புரட்டிப்போடுமா ‘கஜா’ புயல்!

நேற்று அந்தமான் கடல்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல்பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து, மேற்கு, தென்மேற்கு திசையில் 14ம் தேதி இரவு வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரக்கூடும் என நம்பப்படுகிறது.

ஆந்திரா நோக்கி நகரும் போது சென்னை உள்ளிட்ட வடகடலோர தமிழகப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்றும், மணிக்கு 80 முதல் 90 கி.மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் நவம்பர் 12க்குள் கரை திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘கஜா’ என பெயரிடப்பட்ட இந்தப்புயல் நவம்பர் 16ல் கடலூர் – பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் என வானிலை மய்யம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென்தமிழகத்திலும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு என தெரிகிறது.