இந்தியாவில் 9,000 திரையரங்குகள் உள்ளன. அதில் பி.வி.ஆர் 1,546 திரையரங்குகளை நிர்வகித்து அதிக திரயரங்குகளை நிர்வகித்து வரும் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது.
பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவராக மீனா சாப்ரியா செயல்பட்டு வருகிறார். இவர் தனது வாழ்க்கை சுயசரிதையை புத்தகமாக எழுதியிருக்கிறார். “UNSTOPPABLE” என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தை, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை – தயாரிப்பாளர் சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் சேர்ந்து வெளியிட்டனர்.
“UNSTOPPABLE” புத்தகத்தில் மீனா சாப்ரியா வ்கடந்து வந்த பாதையினை அதாவது, தெளிவற்ற 17 வது வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து அவரின் கார்ப்பரேட் வாழ்க்கையை INOX நிறுவனத்தின் மூலம் ஆரம்பித்து. PVR குழுமத்தின் தலைவரை சந்தித்தபின், PVRன் உதவி மேலாளரானது முதல் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை தொகுத்திருக்கிறார்.
மேலும் “UNSTOPPABLE ANGELS” என்ற இயக்கத்தின் மூலம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ள உதவிகளையும், ஆலோசனைகளையும் செய்து வருகிறார், என்பது குறிப்பிடத்தக்கது.
மீனா சாப்ரியாவின் ‘UNSTOPPABLE’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் பேசியதாவது…
எழுத்தாளர் மீனா சாப்ரியா பேசும்போது,
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. இது போன்ற ஒரு சாதாரண நிகழ்விற்கு வருகை தந்ததற்கு நன்றி. குட் நைட் படத்தின் வெற்றிக்கு பின் இங்கு வந்துள்ள தயாரிப்பாளர் யுவராஜுக்கு நன்றி. அண்ணாதுரை பற்றி சொல்லவேண்டுமென்றால் வார்த்தைகள் இல்லை. ஆனந்த் மஹிந்திரா சொன்னது போல், “இந்தியாவின் மேலாண்மை பேராசிரியர்” அண்ணாதுரை.
நீண்டநாளாக எனக்கென ஒரு மேடை கிடைக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, நான் நடிக்கவில்லை என்றாலும், எனக்கான ஒரு மேடையை நான் அமைத்துக் கொண்டது மிகவும் பெருமையாக உள்ளது.
நான் தவறான பாதையில் செல்கிறேன். என்பதை புரிந்துகொள்ள எனக்கு 20 வருடங்கள் ஆனது. “UNSTOPPABLE ANGELS” மூலமாக நான் பல பெண்களை உயரத்திற்கு கொண்டுவர நினைக்கிறேன். நான் 19 வருடமாக சினிமாத் துறையில் இருக்கிறேன். நான் கலந்து கொண்ட முதல் படப் பூஜை “MIC SET” ஸ்ரீராமின் படத்தின் பூஜை தான் என்றார்.
ஆட்டோ அண்ணாதுரை பேசும்போது,
எனக்கு மேடை புதிதல்ல. ஆனால், இந்த மேடை புதிதாக இருக்கிறது. மீனா சாப்ரியா அவர்களை விட அன்ஸ்டாப்பபில் லேடி என்று பார்த்தால் அவர்களின் தாயார் தான். அவரின் ஆசீர்வாதம் எப்போதும் தேவை. என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,
முதலில் என்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்த போது நான் வருகிறேன் என்று கூறிவிட்டேன். ஆனால், அதன் பின் புத்தகத்தையும் மீனாவின் கதையை பற்றியும் தெரியாமல் எப்படி செல்வது என்று சிந்தித்தேன். பின்பு மீனாவை தொடர்பு கொண்டு, அவரின் கதையை கேட்டேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
17 வயதில் திருமணமாகி, 20 வயதில் விவாகரத்து, 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் இத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமா என்று சிந்தித்த போது, எனக்கு என் தாய் தான் நினைவுக்கு வந்தார்.
சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் “UNSTOPPABLE” ஆக இருப்பது தான் காரணம். அதையே மீனா அவர்கள் புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இந்த புத்தகம் பெரிய அளவில் ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன்.
நான் புத்தகம் படிப்பது கம்மி தான். படத்தின் ஸ்கிரிப்ட் தான் அதிகம் படிப்பேன். இந்த புத்தகம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதிய என்று கூட கேட்டார்கள் அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவறானவர்கள் உள்ளனர் பெண்களிலும் தவறானவர்கள் உள்ளனர், என்றார்.