டொவினோ தாமஸ் – கயாடு லோஹர் நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது!

‘வேர்ல்ட் வைட் பிலிம்ஸ்’ மற்றும் ‘சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பில், டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு நடந்த நிகழ்வில், டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,

”இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,” என்றார்.

நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,

”இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில்  விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.

நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை.  இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.

இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.

எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. ” என்றார்.