உலகப்போரின் பின்னணியில் ‘போட்’ திரைப்படம்! – இயக்குநர் சிம்பு தேவன்!

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார்.

நடுக்கடலில் உருவான நெய்தல் நில கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் டீசர், இரண்டு பாடல்கள், ப்ரோமோ பாடல், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நிர்வாக தயாரிப்பாளர் ஜிதேந்திரன், இயக்குநர் சிம்பு தேவன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, நடிகர்கள் யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மாஸ்டர் அக்ஷத் தாஸ் , நடிகைகள் மதுமிதா, கௌரி கிஷன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

‘போட்’ திரைப்படம் குறித்து இயக்குநர் சிம்பு தேவன் பேசுகையில்,

”நான் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ஃபேண்டஸி, காமெடி என வித்தியாசமான வகைமையில் இருக்கும். இந்த படத்திலும் இவை இரண்டும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கதை என் மனதில் நீண்ட நாளாக இருக்கும் கதை.‌ இந்தப் படத்தில் நானும் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறேன்.‌ இந்த கதைக்கு யார் நாயகன் என தேடும்போது நான் ஏற்கனவே யோகி பாபுவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தேன். அவரை ஒரு முறை மீண்டும் சந்தித்து இக்கதையை விவரித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. ‘இதில் நான் நடிக்கிறேன்’ என்றார்.

யோகி பாபுவை தொடர்ந்து எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த் ஆகியோர் ஒப்பந்தமானார்கள். கௌரி கிஷன் – இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு சாம்ஸ், மதுமிதா, ஷா ரா, அக்ஷத் ஆகியோரும், ஜெஸ்ஸி என்ற வெளிநாட்டு நடிகரும் நடிக்க ஒப்பந்தமானார்கள். அதன் பிறகு பாட்டி கேரக்டரில் குலப்புளி லீலா நடித்தார்கள். இப்படி திறமையான கலைஞர்கள் ஒரு பக்கம் ஒன்றிணைந்தார்கள்.

என்னுடைய நண்பர் எஸ். ஆர். கதிர் மூலம் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் அறிமுகமாகி, எங்களுடன் இணைந்தார். இந்தத் திரைப்படத்தை பொருத்தவரை இசையும் , ஒளிப்பதிவும் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் கடல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனவே என்னுடைய குழு வலிமையானதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

இந்தப் படத்தின் திரைக்கதைக்கு 1943ம் ஆண்டு காலகட்டத்திய பின்னணியை அமைத்திருந்தோம்.‌ ஏனெனில் பொதுவாகவே வரலாற்றில் நம் விஷயங்கள் மறைக்கப்படுகிறது என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது. சுதந்திர போராட்டத்தை பொறுத்தவரை மும்பையையும், டெல்லியையும் முதன்மைப்படுத்தும் அளவிற்கு சென்னையையும், கொல்கத்தாவையும் கண்டு கொள்வதில்லை.‌ ஆனாலும் பரவாயில்லை, இது தொடர்பாக நம் வரலாறு குறித்து ஆய்வு செய்ய தொடங்கினேன். குறிப்பாக இரண்டாம் உலக போர்.‌

1943ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் குறித்த விவரங்களையும், ஆவணங்களையும் பார்வையிட தொடங்கினேன்.‌ இதில் திரைப்படங்களையும் இணைத்துக் கொண்டேன். டொரண்டீனோவின் ஆங்கில திரைப்படத்திலிருந்து பல திரைப்படங்கள் வரை இரண்டாம் உலகப்போர் குறித்த குறிப்புகளில் எதிலும் இந்தியர்கள் இடம்பெறவில்லை.  ஆனால் சரித்திரத்தின்படி இரண்டாம் உலகப்போரில் 25 லட்சம் இந்தியர்கள் இறந்திருக்கிறார்கள். இதுதான் எனக்கு கிடைத்த முதல் தகவல்.  இதிலிருந்து உந்துதலை பெற்று இரண்டாம் உலக போர் பற்றிய ஒரு கதை கருவினை உருவாக்கி, அதனை படைப்பாக்க வேண்டும் என திட்டமிட்டேன்.‌

அந்த காலகட்டத்தில் சென்னை மீது ஜப்பான் குண்டு வீச தயாராக இருந்திருக்கிறது. இதற்கான எச்சரிக்கை வெளியாகி ஆறு மாத காலம் வரை மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக லண்டனில் உள்ள என்னுடைய நண்பர் ஸ்ரீ கணேஷ் மற்றும் பெங்களூரூவில் உள்ள நண்பர் ஜெயராஜ்  ஆகியோருடன் விவாதிக்கத் தொடங்கி, தகவல்களை சேகரிக்கத் தொடங்கினோம்.

