‘எனது  படங்களில் விஜய்யின் ரெஃபரன்ஸ் இருக்கும்!’ – ‘யாதும் அறியான்’ பட இயக்குநர் கோபி!

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார்.  இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘யாதும் அறியான்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி ஜூலை 14 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு, ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், நடிகர் செளந்தரராஜன், படத்தொகுப்பாளர் பத்திரிகையாளர் டி.எஸ்.சுபாஷ், நடிகர் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு, நடிகர் சம்பத் ராம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இயக்குநர் பேரரசு பேசுகையில்,

“இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால், இயக்குநர் கோபி விஜய் சாரின் ரசிகர். அவர் முடிவு செய்துவிட்டார், நிகழ்ச்சிக்கு வருபவர்கள் விஜய் சாருடன் எதாவது தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்று. என்னையும் அந்த தகுதியால் தான் அழைத்திருக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் விஜயின் ஆட்கள். விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை, அவர் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார். இரண்டு வாழ்க்கை கொடுத்தார். அது என் வாழ்நாள் முழுவதும் பெருமையாக நினைக்கும் விசயம். படத்தின் நாயகன் தினேஷ் பத்திரிகை துறையில் இருக்கிறார். பல்வேறு துறைகளில் இருந்து சினிமாவுக்கு வருவார்கள், அவர்கள் ஒரு ஆர்வத்தில், ஆசையில் வருவார்கள். அப்படி தான் தினேஷ் சாரையும் நினைத்தேன், ஆனால் தினேஷ் சாரிடம் முழுமையான நடிகருக்கான தகுதி இருக்கிறது. அவரிடம் கலை வெறி இருக்கிறது, அதற்காக தான் இப்போதும் கொலை வெறியோடு உட்கார்ந்து இருக்கிறார். காதல் மன்னன் ஜெமினி கணேசன் சார் இருந்தார், அவருக்குப் பிறகு காதல் இளவரசன் கமல்ஹாசன் வந்தார். அதன் பிறகு யாரும் இல்லை, இந்த டிரைலரை பார்த்த போது, அதில் வந்த பெட்ரூம் காட்சியில் மனுஷன் பூந்து விளையாடியிருக்கிறார். எல்லாமே செய்துவிட்டு லவ் என்று சொல்லும் இடம் செமையாக இருந்தது. அந்த காட்சிக்காக தான் அவர் கதையை ஒத்துக்கொண்டு இருப்பார் போல. கொஞ்சம் மூட் அவுட் ஆனவுடன், செல்போனை பார்த்து மூடை ஏத்திக்கிறாரு, பாக்யராஜ் சார் முருங்கைக்காய் பற்றி சொன்னார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் புது யோசனையை சொல்லியிருக்கிறார். செல்போனை பார்த்து மூட் ஏத்துறது. அந்த ஒரு காட்சியில் தினேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார், இந்த படத்திற்கு அந்த ஒரு காட்சி போதும். ஹீரோயின் வராததற்கு காரணமும், தினேஷ் இன்னும் அந்த மூட்ல இருந்து மாறாம இருப்பாரோ என்று பயந்து இருப்பாங்க. ஆனால், காதல் காட்சி, செண்டிமெண்ட் என அனைத்து இடங்களிலும் தினேஷ் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பிறகு அவர் பத்திரிகையாளர் என்பதை ஓரமாக வைத்துவிட்டு முழுநேர நடிகராகி விட வேண்டும், அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கிறது.

இயக்குநர் கோபி விஜய் ரசிகர், விஜயின் விசயத்தை எங்கயாவது பதிவு செய்ய வேண்டும் ஒரு ரசிகராக, அதனால் தான் 2026 என்ற கான்சப்ட்டை வைத்திருக்கிறார். அவரது கனவு, ஆசை, நம்பிக்கை, விஜய் மீது உள்ள பற்று என்று எது வேண்டுமானாலும் சொல்லலாம். நான் விஜய் சாரிடம் ஒரு உதவி இயக்குநராக கதை சொன்னேன், அவர் கதையை ஓகே சொன்னதும் நான் இயக்குநராகி விட்டேன். படப்பிடிப்பு தொடங்கி விட்டது, அப்போது நான் அவரது ரசிகராகி விட்டேன். அப்படி மாறினால் தான் ரசிகர்களுக்கு ஏற்ற படத்தை கொடுக்க முடியும். திருப்பாச்சி கதையில், ஓபனிங் பாடல், பில்டப் ஆகியவை எதுவும் இல்லை. அவரது ரசிகரான பிறகு தான், அவரை ரசித்து, அவரது ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக பல விசயங்களை சேர்த்தேன். ஒரு ஆக்‌ஷன் படம், ஒரு மாஸ் ஹீரோவை வைத்து பண்ணும் போது, அந்த ஹீரோவை இயக்குநர் நேசிக்க வேண்டும், அப்போது தான் அந்த படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக வரும். அதேபோல் காதல் காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்றால் அந்த ஹீரோயினை காதலிக்க வேண்டும், மனதளவில் பீல் பண்ணி ரசிக்க வேண்டும், அப்போது தான் நாம் அந்த காட்சியை எடுத்தால் ஆடியன்ஸ் ரசிப்பார்கள். இதுல கோபி இரண்டையும் செய்துவிட்டார். கதாநாயகியையும் லவ் பண்ணிட்டாரு, ஹீரோவையும் லவ் பண்ணிட்டாரு. இசை சிறப்பாக இருக்கிறது, மிரட்டியிருக்கிறார்கள். படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்தும் நன்றாக இருக்கிறது. இயக்குநர் கோபி மிகப்பெரிய இயக்குநராவதற்கு அனைத்து தகுதியும் இருக்கிறது. தினேஷ் சார் பெரிய ஹீரோவாகி விடுவார். இயக்குநர் கோபி பெரிய ஹிட் படம் கொடுத்துவிட்டு, விஜய் கட்சியில் இணைந்து விட வேண்டும். செளந்தர்ராஜனும் விஜய் சார் கட்சியில் சீட் வாங்கி எம்.எல்.ஏ ஆகி, மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லது பண்ண வேண்டும், நன்றி.” என்றார்.

