குமரிக்கண்டத்தில் நடக்கும் கதை. அமானுஷ்யப்படம், திரிகண்டா!

SVM ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்  ‘த்ரிகண்டா. மணி தெலகுட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் மகேந்திரன் கதாநாயகயாக நடிக்க, ஷ்ரத்தா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சாஹிதி அவான்சா இன்னொரு  கதாநாயகியாக நடித்துள்ளார்.கல்லூரி வினோத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்  & ஷாஜித் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் கேபிள் சங்கர், ஹாரூண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் சீனிவாசன் பேசும்போது,

“தெலுங்கில் நான் மூன்று படங்கள் தயாரித்துள்ளேன். தமிழில் இது எனது முதல் படம். தமிழில் இதை ஏன் தயாரித்திருக்கிறேன் என்றால் குமரிக்கண்டம், பழமையான தமிழர்கள் என இது முழுக்க தமிழுக்கான கதை. இந்த படத்தை துவக்கும்போதே நல்ல மனிதர்கள் இதில் இணைய வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் இயக்குநர் மணி உள்ளே வந்தார். அனைவரும் இதில் வந்தார்கள். நாம் நல்ல கதையை தேர்வு செய்யும்போது, மக்கள் அதை பார்க்க முன்வருவார்கள்.. கடந்த வருடத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அதில் அதிகப்படியான வசூலை கொண்டு வந்தது சின்ன பட்ஜெட் படங்கள் தான். மகேந்திரனை இந்த படத்தின் கதாநாயகனாக தேர்வு செய்வதற்கு காரணம் அவரை எல்லா மொழியில் இருப்பவர்களுக்கும் நன்கு தெரிகிறது. அவர் ஒரு சவுத் இந்தியன் ஸ்டார்” என்று பேசினார்.

நடிகர் கல்லூரி வினோத் பேசும்போது,

“மகேந்திரன் எனக்கு நெருக்கமான நண்பர். அவர் முதலில் கதாநாயகனாக நடித்த விழா திரைப்படத்தில் நானும் நடித்திருந்தேன். நாமெல்லாம் பள்ளிக்கூடம் படிக்கப்போன காலத்தில் மகி அவரது தந்தையுடன் நடிக்க போய்க் கொண்டிருந்தார். இந்த படத்தில் அவர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளருக்கு  நிச்சயம் இந்த படம் லாபத்தை தரும். இந்த படம் வெளியான பிறகு இயக்குநர் மணிக்கு நிறைய படங்கள் தேடி வரும்” என்று பேசினார்.

கதாநாயகி சாஹிதி அவான்ஷா பேசும்போது,

“த்ரிக்கண்டா படம் பவர்ஃபுல் மித்தாலஜி, சைக்காலஜி, ஆக்சன், அற்புதமான விசுவல்ஸ் என எல்லாவற்றையும் உள்ளடக்கி உள்ளது. தமிழ் சினிமா தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த படத்தின் கதையைக் கேட்டபோது எனக்கு எப்படி திரில்லிங்காக இருந்ததோ படம் பார்க்கும் உங்களுக்கும் அதே உணர்வு ஏற்படும்” என்று பேசினார்.

நாயகன் மகேந்திரன் பேசும்போது,

“இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம். மாஸ்டர் படம் எனக்கு தெலுங்கில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. சிறு வயதில் நடித்தபோது நான் தமிழ், தெலுங்கு என மாறிமாறி நடித்தேன். எனக்கு அங்கே நல்ல வரவேற்பை கொடுத்து இருக்கிறார்கள். அப்படி தெலுங்கில் நல்ல படம் நடிக்கலாம் என நினைத்தபோது தான் இயக்குனர் மணியை சந்தித்தேன். இந்த படம் ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று சொல்லலாம். ஒவ்வொரு கட்ட படப்பிடிப்புக்குப் பிறகும் அதை போட்டு பார்த்துவிட்டு இன்னும் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என இயக்குனரும் தயாரிப்பாளரும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். அந்த கஷ்டத்திற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். அப்படி எதிர்பார்த்த ஒரு தெலுங்கு படமாக இந்த படம் இருக்கிறது.

மாஸ்டர் சஞ்சய் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நானே ஒரு குழந்தை நட்சத்திரம், என் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடித்திருப்பதை பார்க்க எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அதேபோல சஞ்சய்க்கும் இந்த சினிமா நிறைய கொடுக்கும். நாட்டாமை படத்தில் கே.எஸ் ரவிக்குமார் எனக்கு மாஸ்டர் மகேந்திரன் என்று பெயர் வைத்தார். எத்தனை காலத்திற்கு இப்படி மாஸ்டர் மகேந்திரன் என்கிற பெயரே தொடரும் என்று நினைத்தபோது ஒரு யுனிவர்ஸ் போல லோகேஷ், விஜய் அண்ணா கூட்டணியில் மாஸ்டர் என்கிற படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் என் பெயருக்கும் அது பொருத்தமாக அமைந்துவிட்டது. எனக்கு அது பெருமையான விஷயம் தான். மகேந்திரன் என்று சொன்னால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது” என்று பேசினார்.

இயக்குனர் ஹாரூண் பேசும்போது,

“தெலுங்கிலேயே நிறைய கதைகள் இருக்கும்போது, தமிழை தேடி வந்ததற்காக தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2026 நிச்சயமாக நல்ல வருடமாக இருக்கும். ஏனென்றால் இனிமேல் நல்ல கதைகள் வரும். நல்ல கதை தான் ஹீரோ. இப்போதைய சூழலில் நாயகனை விட கதையின் நாயகர்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. ஒரு படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுவது ட்ரைலர்கள் தான். நல்ல படம் பண்ணியிருக்கிறோம் என்று நீங்கள் பெருமையுடன் சொல்லலாம். படங்களின் பட்ஜெட்டை பொறுத்து  சாதாரண இடத்திலோ, சத்யம் தியேட்டரிலோ, பீனிக்ஸ் மாலிலோ கூட விழா நடத்தலாம். ஆனால் எல்லா படத்திற்கும் கியூப் கட்டணம் என்பது ஒன்றாக தான் இருக்கிறது. இதை யார் பேசுவார்கள் என்று தெரியவில்லை” என்று பேசினார்.

இயக்குநர் மணி தெலக்குட்டி பேசும்போது,

“இந்த படத்தை தமிழில் எடுக்க சென்னையில் முழுக்க ஆதரவு கொடுத்தது மகேந்திரன் தான். குமரிக்கண்டம் பகுதியில் கதை நடப்பது போல இதை ஒரு புனைவு கதையாக உருவாக்கியிருக்கிறேன். இந்த டைட்டில் ஏன் வைத்தோம் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். மெகா ஸ்டார், பவர் ஸ்டார் போல மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” என்று கூறினார்.