பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்கும் இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் ’மெஜந்தா’ படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியது!
நல்ல கதையம்சம் சார்ந்த படங்களைத் தயாரிப்பதன் மூலம் தங்களை திரைத்துறையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொண்ட பல தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் களமிறங்கியுள்ளது. நல்ல எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தயாரிப்பதை நோக்கமாக கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘மெஜந்தா’ திரைப்படம். துடிப்பான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக உருவாக இருக்கும் இதை ‘இக்லூ’ புகழ் பரத் மோகன் இயக்குகிறார். இதில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த வாரம் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் பெரும்பகுதி சென்னையிலும் சில பகுதிகள் கோத்தகிரியிலும் படமாக்கப்படவிருக்கிறது.
தயாரிப்பாளர்கள் டாக்டர் ஜே.பி. லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் கே. ராஜு கூறுகையில்,
“காதல், நகைச்சுவை மற்றும் விஷூவலாக நிச்சயம் ‘மெஜந்தா’ சிறப்பான படமாக இருக்கும். எங்கள் முதல் தயாரிப்பு முயற்சியாக ‘மெஜந்தா’ திரைப்படம் கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இயக்குநர் பரத் மோகன் கதை சொன்னபோது அதை விஷூவலாக பார்க்க முடிந்தது. அழகான சினிமாட்டிக் ஃபீல்- குட் எண்டர்டெயினர் கதையாக இந்தப் படம் பார்வையாளர்களுக்கு இருக்கும்” என்றார். படத்தின் கதைக்களம் பற்றி கேட்டபோது, “கதைக்களம் பற்றி இனி வரும் காலங்களில் சொல்கிறோம். ஒன்லைனில் சொல்ல வேண்டும் என்றால் ’அவள் சூரிய உதயம், அவன் அந்தி சாயும் நேரம். இருவரும் – ஒருபோதும் சந்திக்க விரும்ப மாட்டார்கள். ஆனால், பிரபஞ்சம் அந்த நிழலை ஒரே புள்ளியில் இணைக்கிறது’ என்ற தீம்தான் இந்தப் படம்” என்றார்.