரனை மிரட்டிய சம்பவம்.

இன்னும் இது போன்ற பல படங்கள் வரவேண்டும்!