‘தக் லைஃப்’ (விமர்சனம்) பார்க்கக்கூடிய, ஆக்‌ஷன் டிராமா!

‘உலகநாயகன்’ கமல்ஹாசன், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அலி ஃபாசல், சஞ்சனா, வையாபுரி, மகேஷ் மஞ்சுரேக்கர், வடிவுக்கரசி, பகவதி பெருமாள், பாபுராஜ், ரோஹித் ஷராஃப், அர்ஜுன் சிதம்பரம், சின்னி ஜெயந்த், சேத்தன் உள்ளிட்ட பலரது நடிப்பினில், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியிருக்கும் படம், தக் லைஃப். மணிரத்னம் எழுதி, இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்க, ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவினை செய்திருக்கிறார். படத்தொகுப்பு  ஸ்ரீகர் பிரசாத்.

தக் லைஃப் திரைப்படத்தினை, ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’, ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க, ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குண்டர்களின் (Thugs) வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பே, தக்லைஃப் படத்தின் கதை.

அரசியல், அதிகாரங்களின் துணையோடு, டெல்லியை ஆட்டிப்படைக்கும் குண்டர்களில் முக்கியமன குண்டர், (கமல்ஹாசன்) ரங்கநாயக சக்திவேல் நாயக்கன். இவருக்கும்  (மகேஷ் மஞ்ச்ரேகர்) சதானந்த் என்ற இன்னொரு குண்டருக்கும் நடக்கும் கோஷ்டி மோதலில், வீடுகளுக்கு செய்தித்தாள்களை போட்டு வரும் (சிலம்பரசன்) அமரனின் (குமரவேல்) அப்பா சுட்டுக்கொல்லப்படுகிறார். இந்த களேபரத்தில், அமரன், தனது தந்தையை பறிகொடுப்பதோடு, தன் (ஐஸ்வர்யா லக்‌ஷ்மி) தங்கை சந்திராவையும் தொலைத்து விடுகிறார். நிர்கதியான அமரனை, சக்திவேல் தத்து எடுத்துகொள்வதோடு, சந்திராவை எப்படியாவது கண்டுபிடித்து தருவேன். என்ற வாக்குறுதியையும் கொடுக்கிறார்.

சக்திவேலால், சிறுவயதிலிருந்தே சட்டவிரோத செயல்களால் வளர்க்கப்படும் அமரன், சூழ்நிலை காரணமாக, சக்திவேலின் மொத்த கோஷ்டியையும் நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்கிறார். இதன் காரணமாக சக்திவேலின் (நாசர்) அண்ணன் பெருமாளுக்கு, சக்திவேல் மீது வன்மம் ஏற்படும் அதே நேரத்தில், அமரன் மீது சக்திவேல் சந்தேகம் கொள்கிறார். அதனால், பெருமாளின் தூண்டுதலின் காரணமாக, அமரன் சக்திவேலை கொலை செய்ய திட்டமிடுகிறார். அது நடந்த்தா, இல்லையா? என்பதை, எமோஷனல் கலந்த ஆக்‌ஷன் திரைக்கதை மூலம், விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் மணிரத்னம்.

கமலின் முதல் இன்ட்ரோவே மரண மாஸ்! அதாவது,  ‘சாவை பல முறை நேரிலே பார்த்திருக்கிறேன்’, ‘இது எனக்கும் எமனுக்கும் நடக்கும் கதை’. என, வசனம் பேசியபடி திரையில் தோன்றும் போது, தியேட்டருக்குள் தீப்பிடிக்காத குறை! ரசிகர்கள் ஆராவாரம் அடங்குவதற்குள் வசனங்கள் போய் விடுகின்றன! ‘’இன்னொரு முறை பார்த்தே ஆக வேண்டும்.’’ என்பது மாதிரியான இன்ட்ரோ சீன்!!!

