பரமசிவன் பாத்திமா. இப்படத்தினை, ‘லட்சுமி கிரியேஷன்ஸ்’ சார்பில், தயாரித்து, இயக்கியிருக்கிறார், இசக்கி கார்வண்ணன். இப்படத்தில் விமல், சாயாதேவி ஆகிய இருவரும், கதையின் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும், இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், எம்.சுகுமார், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்க, தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்.
திண்டுக்கல்லின் ஒரு மலை கிராமத்தில், சுப்ரமணியபுரம், யாக்கோபுரம், சுல்தான் பேட்டை என மக்கள், மூன்று ஊர்களில் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது இவர்களுக்குள் கடுமையான ‘மத’ மோதல்களும் நடக்கிறது. அவ்வாறான ஒரு மோதலில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதனால், அங்கு மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க போலீஸ் படை குவிக்கப்படுகிறது. ஆனால் அதன் பிறகும் தொடர்ச்சியாக, மர்மமான முறையில் கொலைகள் நடக்கிறது. நீண்ட தேடுதலுக்குப் பிறகு போலீஸார் கொலையாளிகளை நெருங்கும் போது, அமானுஷ்யமான பல நிகழ்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், போலீஸார் கொலையாளிகளை கைது செய்தார்களா, இல்லையா? என்பது தான், ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் கதை.
கிறிஸ்துவ மதபிரச்சாரத்தினை, பிரச்சனையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சாதிய ரீதியான படங்கள் வந்து, அன்மையில் சாதிக்கலவரங்கள் மீண்டும் துளிர் விடும் நிலையில், இந்தப்படம் தேவையா எனும் கேள்வி எழுகிறது. இருபக்கமும் சமமாக பாவிக்காமல், ஒரு சார்பாக படத்தினை இயக்கியிருப்பது படத்தின் பலவீனமாக இருக்கிறது. ஒரு சார்பினரை மட்டும், திருப்தி படுத்துவதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளதைப் போல் இருக்கிறது.
‘பரமசிவன்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமல், ‘பாத்திமா’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாயாதேவி ஆகிய இருவரில், சாயாதேவி ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.
‘ஜெனிஃபர்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேஷ்விதா, தனது கவர்ச்சி நடனத்தின் மூலமும், வசீகரிக்கும் கண்களாலும் இளைஞர்களை கவருகிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளரும் , இயக்குநருமான இசக்கி கார்வண்ணன், படம் முழுவதும் இடம் பெறுகிறார். நடிக்க முயற்சித்திருக்கிறார்.
கிறிஸ்தவ பாதிரியாராக நடித்திருக்கும் எம். எஸ். பாஸ்கர், வழக்கமான நடிப்பு. க்ளைமாக்ஸில் அவர் அடிக்கும் அந்தர் பல்ட்டி, ஏற்றுக்கொள்ள முடியாதது.
படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் வில்லனாக நடித்திருக்கிறார். ஓகேவான நடிப்பினையும் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவும் ஓகேதான்.
தீபன் சக்கரவர்த்தியின் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே. பாடல்கள், எங்கேயோ கேட்ட மாதிரியாகவே இருக்கிறது.
‘பரமசிவன் பாத்திமா’ – ஒரு சார்பான மதபிரச்சாரம்!