அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தயாரிப்பாளர் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ பேசுகையில்,
” எல்லோருக்கும் அவர்களுடைய முதல் குழந்தை ஸ்பெஷலானது. அது கடவுளின் ஆசி என்று சொல்வார்கள் அந்த வகையில் எங்களின் அஸ்யூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படம் லவ் மேரேஜ். நான் வணங்கும் பெருமாளின் அருளுடன் ஜூன் 27ஆம் தேதியன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் நடிகர் தனுசுக்கு நன்றி.
இப்படத்தின் கதையை இயக்குநர் சண்முக பிரியன் முதன் முறையாக சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. இதுதான் எங்களின் முதல் படமாக இருக்க வேண்டும் என தீர்மானித்தோம். இந்த கதையை மிகவும் திறமையாகவும் இயக்கியிருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. அந்த மண்ணின் மணம் மாறாமல் அழகியலுடன் படம் உருவாகி இருக்கிறது. படத்தில் நடித்த நடிகர்களின் பாசிட்டிவிட்டி படத்திலும் இடம் பிடித்திருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்த விக்ரம் பிரபு , சத்யராஜ், சுஷ்மிதா பட், அருள்தாஸ், ரமேஷ் திலக் ஆகிய அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இந்தப் படத்திற்காக எங்களுடன் இணைந்து பணியாற்றிய ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகருக்கும், இந்த படத்தின் இசையை வெளியிட்ட சோனி மியூசிக் நிறுவனத்திற்கும், படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலனுக்கும், தயாரிப்பில் எங்களுடன் தொடக்கத்திலிருந்து முழு ஒத்துழைப்பு வழங்கிய தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுக்கும், சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
‘லவ் மேரேஜ்’ ஜாலியான படம். ஜூன் 27ஆம் தேதியன்று அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து கொண்டாடி ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில்,
” நாங்கள் இங்கே அனைவரும் குடும்பமாக இணைந்து ஒரு குடும்ப படத்தை வழங்குகிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தருணத்தில் கிடைத்த மகிழ்ச்சி இதற்கு முன் எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கிடைத்ததில்லை. நான் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கோபிசெட்டிபாளையம் செல்கிறேன் என்று அப்பாவிடம் சொன்னதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அத்துடன் மட்டும் நிற்காமல் அங்கு சென்றால் இன்னார் வீட்டுக்கு செல்… இன்னார் வீட்டுக்கு செல்.. என்று ஏராளமானவர்களை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவர்களை அங்கு சந்தித்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.
அந்தத் தருணத்திலேயே இந்த படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற அழுத்தம் எனக்குள் ஏற்பட்டது. இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என நான் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றியது.
ஷான் ரோல்டனை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றினோம். இந்தப் படத்திற்கு இசை மிகப்பெரிய பலம். அவர் அழகாக செய்து இருக்கிறார் நல்ல ஆல்பமாக கொடுத்து சாதித்து இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு மாத காலம் வரை குடும்பமாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம். இது மறக்க இயலாத அனுபவம். இந்த கதாபாத்திரத்தில்… நடிகை சுஷ்மிதாவை தவிர வேறு யாராலும் பொருத்தமாக நடித்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். தமிழ் சினிமா சார்பில் அவரை மனதார வரவேற்கிறேன். லவ் மேரேஜ், வித்தியாசமாக குடும்பத்தினர் அனைவரும் கண்டு களிக்கும் வகையிலான குடும்ப படமாக உருவாக்கி இருக்கிறோம். எப்போதும் போல் என் மீதும், என் படங்கள் மீதும் அன்பு செலுத்தி, படத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகி ஜூன் 27 ஆம் தேதி அன்று வெளியாகும் ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் ,ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜா கவனித்திருக்கிறார். ஃபேமிலி எண்டர்டெயின்ராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் ஃபிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டேய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்தி வேலன் வழங்குகிறார்.