‘இந்தியா பாகிஸ்தான்’ பட இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில், கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரித்திருக்கும் படம் ‘இங்க நான் தான் கிங்கு’. இதில் நாயகியாக பிரியாலயா நடித்திருக்கிறார். மேலும், தம்பிராமையா, பாலசரவணன், மாறன், சேசு, கூல் சுரேஷ், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார். ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைத்துள்ளார். எம்.தியாகராஜன் படத்தொகுப்பு செய்ய, இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் பாடல்கள் எழுதியுள்ளனர். எம்.சக்தி கலை இயக்குநராக பணியாற்ற, மிராக்கிள் மைக்கள் சண்டைக்காட்சிகளையும், கல்யாண் மற்றும் பாபா பாஸ்கர் நடனக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர்.
வரும் மே 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டு படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
படம் பற்றி நடிகர் சந்தானம் கூறுகையில்,
“’இங்க நான் தான் கிங்கு’ படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை. அவரிடம் நானே காசு கேட்டுதான் போனேன், என்னை அவருக்கு பிடித்தது, வீடு வாங்க காசு கேட்டு போனேன், ஆனால் அப்படி செய்யாதீர்கள், படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார். அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். என்னுடன் எப்போதும் ஜாலியாக பேசுவார். அவர் என்னிடம் இந்தப்படம் செய்யலாம் என்றார், எனக்கும் பிடித்திருந்தது என்றவுடன் உடனே செய்யலாம் என்றார். அவருடன் இணைந்து படம் செய்தது சந்தோஷம். படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக இப்படத்தை எடுத்துள்ளார். சுஷ்மிதா என் படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார், வாழ்த்துகள். இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார், நன்றி. இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார். தம்பி ராமையா சார் மாதிரி இண்டலிஜண்ட் பார்க்க முடியாது, அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் இப்படத்தில் அருமையான பாத்திரம் செய்துள்ளார். ஹீரோயின் லயா நம்ம சேலத்துப் பெண், அவரை பாலிவுட் என நினைத்தேன் நன்றாக நடித்துள்ளார். என் படத்தில் எப்போதும் இருக்கும் மாறன், சேஷு, கூல் சுரேஷ், மனோபாலா என நிறைய பேர் இதிலும் இருக்கிறார்கள். ‘கட்டா குஸ்தி’ படம் ஹிட் தந்துவிட்டு இப்படத்தில் வந்து எங்களுக்காக உழைத்து தந்த செல்லா அய்யாவு சாருக்கு நன்றிகள். 90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் அன்புசெழியன் பேசுகையில்,
“சந்தானம் சாரை வைத்து ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். கொஞ்ச காலம் தயாரிப்பில் இல்லை. இந்தக்கதை வந்த போது சந்தானம் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார். என்னுடைய பார்ட்னராக சரிகமா ஆனந்த் இணைந்துள்ளார், அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார், நாயகி லயா, கூல் சுரேஷ் எல்லோருக்கும் வாழ்த்துகள். இமான் சார் அருமையான பாடல்கள் தந்துள்ளார். சந்தானம் சார் இந்தப்படத்திற்காக ஸ்பெஷலாக உழைத்து தந்தார், நன்றி. செல்லா இந்தப்படத்திற்காக எனக்காக வந்து உழைத்து தந்தார் அவருக்கு என் நன்றிகள். அவருடன் படம் செய்ய பேசிக்கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து இன்னும் நிறைய படம் செய்யவுள்ளேன், உங்கள் ஆதரவைத் தாருங்கள். முதன் முதலாக தனது எக்ஸ் தளத்தில் இப்படத்தைப் பற்றி பதிவிட்டு எங்களுக்கு ஆதரவு தந்த உலக நாயகன் கமலஹாசன் சாருக்கு நன்றி. என் மகள் சுஷ்மிதா இப்படம் மூலம் திரைத்துறைக்கு வந்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள். படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.” என்றார்.
