ஒரு சில படங்களின் தலைப்பு மட்டுமே கதைக்கு பொருத்தமாக இருக்கும். அந்த வகையில், ‘டியர்’ படத்தில் முதன்மை கதாபாத்திரங்களான, Deepika மற்றும் Arjun கதாபாத்திரங்களின் முதல் இரண்டு எழுத்துக்களை சேர்த்து DeAr என பெயர் வைத்துள்ளனர். இது கதைக்கு வெகு பொருத்தமாக அமைந்துள்ளது சிறப்பு.
‘டியர்’ படத்தினில், ஜி.வி .பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், நந்தினி, ‘தலைவாசல்’ விஜய் , ரோகிணி, இளவரசு, கீதா கைலாசம், ஜெ.கமலேஷ், அப்துல் லீ, மகாலட்சுமி சுதர்சனன் ஆகியோர் டித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, இசை ஜி.வி .பிரகாஷ் குமார், படத்தொகுப்பு ருக்கேஷ், தயாரிப்பு நட்மெக் புரொடக்ஷன்ஸ், வெளியீடு ரோமியோ பிக்சர்ஸ் .
தனியார் தொலைக்காட்சியில், செய்தி வாசிப்பாளராக பணிபுரிகிறார், ஜி.வி. பிரகாஷ் குமார். இந்தத் துறையில் உயரிய இடத்தை பிடிக்க, ஒரு லட்சியத்தோடு இருந்து வருகிறார். சிறிய சத்தம் கேட்டாலே விழித்துக்கொள்ளும் சுபாவம் கொண்டவர், ஜி வி பிரகாஷ் குமார். இவருக்கு நேர் எதிர் சுபாவம் கொண்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதாவது பலத்த ‘குறட்டை’ சத்தத்துடன் ஆழ்ந்து தூங்கும் சுபாவம் கொண்டவர். இவர்கள் இருவருக்கும், பெற்றோர்களின் விருப்பப்படி திருமணம் நடக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் விடும் குறட்டை, ஜிவி பிரகாஷ் குமாரின் தூக்கத்தினை கெடுக்கிறது. அதோடு, ஐஸ்வர்யா ராஜேஷ் விடும் குறட்டை விஷயத்தை மறைத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக கோபம் கொள்கிறார், ஜி வி பிராகாஷ் குமார். தினந்தோறும், ஐஸ்வர்யா ராஜேஷ் விடும் குறட்டையினால் தூக்கத்தை தொலைக்கிறார். தூக்கம் கெட்டதால், தனது வேலையினை சரிவர செய்ய முடியாமல், ஒரு கட்டத்தில் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். கடும் மன உளைச்சலுக்கு பிறகு, விவாகரத்து பெற முடிவு செய்கிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு விருப்பமில்லை. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், டியர் படத்தின் கதை திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
‘குறட்டை’ என்றதுமே நம் நினைவில் வருவது, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குட் நைட்’ படம் தான். இருந்தும், திரைக்கதையின் போக்கு ரசிக்கும்படி இருக்கிறது. இந்தப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்குமே நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ஜி வி பிரகாஷ் குமார் இதுவரை நடித்த படங்களை விட, இந்தப்படத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார். தனது அண்ணன் சாப்பிட டேபிளுக்கு வந்தவுடன் பயந்தபடி பார்ப்பது, அண்ணியின் சிபாரிசுடன், அண்ணனிடம் தனது விருப்பத்தினை வெளிப்படுத்துவது என, பல காட்சிகள். ஹைலைட்டான சிறந்த காட்சி என்றால், ஐஸ்வர்யா ராஜேஷ், கருவை கலைக்க ஆஸ்பத்திரியில் அமர்ந்திருக்கும் நேரத்தில், பதறிப் போய் கருவை கலைக்கவிடாமல் சண்டையிடும் காட்சியை சொல்லலாம். இது போல் பல காட்சிகள்.
ஐஸ்வர்யா ராஜேஷூம் தனது கதாபாத்திரத்தினை உள்வாங்கி சிறப்பாக நடித்து இருக்கிறார். அவரது கதாபாத்திரமே சிறப்பான நடிப்பினை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஜி வி பிரகாஷ விட்டுப்பிரிய மனமில்லாமல், அழுவதும் பின்னர் சூழ்நிலையை புரிந்து கொண்டு தைரியமாக வலம் வருவது. மாமியார் ரோகிணியை அவரது கணவர் தலை வாசல் விஜய்யிடம் சேர்த்து வைப்பது. என, பல காட்சிகளில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். ரொமான்ஸிலும் அசத்துகிறார்.
ஜி வி பிரகாஷின் அண்ணனாக காளி வெங்கட். நல்ல நடிகராக மிளிர்கிறார். இவரைப்போலவே படத்தில் நடித்த ரோகிணி. கீதா கைலாசம், இளவரசு, பிளாக் ஷீப் நந்தினி உள்ளிட்ட அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே மாறிப்போயுள்ளனர்.
ஜி வி பிரகாஷ் குமார் இசையில், பாடல்கள், பின்னணி இசை பெரிதாக குறையில்லை! ஒரு பாடல் பழைய பாடலை நினைவு படுத்துகிறது.
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு சூப்பர்.
பிரச்சனைகளை எதிர்கொண்டு, தவிர்க்க முடியாவற்றை சகித்துக் கொண்டு, அன்பினை பகிர்ந்து வாழ பரிந்துரைக்கிறது, டியர்.
டியர் – குடும்பத்துடன் பார்க்க.