விஜயானந்த் உருவானதற்கு மணிரத்னத்தின் திரைப்படங்களே முன்னுதாரணம்!

இந்தியாவின் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான ‘வி .ஆர் .எல்’ எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத்  தழுவி தயாராகியிருக்கும் திரைப்படம், ‘விஜயானந்த்’.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் 9ஆம் தேதி அன்று வெளியாகிறது.

‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில், நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்க, அவருடன் ஸ்ரீலதா பிரகலாத், பரத் போபண்ணா, அனந்த் நாக், வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் தயாரித்திருக்கிறார்.

பன்மொழி இந்திய திரைப்பபடமான ‘விஜயானந்த்’ வெளியீட்டினை முன்னிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், படக்குழுவினர், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

விஜயானந்த்’ படத்தின் இயக்குநர் ரிஷிகா சர்மா, தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர், நடிகர்கள் நிஹால், பரத் போப்பண்ணா, தமிழ் பதிப்பின் வசனம் மற்றும் பாடல்களை எழுதிய மதுரகவி, படத்தொகுப்பாளர் ஹேமந்த், படத்தை வெளியிடும் யூ எஃப் ஓ பிரதிநிதி மனோஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் இயக்குநர் ரிஷிகா சர்மா பேசுகையில்,

‘கன்னட திரை உலகில் தயாராகி இருக்கும் முதல் சுயசரிதை திரைப்படம். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் பணிகள், ஒரு கன்னட திரைப்படமாகத் தான் தொடங்கியது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, படப்பிடிப்பை பார்வையிட்ட திரையுலக பிரபலங்கள், இந்த திரைப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியாகும் பான் இந்திய திரைப்படமாக உருவாக்கலாமே..! என ஆலோசனை வழங்கினர். அதன் பிறகு தயாரிப்பாளரின் சம்மதத்துடன் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படமாக தயாரானது. ‘விஜயானந்த்’ படத்தின் டீசர் வெளியான பிறகு, மும்பையில் உள்ள முன்னணி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இதனை இந்தியில் வெளியிடலாமே..! என்றனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளியான பிறகு பல நாடுகளிலிருந்து இந்தப் படத்தை இங்கும் வெளியிடலாமே..! எனக் கேட்டனர். இதனால் தற்போது ‘விஜயானந்த்’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஊக்கமளிக்கும் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் நிஜ கதாநாயகன் தொழிலதிபர் பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வர் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண பெண்மணியான என்மீது நம்பிக்கை வைத்து, இது போன்ற பிரம்மாண்டமான படைப்பை உருவாக்க வாய்ப்பளித்த வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ஆனந்த்  சங்கேஸ்வருக்கும் நன்றி.

நான் இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகை. அவரது இயக்கத்தில் வெளியான ‘குரு’ திரைப்படத்தை பார்த்த பிறகு தான், சுயசரிதை திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. நான் எந்த திரைப்பட பயிற்சி கல்லூரியிலும் படித்த மாணவி அல்ல. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘குரு’ எனும் திரைப்படத்தின் திரைக்கதையில் நுட்பமாக இணைக்கப்பட்டிருக்கும் பல அடுக்குகளை உணர்ந்து வியந்திருக்கிறேன். மேலும் மணிரத்னம், புட்டண்ணா கனகல் போன்ற இந்திய படைப்பாளிகளிடமிருந்து ஏராளமான விசயங்களை கற்றிருக்கிறேன். இந்தத் திரைப்படம் உருவானதற்கு மணிரத்னத்தின் திரைப்படங்களே முன்னுதாரணம். இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இந்த இரண்டாவது திரைப்படத்தை, சுயசரிதை போன்ற சவால் மிக்க படைப்பாக இயக்கியிருப்பதை ஆசீர்வாதமாக கருதுகிறேன். இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கு ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், தமிழ் பதிப்பின் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியர் மதுரகவி உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினருக்கும், நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்கு தலைமுறையைச் சேர்ந்த குடும்ப  உறுப்பினர்களுக்கு இடையேயான உணர்வுகளை விவரிக்கும் திரைப்படமாக இந்த ‘விஜயானந்த்’ உருவாகி இருக்கிறது. குடும்பத்தை வழி நடத்திச் செல்லும் மூத்த உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இடையேயான பாச பிணப்பை மையப்படுத்தி இருந்தாலும், பிள்ளைகளின் எதிர்கால கனவுகளுக்கும், அவர்களின் எதிர்கால கனவுத்திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விவரித்திருக்கிறோம். இந்தத் திரைப்படம் இளைய தலைமுறையினரிடத்தில் எதிர்காலம் குறித்த கனவை காண வேண்டியதன் அவசியத்தைக் கற்றுத் தருகிறது.

1976 ஆம் ஆண்டின் ஒரேயொரு வாகனத்துடன் தொடங்கிய இவரது கனவு, இன்று இந்தியா முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களுடனும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வாகனங்களுடனும் வளர்ச்சி அடைந்து, அவரை சாதனை நாயகனாக்கியிருக்கிறது. அவரது கனவு நனவாகி இருக்கிறது. இது தொடர்பாக அவரிடம் இந்த துறையை தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? என கேட்டபோது, ‘இது எனக்கு ஏற்றது என எண்ணினேன். உடனடியாக தொடங்கினேன்’ என பதிலளித்தார். இது எனக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது. இதனை பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினேன்.

‘விஜயானந்த் ரோட் லைன்ஸ்’ என்ற அவரது நிறுவனத்தின் பெயரில் இருக்கும் ‘விஜயானந்த்’தை இப்படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறேன். ‘விஜய்’ என்றால் ‘வெற்றி’, ‘ஆனந்தம் என்றால் சந்தோஷம்’. படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு மனதளவில் உத்வேகத்தையும், ஊக்கத்தையும் இந்த திரைப்படம் வழங்கும் என உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.

 

.