இயக்குநர் ஆனந்த் நாராயண் பேசுகையில்,
“இதுவரையிலும் படத்திற்கு ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அன்பு சார் கதை கேட்கிறார் என்றதும் அவரை நெருங்க முயற்சித்தேன். செந்தில் சார் மூலம் தான் அவரை சந்தித்தேன். ஒரு படம் செய்வதாக கதை சொன்னார்கள், உடனே ஒப்புக்கொண்டேன். எனக்காக முழு டீமையே கொடுத்தார்கள். படம் டாக்கி போர்ஷன் முடித்தவுடன் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். சந்தானம் சாரை ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்திற்காக சந்தித்துள்ளேன், அவருக்கு நான் ரசிகன். இப்போது அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதல் நாளே என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். ஷூட்டிங்கில் செட்டிலேயே இருந்து என்னுடன் விவாதிப்பார். அவர் டீமுக்கு முக்கியமாக நன்றி. இமான் சார் மியூசிக் அட்டகாசமாக வந்துள்ளது. சந்தானம் சார் எமோஷன் காட்சி ஒன்று இருக்கிறது, அதில் சந்தானம் சாரா இசையா என போட்டியே இருக்கும். சந்தானம் சாருக்கு இணையாக புதுமுகம் லயா சூப்பராக நடித்துள்ளார். தம்பி ராமையா சார் அருமையாக நடித்துள்ளார். எல்லோருடைய பெஸ்ட் இந்தப்படத்தில் தந்துள்ளனர் அனைவருக்கும் என் நன்றிகள். தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடும் படமாக இது இருக்கும், அதற்கு ரைட்டருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மே 10 படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.
நடிகை பிரியா லயா பேசுகையில்,
“இந்த நாள் எனக்கு மிக முக்கியமான நாள். என் முதல் பட மேடை, கடவுளுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி. என் தயாரிப்பாளர் அன்பு சார், சுஷ்மிதா மேடம் இருவருக்கும் நன்றி. எப்போதும் ஆதரவாக என்னை விசாரித்து பார்த்துக்கொண்டார்கள். கோபுரம் பிலிம்ஸில் என் முதல் படம் செய்ததை பெருமையாக நினைக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த சந்தானம் சார், அவருடன் பழகிய யாருக்கும் அவரை பிடிக்காமல் போகாது. அவ்வளவு எளிமையானவர். முதலில் செட்டில் என்னுடன் இங்கிலீஷில் பேசினார். அவருக்கு நான் தமிழ் என்பது தெரியாது, நான் சொன்ன பிறகு ஜாலியாக பேசினார் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. கேப்டன் கூல் ஆனந்த் சார் ஜாலியாக பேசி வேலை வாங்கி விடுவார். தம்பி ராமையா சாரின் எனர்ஜி பிரமிப்பாக இருக்கும். அவர் தமிழுக்கு ரசிகை நான். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். மியூசிக் தான் படத்தின் ஆன்மா. இமான் சாருக்கு என் நன்றிகள். படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.
எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் பேசுகையில்,
“கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த முதல் படமான ‘வெள்ளக்கார துரை’ எழுத்தாளரும் நான் தான். 10 வருடம் கழித்து அடுத்த வெற்றிப்படமான ‘இங்க நான் தான் கிங்கு’ படத்திற்கு எழுதியுள்ளேன். அன்புசெழியன் சாரிடம் கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது, உடனே எல்லாம் ஆரம்பித்துவிட்டது. என்னுடன் இக்கதைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள் இந்த காலத்தில் ஒரு படத்திற்கு உயிர் கொடுக்கும் தயாரிப்பாளர் இன்னொரு கடவுள். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் மற்றும் சுஷ்மிதா அன்புசெழியன் இருவருக்கும் என் நன்றிகள். அடுத்ததாக இப்படம் முழுமை பெற மிகமுக்கிய காரணமான, எனக்கு வழிகாட்டியாக இருந்த சந்தானம் சாருக்கு நன்றி. என் இயக்குநர் ஆனந்த் சார், எங்களுக்குள் எப்போதும் ஊடல்கள் இருக்கும். என் கதையை முழுமையான சினிமாவாக மாற்றியுள்ள அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார் அருமையாக வேலை பார்த்துள்ளார் அவருக்கும் என் நன்றிகள். பாடலில் பட்டையை கிளப்பியுள்ள இமான் சாருக்கு என் நன்றிகள். அழகான தமிழ் பேசும் ஹீரோயினுக்கு வாழ்த்துகள். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட்டாகும். படத்தின் நிறை குறைகளை கூறி ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி.” என்றார்.
இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில்,
“கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த ‘வெள்ளக்கார துரை’ படத்தில், நான் அஸிஸ்டெண்ட். தயாரிப்பாளர் அன்பு சார் சினிமாவை எவ்வளவு நேசிப்பார் என்பது தெரியும். ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப்பற்றி நிறைய பேசுவார். திரைத்துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்பு மிக அதிகம் என்பதை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். கொஞ்ச காலத்திற்கு பிறகு இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார் வருடத்திற்கு நாலைந்து படங்கள் செய்ய வேண்டும். இந்தப்படம் நான் பார்த்துவிட்டேன். சந்தானம் சார் ரசிகன் நான். இந்தப்படத்தில் எல்லோரும் சிரித்து கொண்டே இருக்கலாம். அவருடன் இணைந்து விரைவில் படம் செய்வேன். படம் வெற்றிபெற வாழ்த்துகள்.” என்றார்.