ஜூனியர் என்.டி ஆரின் அடுத்த படம் ‘தேவாரா’!

‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, என்டிஆர் தற்போது தனது ஜனதா கேரேஜ் இயக்குநரான கொரடலா சிவாவுடன் ‘என்டிஆர் 30’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மூலம் தெலுங்கில் ஜான்வி கபூர் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் அறிமுகமாகின்றனர். இதில் சைஃப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். இந்த ஆண்டு, என்டிஆர் பிறந்தநாள் அவரது தீவிர ரசிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக மாறியது. ஏனெனில், ‘என்டிஆர் 30’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை அவரே இன்று வெளியிட்டார்.

இந்த போஸ்டரில் லுங்கி அணிந்த என்டிஆர் கையில் பெரிய ஆயுதத்துடன் தீவிரமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அடர் கருமை நிறத்திலான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் என்டிஆர் ஒரு மூர்க்கமான அவதாரத்தில் உள்ளார். அவர் பாறைகளின் மேல் நிற்க அவருக்கு அருகில் படகில் கிடக்கும் சடலங்களின் குவியலையும் காணலாம்.

இந்த தீவிர போஸ்டரே எல்லோருக்கும் பயத்தை உண்டாக்குகிறது. ‘என்டிஆர் 30’ திரைப்படம் ‘தேவாரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சுவாரசியமான தலைப்பும், சக்தி வாய்ந்த முதல் பார்வையும் படத்தின் எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. என்டிஆரின் இந்த பிரம்மாண்டமான தோற்றத்தை ரசிகர்கள் கொண்டாடி கமெண்ட்டில் இதய மற்றும் ஃபயர் எமோஜிகளை பதிவு செய்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற டெக்னீஷியன்கள், பல்துறை நடிகர்கள் என இந்தியா முழுவதும் உள்ள என்.டி.ஆர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், படம் பாக்ஸ் ஆபிஸில் அடுத்த கட்ட பரபரப்பை உருவாக்கும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் பேனர்களின் கீழ் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா கே இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் 2024 ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகிறது. ஸ்ரீகர் பிரசாத் இந்தப் படத்தில் படத்தொகுப்பு செய்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை சாபு சிரில் கையாளுகிறார்.