‘எதற்கும் துணிந்தவன்’ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் – சூர்யா

பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’.  இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க  அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா. சத்யராஜ். வினய். சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில்,

‘சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டத்தை விட, படம் மிகச் சிறப்பாக இருக்கும். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு பிறகு – கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான் மேடையேறி இருக்கிறேன். சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில், ‘எங்கள் சூர்யா அண்ணனை வைத்து ஒரு படத்தை இயக்குங்கள்’ என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்தனர். அப்போது, ‘மாஸான கிராமிய பின்னணியிலான குடும்ப சென்டிமென்ட் கலந்த ஸ்கிரிப்ட் ஒன்று தயாராக இருக்கிறது’ என சமூக வலைதளத்தில் பதிலளித்தேன். அப்போது ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தேன். என்னுடைய சமூக வலைதள பதிவை கவனித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார், உடனடியாக சூர்யாவை சந்தித்து, அந்த படைப்பையும் எங்கள் நிறுவனம் சார்பில் உருவாக்குங்கள் என கேட்டுக்கொண்டனர்.

ஒரு நல்ல திரைக்கதை, தனக்கான நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து கொள்ளும் என்பார்கள். அந்த வகையில்தான் சூர்யா முதல் அனைவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைந்தனர். அவர்களும் தங்களது உழைப்பை நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்கள், என்றார்.

நடிகர் சூர்யா பேசுகையில்,

” இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்திக்கிறேன். அதனால் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் இங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஆனால் உக்ரைனில் எதுவுமே அறியாத அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் என பலர் உயிரிழந்திருக்கிறார்கள். எனக்கு கூட்டு பிரார்த்தனை என் மீது நம்பிக்கை இருக்கிறது. இன்னும் அங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அங்குள்ள இந்தியர்களும், இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப வேண்டுமென ஒரு சில நிமிடங்கள் நாம் அனைவரும் கூட்டாக பிரார்த்திப்போம்.

நான் திரையரங்கில் தான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். வெற்றி படமா.. தோல்வி படமா.. நல்ல படமா.. தரமான படமா.. என்பதை திரையரங்குகள் மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன். அதுவும் ரசிகர்கள் மூலமாகவே அதனை சந்தித்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்களையும், குடும்ப ரசிகர்களையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கு பொருத்தமான படமாகத்தான் ‘எதற்கும் துணிந்தவன்’ தயாராகியிருக்கிறது.

இழப்பதற்கு நாம் தயாராக இருந்தால், அடைவதற்கு ஏராளமாக இருக்கிறது. பழைய மூடநம்பிக்கைகளாக இருக்கலாம். பழகிக் கொண்ட வசதிகளாக இருக்கலாம். சௌகரியங்களாக இருக்கலாம். இது போன்றவற்றை இழக்கத் தயாராகி, புது முயற்சியுடன் பயணப்பட்டால் ஏராளமான இலக்குகளை அடையலாம். இழப்பதற்கு நீங்கள் தயாராக இருந்தால் அடைவதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கிறது.

இப்படத்தை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ், நான் 2டி எனும் நிறுவனத்தை தொடங்க காரணமாக இருந்தவர். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் கதை விவரிக்கும் முன்னர் என்னிடம், ‘உங்கள் ரசிகனாக இருந்து இப்படத்தை இயக்கவிருக்கிறேன்’ என சொன்னார். அப்போதுதான் அவருடைய மனதில் எந்த உயரத்தில் நான் இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் தான் சொல்கிறேன், ‘இந்தப் படம் எதற்கும் துணிந்த ரசிகர்களான உங்களுக்குத்தான். உங்களுக்காகத்தான்’. இந்தப்படத்தில் யாரும் பேசாத ஒரு விசயத்தை, பொறுப்புணர்வுடனும் அற்புதமான கதையாக விவரித்திருக்கிறார் இயக்குநர்  பாண்டிராஜ்.

கடந்த 25 ஆண்டு காலமாக என் மீது அன்பு செலுத்தி வரும் ரசிகர்களை கடவுளாக தான் காண்கிறேன். மார்ச் 10ஆம் தேதி முதல் மாற்றத்திற்கு தயாராக இருங்கள்.” என்றார்.