150 கோடி பாக்ஸ் ஆபீஸ் சாதனை: ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெற்றி விழாவில் படக்குழுவினரின் சுவாரசியப் பேச்சு!

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் தியேட்டர்களில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தின் இந்த இமாலய வெற்றியைக் கொண்டாடும் வகையில், சென்னையில் படக்குழுவினர் கலந்துகொண்ட பிரத்யேக நன்றி அறிவிப்பு விழா (Thanks Meet) கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட இயக்குநர் வெங்கி அட்லூரி,

“இன்றுதான் ஒரு விநியோகஸ்தர் மூலமாகப் படம் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கிறது என்ற நல்ல செய்தியைக் கேட்டேன், எனக்கு உடனே சிலிர்த்துவிட்டது. இன்றைய ஆக்ஷன் மற்றும் வன்முறைப் படங்களின் ட்ரெண்டிற்கு மத்தியில், வில்லன்களே இல்லாத ஒரு எமோஷனல் கதையைத் தேர்ந்தெடுக்க நடிகர் சூர்யா சார் காட்டிய அந்தத் துணிச்சல்தான் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

இசைக்காக ஜி.வி. பிரகாஷுடன் ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ படங்களைத் தொடர்ந்து இது எனக்கு ஹாட்ரிக் (Hat-trick) வெற்றியாகும். ஒரு பாடலை முடித்த பிறகும் அதை மாற்றித் தரும்படி நான் கேட்டால், ஜிவி எவ்வித கூடுதல் கட்டணமும் வாங்காமல், முகம் சுளிக்காமல் புதிய மியூசிக்கை அமைத்துக் கொடுப்பார். அந்தத் தாராள மனதிற்கு என் நன்றிகள்” என்று நெகிழ்ந்தார்.

ராதிகா சரத்குமார்படத்தில் அம்மாவாக நடித்திருக்கும் மூத்த நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில்,

“ஒரு நிமிடத்திற்கு மேல் யாரிடமும் நிதானமாகப் பேச முடியாத இந்தக் காலகட்டத்தில், ரசிகர்களை அன்பாலும் பாசத்தாலும் கட்டிப்போட்டு ஒரு நிதானமான வெற்றியைப் பெற்றுள்ளோம்.பொதுவாக என் கணவர் சரத்குமார் தியேட்டரில் எந்தப் படத்தைப் பார்த்தாலும் ஏதாவது ஒரு குறையைச் சொல்வது வழக்கம். ஆனால், இந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை பார்த்தவுடன் அவரே நெகிழ்ந்து, ‘ஐ லவ் திஸ் மூவி, படம் பிரமாதம்’ என்று பாராட்டினார். தமிழ் சினிமாவில் ‘சூரியவம்சம்’ படத்திற்குப் பிறகு நான் தியேட்டரில் மிகவும் ரசித்துப் பார்த்த ஒரு முழுமையான குடும்ப படம் இதுதான்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,

“இப்படத்தின் இறுதிக்கட்டத்தில், வெறும் மூன்றே நாட்களில் இரண்டு பாடல்களை உருவாக்கினோம், அவைதான் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன. இப்படத்திற்கு இதுவரை ஒரு நெகட்டிவ் விமர்சனம் கூட வரமில்லை என்பது இதன் மிகப்பெரிய சிறப்பம்சம். ராதிகா மேடம் நடித்த உணர்வுப்பூர்வமான காட்சிகளைத் திரையில் பின்னணி இசைக்காக (Re-recording) நான் பார்த்தபோது, என்னையும் அறியாமல் எனது கண்கள் கலங்கி நான் அழுதே விட்டேன். அந்த அளவிற்கு அவரது நடிப்பு அசாத்தியமாக இருந்தது” என்று புகழாரம் சூட்டினார். சூர்யா சாருடன் தங்களது வெற்றிக் கூட்டணி விரைவில் ஹாட்ரிக் அடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

படத்தின் நாயகி மமீதா பைஜு பேசுகையில்,

“சென்னை நன்றி அறிவிப்பு விழாவில் நடிகர் சூர்யா சார் நேரில் வரமுடியாததால், நாங்கள் அவரை மிகவும் ‘மிஸ்’ செய்கிறோம். இதுவரை தியேட்டரில் படம் பார்க்காதவர்கள் உடனே குடும்பத்துடன் சென்று பாருங்கள், படம் முடிந்து வெளியே வரும்போது மனதிற்குள் ஒரு பெரிய நிறைவு ஏற்படும்” என்றார்.

நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில்,

“சின்ன வயதிலிருந்து திரையில் பார்த்து வியந்த சூர்யா சாருடன் நடிக்க எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவர் எனக்கு ஊக்கம் கொடுத்துப் பேசிய பிறகுதான் பயம் நீங்கியது” என்று நெகிழ்ந்தார். விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுнил ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.