அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகில் வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக தயாராகி இருக்கும் இத்திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘போர் தொழில்’ பட புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ’96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

விழாவில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசுகையில்,

தங்களுடைய முந்தைய தயாரிப்பான மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு ஒரு நல்லதொரு கதைக்காகத் தங்களின் ஒட்டுமொத்தக் குழுவும் மிகவும் பொறுமையுடன் காத்திருந்ததாகத் தெரிவித்தார். அசோக் செல்வனின் நடிப்பில் வெளியான ‘போர் தொழில்’ மற்றும் ‘ப்ளூ ஸ்டார்’ ஆகிய இரண்டு அடுத்தடுத்த மாபெரும் வெற்றித் திரைப்படங்களுக்குப் பிறகு அவருக்குப் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருந்து ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால், அவர் அந்த வாய்ப்புகளையெல்லாம் தற்காலிகமாகத் தவிர்த்துவிட்டு, தங்களின் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை மட்டும் மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்து, அதற்காகத் தனது முழு அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கியதாக அசோக் செல்வனின் அர்ப்பணிப்பைப் வெகுவாகப் பாராட்டினார்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஆர். கார்த்திகேயன்,

‘அன்பில் அவன்’ திரைப்படம் மனிதர்களின் கனவுகளைப் பற்றிப் பேசும் ஒரு அழகிய படைப்பு என்று குறிப்பிட்ட அவர், அதிலும் குறிப்பாகப் பெண்களின் கனவுகள், அதை அடைவதற்கான அவர்களின் லட்சியத் துரத்தல், அதற்காக அவர்கள் செய்யும் மெனக்கடல்கள், சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை மிகவும் உணர்வுபூர்வமாகவும் காதலுடனும் இக்கதை விவாதிக்கிறது என்று விளக்கினார். திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி மகிழும் வகையிலான அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் நிறைந்திருப்பதால், இவை அனைத்தும் நிச்சயமாகப் பார்வையாளர்களுக்குப் பிடிக்கும் என்று தான் முழுமையாக நம்புவதாகவும் அவர் கூறினார். தியேட்டரில் இந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ஒவ்வொரு பெண்ணும் தனக்கான காதலனோ அல்லது கணவனோ நிஜ வாழ்க்கையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் அளவிற்கு அசோக் செல்வனின் கதாபாத்திரம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுவாரசியமாகப் பகிர்ந்து கொண்டார்.

விழாவில் நாயகி ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில்,

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனது சினிமா பயணத்தில் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு படைப்பு என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இத்திரைப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்த சக நடிகரான அசோக் செல்வனுக்கு தனது தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய அவர், பொதுவாக முன்னணி ஹீரோக்கள் தங்களது படங்களில் கதாநாயகிகளுக்கு அதிக அளவில் திரை பங்களிப்பை (Screen Space) வழங்கத் தயங்குவார்கள், ஆனால் அசோக் செல்வன் எவ்வித சுயநலமும் இன்றி தனக்கு சமமான முக்கியத்துவத்தை வழங்கி இப்படத்தை நேர்த்தியாக உருவாக்க முழு ஒத்துழைப்பு தந்துள்ளார் என்று அவரது பெருந்தன்மையை மேடையில் வெகுவாகப் பாராட்டினார்.

விழாவில் இறுதியாகப் பேசிய நாயகன் அசோக் செல்வன்,

தனது நடிப்பில் உருவான ஒரு திரைப்படம் திரைக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாகத் தனது உரையைத் தொடங்கினார். இத்திரைப்படத்தின் கதைக்களத்தைப் பற்றிப் பேசுகையில், கதையாக மட்டும் பார்த்தால் இதற்கு முன் இதே பாணியில் நிறைய திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன என்பதை அசோக் செல்வன் நேர்மையாகப் பகிர்ந்து கொண்டார். திரையரங்குகளில் ரசிகர்கள் விசிலடித்துக் கொண்டாடும் வகையிலான சுவாரசியமான காட்சிகள் (Theatrical Moments) இதில் நிறைய உண்டு என்றும், அதிலும் குறிப்பாகப் பெண்கள் தங்களது நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டு ரசிக்கக்கூடிய பல தருணங்கள் இந்த படத்தில் ஒளிந்திருக்கிறது என்றும் அவர் சுவாரசியமாகப் பகிர்ந்து கொண்டார். காதலுக்காக ஒரு சாதாரண மனிதன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பதுதான் இப்படத்தின் ஒன் லைன் (One Line Story) என்று விளக்கிய அவர், காதல் ஒரு புத்திசாலியை முட்டாளாக்கும், அதே நேரத்தில் ஒரு சாதாரணமானவனை மிகப்பெரிய சாதனையாளராக்கும் என்ற தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தான் இப்படத்தின் திரைக்கதை செதுக்கப்பட்டுள்ளது என்றார்.

படத்தின் இசை குறித்துப் பேசிய அசோக் செல்வன், இந்த ஒட்டுமொத்தப் படைப்பும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் ஒரு இசை நிகழ்ச்சி (Concert) போல அற்புதம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்று புகழாரம் சூட்டினார். தமிழ் சினிமாவையே தனது இசையால் உருக வைத்த கோவிந்த் வசந்தாவின் முந்தைய பிளாக்பஸ்டர் திரைப்படமான ’96’ படத்திற்கு இணையாக, இந்த ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களால் காலத்திற்கும் பேசப்படும் என்று அவர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறித் தனது உரையை முடித்துக் கொண்டார்.