ஹரிப்பிரியா நடிக்கும் “மாஸ்க்” ரசிகர்களுக்கு தீனி போடும் படமாக இருக்கும்!

சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘அருவா சண்ட’ , இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’, படங்களை இயக்கியிருக்கும் ஆதிராஜன் தன்னுடைய ‘கோல்டன் மேஜிக் க்ரியேட்டர்ஸ்’ பட நிறுவனத்தின் மூலம் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “மாஸ்க்”.

சமீபத்தில் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார்  புனித் ராஜ்குமாரின் மைத்துனரும் சிறுவயதிலேயே தேசிய விருது பெற்றவருமான விஜய ராகவேந்திரா இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.  தற்போது சசிகுமாருடன் “காமன் மேன்” படத்தில் நாயகியாக நடித்து வருபவரும், தெலுங்கு கன்னட திரையுலகின் முன்னணி நடிகையுமான ஹரிப்பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். மாஸ்க்கில் நடிப்பிலும், கவர்ச்சியிலும் வேறுவிதமான ஹரிப்ரியாவைப் பார்க்கலாம்.

தென்னிந்திய மொழிப் படங்களில் பிரபலமான மேக்னா நாயுடு ஒரு பாடலுக்கு அசத்தலாக நடனமாடியிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

“மாஸ்க்” படத்தின் கதைக்களம் பற்றி இயக்குநர் ஆதிராஜனிடம் கேட்டபோது,

‘சென்னை பெங்களூர் கோயம்புத்தூர் மதுரை போன்ற இடங்களில் ஒரே மாதிரியாக மர்மமான முறையில் இளம் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். அது கொலையா?!தற்கொலையா?! இல்லை அமானுஷ்ய சக்தியின் ஆட்டமா? என்று முடிவு செய்ய முடியாமல் காவல்துறை தடுமாறுகிறது. தீவிரமாக விசாரிக்கும்போது அதன் பின்னணியில் இருக்கும் காரணம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. பெண்களுக்கு தரப்படும் அதீத சுதந்திரம் அவர்களை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டி விடுகிறது என்ற கருத்தை மையமாக வைத்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கிளைமாக்ஸ் யூகிக்க முடியாத கோணத்தில் நிறைவுறும். இப்படத்தில் ஆறு டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், மைசூர், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. த்ரில்லர் பட ரசிகர்களுக்கு தீனி போடும் படமாக உருவாகியிருக்கிறது “மாஸ்க்” என்றார் ஆதிராஜன்.