“இது வெறும் பிரிவின் வலி அல்ல, ஆழமான காதல்!” – ‘தடுமாறுதே’ பாடல் குறித்து சித்தார்த் பஸ்ரூர்!

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ (Tabaahi) பெற்ற அபரிமிதமான வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘தடுமாறுதே’ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ், கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ மியூசிக் கம்பெனி ஆகியவை இணைந்து வழங்கியுள்ள இப்பாடல், காதலின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது.

முந்தைய பாடலான ‘தபாஹி’ தீவிரமான காதலின் பரவசத்தைக் கொண்டாடிய நிலையில், இந்த புதிய ‘தடுமாறுதே’ பாடல் மென்மையான உணர்வுகள், ஏக்கம் மற்றும் சொல்லப்படாத விஷயங்கள் என மனதின் ஆழமான உணர்வுகளை நேர்த்தியாக விவரிக்கிறது

இப்பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா ஆகிய கதாபாத்திரங்களின் முற்றிலும் மாறுபட்ட புதிய பரிமாணத்தை யாஷ் மற்றும் தாரா சுதாரியா தங்களது அசாத்திய நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் இணக்கமான நடிப்பில் ஒருவித விளையாட்டுத்தனம் மிகுந்த இயல்பு வெளிப்பட்டாலும், அதற்குள் உணர்வுபூர்வமான முரண்பாடுகளும், பகிர்ந்துகொள்ளப்படாத ஏக்கமும் மறைந்திருப்பது போல் இப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

‘தபாஹி’ பாடலில் ரசிகர்கள் பார்த்த அதே ராயா எனும் கதாபாத்திரமாகவே நடிகர் யாஷ் இப்பாடலிலும் தொடர்ந்தாலும், ரெபெக்காவை அவர் நேசிக்கும் விதம் அவரது மென்மையான, கவலையற்ற பக்கங்களையும், தனக்குள் அவர் சுமந்து கொண்டிருக்கும் குழப்பத்தையும் அழகாக உணர்த்துகிறது. தனிஷ்க் பாக்சி, அர்ஸ்லான் நிஜாமி மற்றும் ஃபஹீம் அப்துல்லா ஆகிய புகழ்பெற்ற மூவர் கூட்டணியால் இக்காதல் பாடல் இசையமைக்கப்பட்டுள்ளது.

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சி பேசுகையில்,

அர்ஸ்லான் மற்றும் ஃபஹீமுடன் இணைந்து பணியாற்றியதால் இப்பாடல் தங்கள் இதயத்திற்கு நெருக்கமானது என்றும், பாடகர் சித்தார்த் பஸ்ரூர் தனது குரலால் பாடலுக்கு மிகுந்த ஆழத்தை வழங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்

இப்பாடல் குறித்துப் பின்னணிப் பாடகர் சித்தார்த் பஸ்ரூர் பேசுகையில்,

‘தடுமாறுதே’ என்பது சாதாரணமாகக் காதலில் ஏற்படும் ஏமாற்றம் அல்லது பிரிவை மட்டுமே பற்றியது அல்ல என்று விளக்கியுள்ளார். மாறாக, காதலர்களுக்கு இடையே சொல்லப்படாமல் மறைந்திருக்கும் ஆழமான உணர்வுகளைப் பற்றியதாகும். வெறும் வலியை மட்டும் வெளிப்படுத்தாமல், காதலின் உண்மையான மற்றும் ஆழமான உணர்வுகளைத் தனது குரல் பிரதிபலிக்க வேண்டும் என்று தான் விரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பாடல் மிகவும் உணர்வுபூர்வமானது என்றாலும், இதில் படிப்படியாக அதிகரிக்கும் ஒருவிதத் தீவிரத்தன்மை (Intensity) நிறைந்துள்ளது என்றும், அதுவே தனக்கு இப்பாடலை மிகவும் சிறப்பான ஒன்றாக மாற்றுகிறது என்றும் பாடகர் சித்தார்த் பஸ்ரூர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பான்-இந்தியா (Pan-India) பாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் சித்தார்த் பஸ்ரூரின் உணர்வுபூர்வமான குரலில் உயிர் பெற்றுள்ளதுடன், அவர் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் இப்பாடலைத் தனது சொந்தக் குரலிலேயே பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது . அதன்படி இப்பாடல் தமிழில் ‘தடுமாறுதே’, இந்தியில் ‘மதோஷ்’, கன்னடத்தில் ‘மனமோஹகா’, தெலுங்கில் ‘மனசகதே’ மற்றும் மலையாளத்தில் ‘மதுமோஹினி’ ஆகிய பெயர்களில் வெளியாகியுள்ளது.

இப்பாடலுக்கான வரிகளைப் பிரபல எழுத்தாளர்களான விக்னேஷ் சிவன் (தமிழ்), பிரமோ மரவந்தே (கன்னடம்), அர்ஸ்லான் நிஜாமி – சையத் முராத் கிலானி (இந்தி), ராமஜோகய்யா சாஸ்திரி (தெலுங்கு) மற்றும் ராஜீவ் கோவிந்தன் (மலையாளம்) ஆகியோர் எழுதியுள்ளனர்.

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் பிரபல இயக்குநர் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ்’ திரைப்படம், ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ளது . மேலும், இது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மிக நேர்த்தியாக மொழி மாற்றம் (Dubbed) செய்யப்பட்டு பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி எனப் பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படம், இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நட்சத்திரக் கூட்டணியைக் கொண்ட ஒரு பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது. கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மிண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது.