‘Aruvar private limited’ சார்பில், C வெங்கடேசன் தயாரித்து, இயக்குநர் V. கஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், ‘மருதம்’. இதில் விதார்த், ரக்ஷனா, ‘லொள்ளு சபா’ மாறன், அருள் தாஸ், சரவண சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மேத்யூ வர்க்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசையமைத்து இருக்கிறார், N. R. ரகுநந்தன். ஒளிப்பதிவு செய்திருக்கிறார், அருள் K. சுந்தரம்.
செய்தித்தாள்களில் அவ்வப்போது இடம் பெற்றுவரும், விவசாயிகளின் பெயரில் நடக்கும் வங்கிக்கடன் மோசடியை, விலாவரியாக பேசியிருக்கிறது. இந்த மருதம் திரைப்படம். அதேபோல், வங்கியின் மேலாளர், சிலருடன் கூட்டணியை வைத்துக்கொண்டு அப்பாவிகளின் சொத்தை, மோசடியின் மூலம் எப்படி அபேஸ் செய்கிறார்கள். என்பதையும் சொல்லி திகில் கிளப்பியிருக்கிறார், இப்படத்தின் இயக்குநர், V. கஜேந்திரன். இவர், ‘சிட்டிசன்’ படத்தை இயக்கியிருந்த, இயக்குநர் சரவண சுப்பையாவின் உதவியாளர்.
விதார்த், சொந்தமாக இயற்கை விவசாயம் செய்யும் ஒரு குறு விவசாயி. தனது மனைவி ரக்ஷனா மற்றும் மகனுடன் எளிமையான, சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். விவசாய பொருட்களின் மூலம் கிடைக்கும் வருவாயே ஆதாரம். இந்நிலையில், மகனை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்காக தனது நிலத்தை அடமானம் வைக்கிறார். அதன்பிறகு சில நாட்களில், அவரது நிலத்தின் பெயரில், வங்கியில் வாங்கிய கடனுக்காக, வங்கி இன்னொருவருக்கு அந்த நிலத்தை ஏலத்தில் விற்றது தெரிய வருகிறது. அதிர்ச்சியில் உறைந்து போகும் விதார்த், கடுமையான நெருக்கடிக்கு ஆளாகிறார். இது குறித்து வங்கிக்கு செல்லும் அவர், கடன் வாங்கியதற்கான ஆவனங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை பார்த்து மேலும் பேரதிர்ச்சி அடைகிறார். என்ன நடந்தது? இதன் பின்னணி என்ன? என்பது தான் ‘மருதம்’ படத்தின், பாமரர்களும் உணரும் வண்ணம் படைக்கப்பட்ட , ஒரு சாமனிய விவசாயியின் சட்டப்போராட்டம்!
பொதுவாக, சினிமாவில் சமூகம் நலம் சார்ந்த நல்ல கருத்துக்களையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவது, சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் மட்டுமே. அதை மருதம் திரைப்படம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. இயக்குநர் V. கஜேந்திரன், எளிமையான திரைக்கதை மூலம், பெரிய அளவில் ஜிகினா பூச்சுகளின்றி கதையை நகர்த்தியிருக்கிறார். கதையும் ஒரே நேர்க்கோட்டில் செல்கிறது. நீதிமன்றத்தில் நடக்கும் வாத பிரதிவாதங்களும் சுவாரசியமாகவே இருக்கின்றன. சிறிய முதலீட்டில், பெரிதாக குறை சொல்ல முடியாத அளவில் படமாக்கியிருப்பது இயக்குநரின் திறமை தான்.
கதையை நகர்த்திச்செல்லும் பெரும் பங்கும், பொறுப்பும் நாயகன் விதார்த்துக்கு. வழக்கமான தனது திறமையான நடிப்பின் மூலம், அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். அவரின் மனைவியாக நடித்திருக்கும் ரக்ஷனாவும் குறை சொல்லமுடியாத வகையில் இயல்பாக நடித்திருக்கிறார். மோசடி மன்னன், வங்கி மேலாளராக நடித்திருக்கும் இயக்குநர் சரவண சுப்பையா, விதார்த்துக்கு சட்ட உதவிகள் செய்து கொடுக்கும் இயக்குநர் ‘தினந்தோறும்’ நாகராஜ், அருள்தாஸ், மேத்யூ வர்க்கீஸ், ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்டோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
N.R. ரகுநந்தன் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும், மோசமில்லை. ஒளிப்பதிவாளர் அருள் K. சுந்தரம் காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், தொய்வாக செல்லும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக, முதல் காட்சியில் தற்கொலை செய்யும் காட்சியை பொருத்துவதற்கு வேறு இடத்தில் வாய்ப்பிருந்தும் அதை தவிர்த்திருக்கிறார்கள். ப்படி சில குறைகள் இருந்தாலும், ‘மருதம்’ திரைப்படத்தை மொத்தமாக பார்க்கும் போது, ஒரு நல்ல படைப்பாகவே இருக்கிறது.
‘மருதம்’ – விவசாயிகளின் பெயரில் நடக்கும் வங்கி மோசடி!