‘ஆபாச வீடியோ’ பெண்களைக் கைது செய்ய வேண்டும் – இயக்குநர் பேரரசு!

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா  சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசினார்.

அவர் பேசும்போது இங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா என்ற பாத்திரத்தின் பெயர் தான் ஞாபகம் வருகிறது.சொந்தப் பெயரை விட்டுவிட்டு கதாபாத்திரத்தின் பெயர் பேசப்பட்டால் அதுதான் அந்தப் பாத்திரத்தின் வெற்றி என்று சொல்லுவேன். நான் ‘திருப்பாச்சி’யில் பசுபதியை நடிக்க வைத்து இருந்தேன். அந்த படம் வெளியாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் பசுபதி என்னிடம்  பேசினார் .”என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள்?” என்றார்.

என் படத்தில் நல்ல கேரக்டர் தானே அவருக்குக் கொடுத்து இருந்தேன். அவருக்கு நல்ல பெயர் தானே கிடைத்தது ஏன் இப்படிச் சொல்கிறார் என்று நினைத்து என்ன ? என்றேன்.  “என்னை எங்கே பார்த்தாலும் பட்டாசு பாலு என்றுதான் அழைக்கிறார்கள். பசுபதி என்று யாரும் அழைப்பதில்லை ” என்றார்.அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரம் மக்களிடம் போய்ச் சேர்ந்து இருந்தது.

இந்தப் படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றிப் பேசுகிறது. அதற்கு எதிராகப் பேசுகிறது என்று சொன்னார்கள் . சிலரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் தான் ஏற்படுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது

டிக் டாக் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற பேச்சும் சகிக்க முடியவில்லை. குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் அருவருப்பானவை. பார்க்க சகிக்க முடியவில்லை.அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே தள்ளவேண்டும். அந்த அளவிற்கு  அவர்களது செயல்பாடுகள் இருக்கின்றன .இவர்களை விட்டு வைக்கக் கூடாது. ஜெயிலில் தள்ள வேண்டும் நாட்டில் நடக்கும் பல கலாச்சார சீர்கேடுகளுக்குக் காரணம் செல்போன்கள் தான் .தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் . இதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு கவனமாக வேண்டும். நம் சுதந்திரம் இப்படி மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

அளவற்ற சுதந்திரம் தான் நாட்டைக் கெடுக்கிறது.செல்போனில் ஃபுல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும்.அளவில்லாமல் பேசும் வாய்ப்பு தான் அத்தனை தவறுகளுக்கும் வழிவகுக்கிறது. நாடு இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது நாம் எத்தனை படம் எடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை.  பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பெண்களைத் தவறாக பயன்படுத்துவது  என்று பல இடங்களிலும் நடக்கிறது.நம்பிக்கையோடு அனுப்பி வைக்கப்படும் இடத்தில் சில ஆசிரியர்கள்,நம்பிக்கையோடு வணங்கச் செல்லும் இடத்தில் சில மதகுருமார்கள் என்று எத்தனை வடிவங்களில்  இருக்கிறார்கள்.

பெண்கள்  விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வாத்தியாராக இருந்தாலும் சரி மதகுருமார் களாக சாமியார்களாக அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி,சரியான தண்டனை கொடுக்க வேண்டும். நாம் நம்பிக்கை வைக்கும் அவர்கள் இப்படி நடந்து கொள்வது பெரிய நம்பிக்கை துரோகமாகும். அப்படித் துரோகம் செய்பவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும்.

சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம் அதில் மக்களை சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் தான் இருக்க வேண்டும். கருத்து சொல்லவேண்டும் விழிப்புணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்டிருந்தால் பொழுது போக்கு தளத்தை விட்டு சினிமா விலகிவிடும்.  அப்புறம் மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது. சினிமா சரியாக இருக்கிறது என்றால் பொழுதுபோக்கு படங்கள் வந்தால் தான் சரியான பாதையில் செல்கிறது என்று அர்த்தம்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒரு நாள் செய்தியாகக் கடந்து போய் விடுகின்றன – எத்தனையோ செய்திகளைப் பார்க்கிறோம்;நாம் மறந்துவிடுகிறோம். பொள்ளாச்சி என்னாச்சு? இப்போது யார் அதைப் பற்றிப் பேசுகிறார்கள்? எல்லாம் செய்தியாக கடந்து போய்விடுகின்றன.

அப்படித் தவறுகள் செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவது என்றால் கூட ஏதோ நாட்டுக்கு தியாகம் செய்துவிட்டு போய் வந்தது போல் 3 மாதம் 6 மாதம் என்று போய்விட்டு , நாட்டுக்குத் தியாகம் செய்து விட்டு சென்று வந்தது போல் மகிழ்ச்சியாக வருகிறான். இந்தப் படம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” இவ்வாறு பேரரசு பேசினார்.