தமிழ் சினிமா நடிகர், மேடை நாடகக் கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு, இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார். ஒய் ஜி மதுவந்தியின் மகனான ரித்விக் ராவ் வட்டி, ‘சாருகேசி’ திரைப்படத்தில் தேனிசைத் தென்றல் தேவா இசையில் பாடகராக அறிமுகமாகியுள்ளார். மேலும் அப்படத்தில் சிறு கேமியோ ரோலில் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.
2003-ஆம் ஆண்டில் பிறந்த ரித்விக் ராவ் வட்டி, ஐந்து வயதிலிருந்தே இசை கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார். அந்த வயதிலேயே கார்நாடிக் கச்சேரி பாடல்களும், மேலைநாட்டு பியானோ இசையும் பயில ஆரம்பித்து விட்டார். இளம் வயதிலேயே காரின் எஞ்சின் ஒலி, கிரிக்கெட் பந்து மற்றும் பேட் சத்தம் போன்றவற்றின் ஸ்ருதி மற்றும் பிட்ச்சை (pitch) கண்டறியத் துவங்கி, இன்று மேடையில் தன்னம்பிக்கையுடன் பாடக்கூடிய இளம் இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார்.
ஸ்ரீமதி உஷா நரசிம்மனின் வழிகாட்டுதலின் கீழ் ப்ரஹத்வனி நிறுவனத்தில் கார்நாடிக இசையை பயின்றுள்ளார். கூடவே, ஊட்டியில் உள்ள Good Shepherd International School பள்ளியில் தங்கிப் படிக்கும் காலத்திலும் தனது பியானோ பயிற்சியை தொடர்ந்துள்ளார். இசையில் தத்துவ நெறிகளை தவறாமல் பின்பற்றும் பாணியுடன், புதுமையை இசையில் கொண்டு வரும் திறமையான கலைஞராக அவர் உருவெடுத்துள்ளார். இசையில் திறமையை மட்டுமின்றி, இளைய மாணவர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் கற்றுத் தரும் ஆர்வமுமுள்ளவராகவும் திகழ்ந்து வருகிறார் ரித்விக். மேலும் தற்போது திரு TR வாசுதேவன் அவர்களிடமும் இசை கற்று வருகிறார்.
ரித்விக், சென்னை நகரின் முக்கிய சபாக்களில் பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். அரசாங்கத்தின் கலாசார விழாக்களிலும் பாடியுள்ளார். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் பல்வேறு ரகங்களான லைட் மியூசிக் மற்றும் சங்கீத பாடல்களிலும் தனித்திறமை கொண்டிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் KM மியூசிக் கன்சர்வட்டரியில் ஆடியோ இன்ஜினியரிங் டிப்ளோமாவை முடித்துள்ள இவர், இசை தயாரிப்பிலும் வல்லவராக உருவெடுத்து வருகிறார்.
ரித்விக், புகழ்பெற்ற நடிகை சாவித்திரி மற்றும் நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் பேரனாவார். பாரம்பரிய மேடை நாடக கலைஞர் ஶ்ரீ ஒய்.ஜி. பார்த்தசாரதி, மற்றும் கல்வி துறையின் முன்னோடி ஸ்ரீமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி அவர்களின் கொள்ளும் பேரன். மேலும், இவர் பிரபல நடிகரும் நாடகக் கலைஞருமான ஶ்ரீ ஒய்.ஜி. மகேந்திரா அவர்களின் பேரனும், நாடகக் கலைஞரான ஒய்.ஜி. மதுவந்தி அவர்களின் மகனுமாவார்.
இளம் வயதிலேயே இசையிலும், இசை தயாரிப்பிலும் பல்வேறு தளங்களில் தன்னையோட்டிக் காட்டும் ரித்விக் ராவ் வட்டி, தமிழ் இசை உலகிற்கு ஒரு புதிய திறமையாளராக அறிமுகமாகியுள்ளார். தற்போது சாருகேசி திரைப்படத்தில், தேனிசைத் தென்றல் தேவா இசையில் ஒரு பாடல் பாடி, பாடகராக மட்டுமின்றி, அப்படத்தில் ஒரு சிறு கேமியோ ரோலில் நடித்து நடிகராகவும் களமிறங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஒரு நல்ல பாடகராக மட்டுமின்றி ஒரு இசையமைப்பாளராகவும் ஆக வேண்டும் என்பதே என் ஆசை எனத் தெரிவித்துள்ளார் ரித்விக்.