ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இரு மொழிகளில் உருவாகும் ‘மாணிக்’.

எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனம், நட் மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தங்களின் அடுத்த தயாரிப்பாக ‘மாணிக்’ என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தி மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில், உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’, ‘திட்டம் இரண்டு’, ‘கனா’, ‘வடசென்னை’ போன்ற தமிழ் படங்களிலும், ‘சுழல்’ எனும் வலைதள தொடரிலும், ‘டாடி’ எனும் இந்தி படத்திலும் நடித்த சிறந்த நடிகைக்காக விருது பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தியில் வெளியான ‘லுடோ’, ‘ஜக்கா ஜாசூஸ்’ மற்றும் ‘சத்ரசல்’ ஆகிய படங்களின் கதாசிரியரான சாம்ராட் சக்கரவர்த்தி, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேசுடன் நடிகை சம்யுக்தா சண்முகநாதன், நடிகர் விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் தற்பொழுது சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரிலான படைப்புகளுக்கு பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை ரசிகர்களை ஈர்க்கும் இந்த வகையான சினிமாவிற்கு இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருப்பதை நாங்கள் காண்கிறோம்.

‘மாணிக்: படத்தைப் பற்றி எண்டேமால் ஷைன் நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ரிஷி நேகி பேசுகையில்,

” திறமையான இயக்குநர் சாம்ராட் சக்கரவர்த்தியின் இயக்கத்திலும், நட்சத்திர நடிகர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பிலும் ‘மாணிக்’ படத்தின் உயிரோட்டமான கதைக்களத்தை பார்வையாளர்களுக்கு சமர்ப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

‘மாணிக்’ படத்தை பற்றி நட்மெக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் வருண் திரிபுராநேனி பேசுகையில்,

” எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் இரண்டாவது படத்திற்காக, எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இயக்குநர் சாம்ராட் சக்கரவர்த்தி இந்த கதையை சொன்னபோது, நாங்கள் இதன் தயாரிப்பில் உற்சாகமாக களமிறங்கினோம். திறமையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படக்குழுவில் இணைந்திருப்பதால், இந்தப் படம் தரமான படைப்பாக உருவாகும். இதனை நாங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நைனிடாலில் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.