பொய்? சொன்ன, விஷாலுக்கு தயாரிப்பாளர் நந்தகோபால் கெடு!

விஜய்சேதுபதி,விஷால், விக்ரம் பிரபு ஆகியோருக்கு சம்பள பாக்கி இருப்பதாக, “மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்” படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர், எஸ்.நந்தகோபாலுக்கு நடிகர்கள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டாம் என நடிகர் சங்கம் தடை விதித்தது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், விஷால் நடித்த கத்திசண்டை படத்திற்கு படம் வெளியிடுவதற்கு முன்பே விஷால் அவர்களுக்கு பணம் செட்டில் செய்யப் பட்டு விட்டது.

மேலும் இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தில்லாமல் மொட்டைக் கடுதாசி வந்திருப்பதாக திடுக் தகவலையும் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர் இதுவரை  எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் தனது மனசாட்சிக்குட்பட்டு செயல்பட்டு வருவதாகவும், 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் தயாரிப்பாளர் என்ற முறையில் முழுமையாக வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அறிக்கையை அனுப்பினார்களா? அல்லது ஒரு சிலர் வேண்டுமென்றே அனுப்பியிருக்கிறார்களா? என்ற சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டு பேசினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் திங்கள் கிழமைக்குள்ளாக உரிய முடிவை எடுக்க வேண்டுமெனவும் அவ்வாறு எடுக்கவில்லையெனில், தான் ஒரு முடிவை அறிவிக்க உள்ளாதாகவும் தெரிவித்தார்.

தயாரிப்பாளர்கள் சங்கம் பேசி எடுக்கிற எந்த முடிவுக்கும் தான் தயாராக இருப்பதாக தெரிவித்த நந்தகோபாலிடம்,..திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினுள் மோதல்கள் இருக்கிறதா? என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, அது குறித்து முழுமையான பதில் திங்கள் கிழமை தெரிவிக்கிறேன் என்றார்.

மேலும் இப்பிரச்சனையை தயாரிப்பாளர் சங்கம் பேசி முடிக்காமல் காலம் தாழ்த்தினால்,  ‘Director General, Competition Commission of India’, என்கிற அமைப்பின் மூலம் தீர்வு காண உள்ளதாகவும் தெரிவித்தார்.