அந்தத் தருணத்தில் சென்னையிலிருந்து ஐந்து லட்சம் மக்கள் வெளியேறி இருக்கிறார்கள். சென்னையிலிருந்து எழுபது சத மக்கள் வெளியேறி விட்டார்கள். மீதமிருந்த மக்கள் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி பதுங்கு குழிகளில் பதுங்கியபடி வாழ பழகியிருந்தார்கள்.  இது தொடர்பாக மக்களுக்கு போலீசார் பயிற்சி அளித்து இருந்தனர். எந்த அரசு அலுவலகமும் செயல்படவில்லை. உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் இவை அனைத்தும் ஒரு பொது இடத்தில் வைத்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்கள்.

இந்த தகவல்களை எல்லாம் சேகரித்து, விவாதித்து அதன் பிறகு இது தொடர்பாக படைப்பை உருவாக்கலாம் என திட்டமிட்டோம். அந்த காலகட்டத்தில் துடுப்பு படகு தான் இருந்தது. 1980களுக்கு முன்னர் வரை துடுப்பு படகைத் தான் மீனவர்கள் பயன்படுத்தினார்கள். துடுப்பு படகை உருவாக்குவதற்கு கலை இயக்குநர் சந்தானம் கேரளா, ராமேஸ்வரம் என பல இடங்களுக்கு அலைந்து திரிந்து படத்தில் இடம்பெற்ற துடுப்பு படகை வடிவமைத்தார்.

அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தை தேடி தமிழக கடற்கரையோரம் முழுவதும் பயணித்தோம். இறுதியாக திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள உவரியை தேர்ந்தெடுத்தோம். இங்குதான் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கினோம். அடர்ந்த வனப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம், உயர்ந்த மலைப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். இங்கெல்லாம் கடினம் இருந்தாலும், பிறகு பழகிவிடும். ஆனால் கடல் என்பது ஒவ்வொரு நிமிடமும் புதிராக இருந்தது. எதையுமே தீர்மானிக்க இயலாது. முதலில் எங்களுக்கு எதுவும் புரியவில்லை.

இப்படத்தின் படப்பிடிப்பு பெரிய அனுபவமாக இருந்தது. ஏனெனில் என்னைப் பொருத்தவரை கடல் என்பதை தனி உயிரினமாகத் தான் பார்க்கிறேன். சில நேரங்களில் கோபமாக இருக்கும். சில நேரங்களில் அமைதியாக இருக்கும். கடலின் வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். காலையில் தொடங்கி மாலைக்குள் இருபது  வண்ணங்களை காணலாம். நாங்கள் எதை எல்லாம் சந்தித்தோமோ எங்களது அனுபவம் என்னவாக இருந்ததோ.. அவற்றை எல்லாம் காட்சிப்படுத்தி இருக்கிறோம். அதனால் இந்த திரைப்படம் சுவாரசியமாக இருக்கும். அனைத்து வகையிலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.

ஜிப்ரானுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். படத்தை பார்ப்பதற்கு முன் அதைப்பற்றி அவர் பேசியதற்கும் படத்தை பார்த்த பிறகு கதையை உள்வாங்கி அவர் பணியாற்றிய விதமும் வித்தியாசமாக இருந்தது. கதைகளை அவர் உள்வாங்கி இசை மூலமாக வெளிப்படுத்தும் போது சிறப்பாக இருக்கும். ஒரு வகையில் பார்க்கும் போது, இது சிங்கிள் லொகேஷனில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும். அதை உடைத்து இசை வடிவில் ஒரு கதையை சொல்லி ரசிகர்களை அவர் வழி நடத்தும் விதம் பிரமிக்க வைத்தது. உண்மையிலேயே இந்த படத்தில் அவருடைய பங்களிப்பு சிறப்பானது.

தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் அளித்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, யோகி பாபு நடிக்க ஒப்புக்கொண்டு, அவருடன் இத்தனை நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து  ‘போட்’ திரைப்படத்தை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கும் போது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறோம். எனக்கும், என்னுடைய குழுவினருக்கும் ஆதரவு தாருங்கள்,” என்றார்.