மிருகா – விமர்சனம்

விவாகரத்தான, தனியாக வசிக்கும், வசதியான இளம்பெண்களை மயக்கி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதே ஶ்ரீகாந்தின் தொழில்.

ஶ்ரீகாந்தின் காதல் வலையில் விழும் பெண்களுக்கு அவரது சுயரூபம் தெரிய வரும்போது, அந்தப்பெண்களை கொலைசெய்துவிட்டு அடுத்த பெண்ணைத் தேடிச்செல்வார்.

பெரும் கோடீஸ்வரியான ராய் லக்‌ஷ்மியை, ஶ்ரீகாந்த் தன்னுடைய நயவஞ்சக காதல் வலையில் விழச்செய்கிறார். இதை தெரிந்து கொள்ளும் ஒரு பெண் ஶ்ரீகாந்தை பிளாக்மெயில் செய்கிறார்.

இதனால் கடும்கோபத்திற்கு ஆளாகும் ஶ்ரீகாந்த், அந்தபெண்ணை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார். அவர் நினைத்தது போல் நடந்ததா? ராய் லக்‌ஷ்மி அவரிடமிருந்து தப்பித்தாரா.. இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

காதல் பாட்டுப்பாடி பெண்களுடன் மரங்களைச் சுற்றி வந்த ஶ்ரீகாந்த் வில்லனாக நடித்திருக்கிறார். சுத்தமாக எடுபடவில்லை! ஒரே மாதிரியான ரியாக்‌ஷன். இயக்குனர் பார்த்திபன்,  அவருக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை.

ஶ்ரீகாந்தை போலவே ராய் லக்‌ஷ்மியின் நடிப்பும்! ஆனால், ஶ்ரீகாந்த் தன்னை கொலை செய்ய வரும் போது அவரிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் போது சற்று பரவாயில்லை.

புலியுடன் ராய் லக்‌ஷ்மியும் அவரது குடும்பமும் மாட்டிக்கொள்ளும் காட்சிகள் திக்..திக் என படமாக்கப்பட வேண்டியவை. ஆனல் புலியுடன் ‘கண்ணாமூச்சி’ விளையாடுவதை போல் படமாக்கியிருக்கிறார்கள்.

இயக்குனர் பார்த்திபனின் நேர்த்தியற்ற திரைக்கதை மற்றும் தேவையற்ற காட்சிகளால் அவரும் குழம்பி, ரசிகர்களையும் குழப்பியுள்ளார்.