‘படை தலைவன்’ (படைத்தலைவன்) – விமர்சனம்!

‘வி ஜே கம்பைன்ஸ்’, ‘தாஸ் பிச்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்க, ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள படம் படைத்தலைவன். இயக்குநர்  U. அன்பு இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படத்தில், சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடா ராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ்,   S.S.ஸ்டான்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரைக்கதை, வசனம் பார்த்திபன் தேசிங்கு. ஒளிப்பதிவு, எஸ் ஆர். சதிஷ்குமார். இசை இளையராஜா.

தமிழுக்கு , வேறு எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் உண்டு. அவ்வாறான சிறப்புகளில் ஒன்று, ஒற்றெழுத்து. ஒற்றெழுத்து இருந்தால் ஒரு பொருளும், இல்லாவிட்டால் ஒரு பொருளும் விளங்கும். இது தமிழுக்கே உள்ள தனிச்சிறப்பு. சரி, எதற்காக? இந்த விளக்கம். படை தலைவன் என்பது சரியா, படைத்தலைவன் என்பது சரியா? இதில், படைத்தலைவன் என்பதே சரி.

மூட நம்பிக்கை குறித்து விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் படம் எடுத்த இயக்குநர், யு அன்பு. அவர் கொண்ட மூட நம்பிக்கையில், ‘படை தலைவன்’ என பெயரிட்டதாக சொல்கிறார்கள். சரி கதைக்கு வருவோம்.

மண்பாண்ட தொழில் செய்யும் கஸ்தூரி ராஜா, மகன் சண்முகப் பாண்டியன், மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களோடு ‘மணியன்’ என்று பெயரிடப்பட்ட யானையும் குட்டியிலிருந்தே 20 வருடங்களுக்கு மேலாக  வளர்ந்து வருகிறது. மணியனை, தனது உடன் பிறப்பாகவே நினைத்து அதனுடன் பழகி வருகிறார், சண்முகப் பாண்டியன். கஸ்தூரி ராஜா வாங்கிய கடன், கழுத்தை நெறிக்கும் அளவிற்கு வட்டியுடன் வளர்ந்து நிற்கிறது. இதிலிருந்து விடுபட, யானையை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்ட முடிவு செய்கிறார், சண்முகப் பாண்டியன்.  ஆனால், சிலரின் சதிவேலை காரணமாக, யானை ஒடிசாவுக்கு கடத்தப்படுகிறது. அந்த யானையை, ‘கருடன்’ ராம், வன பத்ரகாளிக்கு பலி கொடுக்க முடிவு செய்கிறார். இந்த விஷயம் சண்முகப் பாண்டியனுக்கு தெரிய வர, அதை காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே ‘படைத்தலைவன்’ படத்தின் மீதிக்கதை.

சண்முகப் பாண்டியன், திடகாத்திரமான உடலமைப்போடு, ஆக்‌ஷன் கதாநாயகனுக்குரிய அம்சங்களோடு இருக்கிறார். ஆனால் கதையோ, திரைக்கதையோ அதற்கு உதவில்லை. நல்ல இயக்குநர் கிடைத்தால், அவரது திறமை வெளிப்படலாம்!

சண்முகப் பாண்டியனின் அப்பாவக நடித்திருக்கும் கஸ்தூரி ராஜா, குறிப்பிடும்படி நடித்திருக்கிறார். சில இடங்களில் அதீத நடிப்பு. அதை குறத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இவர்களைத்தவிர, கருடா ராம் தனது வேலையைச் சரியாக செய்திருக்கிறார்.

மற்றபடி, யாமினி சந்தர், முனீஷ்காந்த்,  அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ்,   S.S.ஸ்டான்லி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் S.R.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு, குறை சொல்லும் அளவில் இல்லை.

இசையமைத்திருக்கிறார், ‘இசைஞானி’ இளையராஜா.

திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்,  பார்த்திபன் தேசிங்கு. அவரது பங்கு படத்திற்கு உதவவில்லை! திரைக்கதையின் தடுமாற்றம், இயக்குநரிடத்திலும் இருக்கிறது. அநேக காட்சிகள் நம்பும்படியாகவோ, ரசிக்கும்படியாகவோ இல்லை! போதிய பயிற்சி இன்றி எடுக்கப்பட்ட படம் போல் இருக்கிறது.

மொத்தத்தில், இயக்குநர் U. அன்பு இயக்கத்தில், உருவாகியிருக்கும் ‘படை தலைவன்’ எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை!