‘வீரபாண்டியபுரம்’ : திரை விமர்சனம்!

ஜெய், மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ஆகன்ஷா சிங், பால சரவணன், காளி வெங்கெட், ஜெய் பிரகாஷ், சரத் லோகிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், ‘வீரபாண்டியபுரம்’. சுசீந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தினை லென்டி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஐஸ்வர்யா தயாரித்து இருக்கிறார்.

வீரபாண்டியபுரத்தின்  ‘அடாவடி’ பெரும்புள்ளி சரத். அதேபோல் நெய்க்காரன் பட்டியின் முக்கியஸ்தர் ஜெய்பிரகாஷ். இவர்களுக்குள் தீராப்பகை. சரத்தின் மகள் மகள் மீனாக்‌ஷி, ஜெய்யினை காதலிக்கிறார். இவர்களின் காதல் மீனாக்‌ஷியின் அப்பா சரத்துக்கு தெரியவர அவரும் ஜெய்க்கு மீனாக்‌ஷியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.

இந்நிலையில் நெய்க்காரன் பட்டி ஜெயபிரகாஷ் திருமணம் நடக்கும் சமயத்தில் சரத் மற்றும் அவரது குடும்பத்தினை ஒட்டு மொத்த்மாக தீர்த்துகட்ட முடிவு செய்கிறார். அதே சமயத்தில் ஜெய் மீனாக்‌ஷ்யின் அப்பா சரத்தினை கொலை செய்கிறார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் மீனாக்‌ஷி ஜெய்யை என்ன செய்தார்? ஜெய் ஏன் கொலை செய்தார்? என்பது தான் வீரபாண்டியபுரத்தின் கதை, திரைக்கதை.

நாம் பார்த்த கதை தான் என்றாலும், அதை சில ட்விஸ்ட்டுகளோடும், கமர்ஷியல் அயிட்டங்களுடனும் கலந்து ஒரு கமர்ஷியல் படத்தினை கொடுத்துள்ளார், இயக்குனர் சுசீந்திரன். ஆனால் இது ரசிகர்களுக்கு பிடிக்குமா?

நாயகிகளாக நடித்திருக்கும் மீனாக்‌ஷி, ஆகன்ஷா சிங் இருவரும் இயக்குநர் சுசீந்திரன் கொடுத்த வேலையினை சொன்னபடி செய்து இருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கும் சரத் லோகிதாஸுக்கு இரட்டை வேடம். இரண்டிலும் தன்னுடைய அகல, பெரிய விழிகளை உருட்டி மிரட்டி இருக்கிறார். இவரின் எதிர் கோஷ்டியாக வரும் ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் தங்களது வேலையினை செய்து இருக்கிறார்கள்.

பால சரவணன் காமெடி காட்சிகள்  அவ்வபோது சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

நடிப்பில் குறிப்பிடத்தக்க வகையில் கவனம் பெற்ற ஜெய் இந்தப்படத்தில் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். பரவாயில்லை. அஜீஷின் பின்னணி இசையும் பரவாயில்லை.

வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்தின் பலமாக இருக்கிறது..

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, பாண்டிய நாடு  போன்ற படங்களை கொடுத்த  சுசீந்திரனின் ‘வீரபாண்டியபுரம்’ ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறது.