ட்ரிகர் ஆக்‌ஷன் படம் மட்டுமல்ல! – அதர்வா!

PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா வழங்க, சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி, தான்யா ரவிச்சந்திரன்  நடிக்கும்  திரைப்படம் ‘ட்ரிகர்’.  இப்படம் புதுமையான திரைகதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது.  வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பட வெளியீட்டைமுன்னிட்டு நடந்த பத்திரிகை மற்றும் ஊடக  சந்திப்பில் ட்ரிகர் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது ட்ரிகர் படத்தில்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அருண் பாண்டியன் கூறியதாவது..,

‘நான் நீண்ட வருடங்களுக்கு பிறகு என் மகளுடன் ஒரு படம் நடித்தேன். அதை இயக்குநர் சாம் ஆண்டன் பார்த்துவிட்டு என்னை பார்க்க வந்தார். நல்ல கதையை தேர்ந்தெடுக்கலாம் என்று நான் யோசித்த போது தான் இந்த கதை வந்தது. இந்த டீமுடன் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிக  மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படம் கண்டிப்பாக சுவாரஷ்யமான படமாக இருக்கும் சாம் ஆண்டன் மிக அழகாக படத்தை இயக்கியுள்ளார். என் நண்பர் சின்னி ஜெயந்துடன் மீண்டும் நடித்தது மகிழ்ச்சி. அதர்வா மிக திறமையான நடிகர் மிக கடின உழைப்பை தந்துள்ளார் இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும். படம் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.”

நடிகர் சின்னி ஜெயந்த் கூறியதாவது..,

“இந்த படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை இயக்குனர் வடிவமைத்துள்ளார். ஒரு ஆக்‌ஷன் நிறைந்த ஆங்கில படத்தில் நடித்த அனுபவம் போல் இந்த படம் இருந்தது. அதர்வா உடன் எனக்கு இது முதல் படம். ஆக்சனில் தமிழில்  சிலர் மட்டுமே ஜொலிப்பார்கள் விஜயகாந்த் போல் அதர்வாவின் ஆக்‌ஷன் நடிப்பில்,  என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்த படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றியடையும்.”

நடிகர் அதர்வா கூறியதாவது..,

“ ட்ரிகர், நானும் இயக்குனரும் இணையும் இரண்டாவது படம். நல்ல கதைக்கரு உடைய திரைப்படம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஆக்‌ஷனை தாண்டி படம் உணர்வுபூர்வமான பல விஷயங்களை கொண்டுள்ளது. தயாரிப்பாளர் ஷ்ருதி ஒரு தயாரிப்பாளரை தாண்டி கிரியேட்டிவ்வாக படத்தில் பணிபுரிந்தார். சாம் ஆண்டன் பதட்டமில்லாமல், சாதாரணமாக படத்தை கையாள்வார், அவர் நிச்சயமாக பெரிய இடத்திற்கு செல்வார். அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த் இருவருடைய நடிப்பும்  அபாரமாக இருந்தது. சின்னி ஜெயந்த் சாரை அப்பாவுடன் சூட்டிங் செல்லும் போது பார்த்துள்ளேன் இப்போதும் இளமையாக இருக்கிறார். என்னுடன் காலேஜ் படத்தில் நடிப்பார். படம் தொழில்நுட்ப ரீதியாக பலரது உழைப்பால் நன்றாக வந்துள்ளது. ஒரு நல்ல படத்தை உருவாக்கிய சந்தோசம் எங்களுக்கு இருக்கிறது. இந்த படத்தை குடும்பத்தோடு வந்து அனைவரும் பாருங்கள், இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.”  என்றார்.