பொன்மகள் வந்தாள் – விமர்சனம்

அமேசான் ‘பிரைம் வீடியோ’ தளத்தின் மூலமாக உலகத் தமிழ் சினிமா ரசிகர்களுக்கான இன்னொரு பொழுதுபோக்கு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மென்ட்’ நிறுவனம்.

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்து  பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியிருந்த படம் ‘ பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜே.ஜே.ஃபிரெட்ரிக் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோதிகாவுடன் பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், வினோதினி வையநாதன்  மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘பொன்மகள் வந்தாள்’ எப்படியிருக்கிறது?

மொத்த ஊட்டியையும் ரத்தத்தில் உறையவைக்கும் சம்பவமாக அடுத்தடுத்து பல சிறுமிகள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். இதற்கு காரணமான வட இந்திய சைக்கோ பெண் என்கவுண்டர் செய்யப்படுகிறார்.

‘பெட்டிசன்’ பெத்துராஜ் ( கே.பாக்யராஜ் ) அவரது மகள் வெண்பா ( ஜோதிகா ), இருவரும் உள்ளூரில் நடக்கும் சின்னச் சின்ன தவறுகளை கோர்ட் மூலமாக தட்டிக்கேட்கும் சூப்பர் ஹீரோக்கள்! இவர்கள் ‘என்கவுண்டர்’ செய்யப்பட்ட வட இந்திய சைக்கோ பெண்ணின் வழக்கை மறு ஆய்வு செய்ய மனு செய்து விசாரணைக்கு கொண்டு வருகின்றனர்.

இதனால் ஊட்டியின் மிகப்பெரும் செல்வாக்குப் படைத்த வரதராஜன் ( தியாகராஜன் ) வழக்கினுள் கொண்டுவரப்படுகிறார். அதற்கு பிறகு பலப்பல யூகிக்க முடியாத சில திகிலும், திருப்பங்களும் க்ளைமாக்ஸ் வரை தொடர்கிறது. திரைக்கதைக்கு சபாஷ்!

பார்த்திபனுக்கும், ஜோதிகாவிற்கும் இடையே நடைபெறும் வழக்காடும் வாதம் ஆக்ரோஷமாக இருக்காது! ஆனால் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தும். நடிகர், நடிகைகளின் மிகச்சரியான தேர்வும், தேவையின்றி திணிக்கப்படாத அழுத்தமான வசனங்களும் படத்தின் வெற்றி.

ஆர்ப்பாட்டமில்லாத அழுத்தமான நடிப்பில் அசத்துகிறார் ஜோதிகா. வெற்றியிலேயே மிதந்த ஒரு திமிர்ப்பிடித்த பப்ளிக் ப்ராஸிக்யூட்டராக ரா.பார்த்திபன்  அசால்ட்டு செய்கிறார். வரதராஜனாக வரும் தியாகராஜன் ஸ்டைல், நடை, பேச்சு எ!ல்லாமே டெரர்!

இப்படி படத்தில் நடித்த கே.பாக்யராஜ், பிரதாப் போத்தன், சுப்பு பஞ்சு  மற்றும் வினோதினி வைத்யநாதன் என அனைவரும் கச்சிதமாக கதைக்கு பொருந்தி இருக்கிறார்கள்.

ராம்ஜியின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்தின் தரத்தினை மேம்படுத்துகிறது.

சில இடங்களில் அமெச்சூரிசம் ஃபீல் இருந்தாலும் இயக்கத்தெரிந்த இயக்குனர்களின் வரிசையில் இடம்பிடிப்பார் ஜே.ஜே..ஃபிரெட்ரிக்.

தன்னுடைய ‘2டி எண்டெர்டெயின்மென்ட்’ நிறுவனத் தயாரிப்பில் வெளியாகும் படங்களின் மூலம் சமூகத்திற்கு விழிப்புணர்வும், கடுமையான சட்டங்களும் தேவை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூர்யா இந்தப்படத்திலும் அதை வலியுறுத்தியுள்ளார்.

https://www.primevideo.com/