உலகநாயகன் கமலஹாசன், தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை பரவசப்படுத்துவது போல், இந்தப்படத்திலும் சிலவிதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்குள் தன்னை மறைத்து கொள்ளாத நடிகர்களில், முதன்மையானவர், முக்கியமானவர். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி நடித்திருக்கிறார்.  அதாவது, ஜோஜு ஜார்ஜுடன் ரயில்வே ஸ்டேஷனில் மோதும் காட்சியினை சொல்லலாம். குறிப்பாக, சிம்புவுடன் மோதும் காட்சி சூப்பர்! (சீட்டிங் ஷாட்ஸ் இருந்தாலும்!) இந்த வயதிலும், அப்படி ஒரு மொரட்டு ஃபைட்…! ஒவ்வொரு காட்சியிலுமே அட்டகாசம்! எப்படி, இவரால் மட்டுமே முடிகிறது?! மனைவி அபிராமியுடன் கெஞ்சி, கொஞ்சி குலாவும் போதும், ஆசை நாயகி த்ரிஷாவுடன் சல்லாபம் கொள்ளும்போதும் இரு வேறுவிதமான நடிப்பினை கொடுத்து அசரடிக்கிறார். அதே போல், நாசரை பாலத்திலிருந்து தள்ளிவிடும் போதும், ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை அடையாளம் கண்டு கொள்ளும் போதும் ஒவ்வொரு காட்சியிலும், வெவ்வேறுவிதமான உணர்வுகளை தந்து, நடிப்பில் தனக்கு நிகர் தானே என நிரூபிக்கிறார்.

சிலம்பரசன் டி ஆர், இன்னொரு பிறவிக் கலைஞன். உலக நாயகன் கமலுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார். என்றே சொல்ல வேண்டும். தோற்றத்திலும், நடிப்பிலும் அசத்தல்.  அவரது இன்ட்ரோ சீன் மாஸ்! க்ளைமாக்ஸ் காட்சியில் கமலுடன் மோதும் சண்டைக்காட்சி சூப்பர். த்ரிஷாவைத் தள்ளிகோண்டு போய், கமல் பேசும் டைலாக்கினை அவரிடம் சிம்பு பேசும்போது, ‘நக்கல்யா’ என சொல்லத் தூண்டுகிறது. சிம்புவின் இந்தச்செயல் அசல் குண்டர்களை நினைவு படுத்துகிறது. இரு ரௌடிகளுக்குள் நடக்கும் சண்டையில், ஒருவனை கொன்றுவிட்டு, அவனது காதலியையோ அல்லது மனைவியையோ அபகரிப்பது. (அண்ணன் – தம்பிகளே உண்டு) சென்னையில் நடந்த சில உண்மை சம்பவங்களை நினைவூட்டுகிறது.

த்ரிஷாவா, இவ்ளோ ஃப்ரஷ்ஷா? என கேட்கத்தோன்றும் அளவில் அவரது தோற்றம்.  பொதுவாக நடிகைகள் நிராகரிக்கும் கதாபாத்திரத்தினை ஏற்று நடித்திருக்கிறார். ஆனால்,  சில காட்சிகள் என்றாலும் அட்டகாசமான நடிப்பு! கமலுக்கும், சிம்புவுக்கும் நடுவே சிக்கித் திணறுவதை, தனது திறமையான நடிப்பின் மூலம் அழகாக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அபிராமின்னா, சும்மாவா? எனும் அளவிற்கு சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிம்புவின் தங்கையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, சிறப்பு கவனம் பெறுகிறார். சூப்பர்!

மற்றபடி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அலி ஃபாசல், சஞ்சனா, மகேஷ் மஞ்சு ரேக்கர், அசோக் செல்வன், வையாபுரி,  வடிவுக்கரசி, பகவதி பெருமாள், பாபுராஜ், ரோஹித் ஷராஃப், அர்ஜுன் சிதம்பரம், சின்னி ஜெயந்த், சேத்தன் என அனைவருமே சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையில், பாடல்கள் இனிமை. சில பாடல்கள் இல்லாதது ஏமாற்றம். பின்னணி இசை, செம்ம!

ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு சூப்பரோ.. சூப்பர்.

ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பாராட்டுக்குரியது. க்ளைமாக்ஸ், பாம் பிளாஸ்ட்டில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வசனங்கள் கை தட்டல் பெறும் வகையாக இருக்கிறது.

ஆங்காங்கே ஒரு சில குறைகள் இருந்த போதும், ஆக்‌ஷன் படத்துக்குள் லவ், சென்டிமென்ட், எமோஷன், வெஞ்சென்ஸ் இவைகளை சரி விகிதமாக கலந்து, அனைவரும் பார்க்கும் வகையிலான ஒரு படத்தினை கொடுத்துள்ளார், இயக்குநர் மணிரத்னம்.

‘தக் லைஃப்’ – பார்க்கக்கூடிய, பிரம்மாண்ட ஆக்ஷன் டிராமா.