பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, முதன் முறையாக இணையும் பான் இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியது.இந்த மிக பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி கனெக்ட்ஸ் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் JB மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நாராயண ராவ் கொண்ட்ரொல்லா இணைந்து தயாரிக்கின்றனர். சார்மி கௌர் இப்படத்தை வழங்குகிறார். தெலுங்கு திரையுலகின் லக்கி சார்ம் எனக் கொண்டாடப்படும் சம்யுக்தா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகர்கள் தபு மற்றும் விஜய் குமார் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மாண்டமான செட் ஒன்றில், விஜய் சேதுபதி, சம்யுக்தா மற்றும் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு தொடர்ந்து எந்த இடைவெளி இல்லாமல் நடைபெற உள்ளது.
இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் விஜய் சேதுபதியை புதிய அவதாரத்தில் காட்ட, இந்த படத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வருகிறார். பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படம், இந்தியா முழுவதும் ரசிகர்களை ஈர்க்கும் நோக்கத்தில், தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.