படத்தின் நாயகன் தினேஷ் பேசுகையில்,

“அனைவருக்கும் வணக்கம், நான் இப்படி இரத்த கரை படிந்த சட்டையுடன் வருவதற்கு இயக்குநர் தான் காரணம், படம் வெளியாகும் வரை நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இயக்குநர் சொல்லிவிட்டார். இந்த ஒரு நிமிஷத்துக்காக தான் இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். நானும் மீடியா ஃபேமிலியில் இருந்து தான் வந்திருக்கிறேன், நீங்கள் எனக்கு உத்துழைப்பு கொடுத்து இந்த படத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும். இந்த கதையை இயக்குநர் என்னிடம் பீல் பண்ணி சொன்னார், அதனால் தான் நான் ஒத்துக்கொண்டேன். விஜய் விசயம் பற்றி சொன்ன போது, வேண்டுமா என்று கேட்டேன். ஆனால், அவர் ஏற்கனவே செய்து வைத்தது என்று சொன்ன போது, நான் ஓகே சொல்லிவிட்டேன். நான் உங்க வீட்டுப்பிள்ளை, என்னை உச்சத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றாலும், ஒரு நல்ல நடிகர் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுகங்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் தான், அவர்களுக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்க இங்கு வந்தது எனக்கு பூஸ்ட் போல் இருக்கிறது. மேடையில் அமர்ந்திருக்கும் பெரியவர்களுக்கு அன்பான வணக்கம், நன்றி.” என்றார்.

நடிகர் அப்புக்குட்டி பேசுகையில்,

“மேடையில் அமர்ந்திருப்பவர்களுக்கும், வாழ்த்தியவர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் சிறந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் கோபி சாருக்கு நன்றி. எனக்கு காட்சியை சொல்லாமலேயே நடிக்க வைத்தார். ஹீரோ யார் என்று கேட்கும் போது, கண்ணாடி போட்டுக்கொண்டு தினேஷ் சார் வந்தார். அவர் பட்டைய கிளப்பிட்டாரு, செமயாக நடித்திருக்கிறார். அவர் தினமலர் குடும்பம் என்று தெரியாது, பிறகு தான் தெரிந்தது. தெரிந்த உடன் அவரிடம் நான் பயந்தால், அவர் என்னிடம் பனிவோடு அடக்கமாக பேசுகிறார்.  ஆனந்த் பாண்டி சிறப்பாக நடித்திருக்கிறார். அனைவரும் ஒரு குடும்பமாக ஜாலியாக நடித்தோம். சுற்றுலா போனது போல் தான் இருந்தது. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. விஜய் சாரை முதல்வர் என்று போட்டது எனக்கும் கொஞ்சம் ஷாக்காகதான் இருந்தது. எப்படி வருது என்று பார்ப்போம். ரசிகர்களை பயமுறுத்தும் வேடத்தில் நடித்திருக்கிறேன், வாழ்த்துகள் நன்றி.” என்றார்.

படத்தின் இயக்குநர் கோபி பேசுகையில்,

“எங்களை வாழ்த்த வந்திருக்கும் பெரியவர்களுக்கு நன்றி, அனைவருக்கும் தனி தனியாக நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், நேரம் இல்லாததால் ஒட்டுமொத்தமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெளிச்சத்தில் என்னை பேசவைத்த மற்ற டெக்னீஷியன்களுக்கு நன்றி. செளந்தரராஜன் பிரதர் பேசும் போது நிறைய எதிர்ப்புகள் வந்தது, நாம எதிர்ப்புகளையும், எதிர்மறைகளையும் கடந்து செல்வோம், நம்பிக்கையுடன் இருங்க. விஜய் சாரின் விசயம் எதற்காக வைத்தீர்ங்கள் என்று கேட்டார்கள், நிறைய மீம்ஸ் கூட வந்தது. இந்த காட்சிகள் படத்தில் இருக்காது, நீக்கிடுவாங்க என்று சொன்னாங்க. நீங்க டிரைலரில் என்னவெல்லாம் பார்த்தீர்களோ அது அனைத்தும் படத்தில் இருக்கும். என்னை பற்றியும், படம் பற்றியும் பேசும் போது எனக்கு பயமாக இருந்தது. அதனால், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படம் பார்க்க வாங்க.

இந்த படத்தை குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டில் செய்ததால், ஒரு காட்சியில், ஒரு பேப்பர் போஸ்டரில் வைத்தேன், பெரிய பட்ஜெட்டாக இருந்தால் கிராபிக்ஸ், ஏஐ மூலம் அவரை காண்பித்திருப்பேன், பான் இந்தியா படமாக இருந்தால் முதல்வராக அல்லாமல் அவரை பிரதமராக காட்டியிருப்பேன். அதனால், விஜய் சாரின் ரெபரன்ஸ் எனது அடுத்தடுத்த படங்களில் இருக்கும். எங்கள் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. சக்சஸ் மீட்டில் சந்திப்போம்.” என்றார்.